செவ்வாய், 7 ஏப்ரல், 2020

பங்குச்சந்தை வீழ்ச்சி ..அச்சத்தில் அல்ல அடிப்படையே தகர்ந்து போயுள்ளதால்

Karthikeyan Fastura : இந்திய பங்குச்சந்தை மட்டுமல்ல உலக பங்குச்சந்தைகள் அனைத்தும் 30
சதவீதத்திற்கும் மேலாக வீழ்ந்து இன்று அதிலிருந்து இன்னும் மோசமாக வீழாமல் இருக்க போராடி வருகின்றன.
ஆனால் இதை ரெம்ப நாள் பிடித்து வைக்க முடியாது. இதுவரை வீழ்ந்ததெல்லாம் அச்சத்தில் விழுந்தவை. இனிமேல் விழப்போவதெல்லாம் அச்சத்தில் அல்ல அடிப்படையே தகர்ந்து போயுள்ளதால் விழ இருப்பவை
துரதிஷ்டவசமாக இன்றைய ஆட்சியாளர்கள் பொருளாதார கட்டமைப்பை உணர்ந்தவர்களாக இல்லை. அகந்தையும் வீண்பிடிவாதமும் கொண்டவர்களாகவே உள்ளனர். இதில் சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து யாரும் விதிவிலக்கல்ல. கடந்த 12 ஆண்டுகளாக இயல்பான கரெக்சன் கூட நடக்காமல் மார்க்கெட் சரிவை காணாமல் போனதால் கிடைத்த தெம்பாக கூட இருக்கலாம். அல்லது தங்களது அணியில் உண்மையை உரைக்கும் பொருளாதார நிபுணர்களை வைத்துக்கொள்ளாமல் போனதால் இருக்கலாம்.
ஆனால் பொருளாதார நிபுணர்கள் கடந்த மூன்று வருடங்களாக கத்திக்கொண்டே இருந்தார்கள். சந்தை இப்படி இயல்புக்கு மாறாக நடக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் மிகப் பெரிய சரிவை எட்டவேண்டும் என்று. இன்று கொரோனா எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கிறது

உலகத்தின் பொருள் உற்பத்தி முடங்கியுள்ளது. சேவை முடங்கியுள்ளது. போக்குவரத்து முடங்கியுள்ளது. விற்பனை முடங்கியுள்ளது. இது ஒவ்வொன்றும் பொருளாதாரத்தின் வெவ்வேறு அடிப்படை உறுப்புகள் இதயம், நுரையீரல், ரத்தகுழாய்கள் போல. சிம்பிளாக சொல்வதென்றால் இவை அனைத்தும் கிட்டத்தட்ட செயலிழந்து போயுள்ளது. அரசாங்கத்தின் கவனம் முழுக்க கொரோனவின் பின்னுள்ளது. ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் தன்னையும் தன் குழந்தையையும் அழிக்கவரும் ஒரு கொடூரமிருகத்திடம் இருந்து தப்பிக்க ஒளிந்துகொள்வான். அப்படி ஒளியும்போது அச்சத்தின் உச்சியில் தன் குழந்தையின் வாயையும் மூக்கையும் சேர்த்து பொத்திக்கொள்வான். மிருகம் சென்றுவிடும். சென்ற பிறகு தன் குழந்தையை பார்த்தால் அது இறந்திருக்கும். இவன் அந்தளவிற்கு பொத்தி குழந்தையை காக்கிறானாம்.
இப்போது அப்படிதான் நடக்கிறது. கொரோனாவில் ஏற்படும் இறப்பை விட பசியினால், வேலைவாய்ப்பின்மையால், தனிமைப் படுத்தப்பட்டதால், சரியான கவனிப்பின்மையால், தொழில்களின் தோல்வியால், பொருளாதார நெருக்கடியால், ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் உலகெங்கும் பல லட்சங்களை தாண்டி இருக்கும். இது எப்போது தெரியுமென்றால் இந்த கால கட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கையில் சராசரி உயிரிழப்பையும் + கொரோனா உயிரிழப்பையும் கழித்துவிட்டு பார்க்கும்போது கிடைக்கும்.
இந்த காலாண்டு மைனஸில் சென்றுவிட்டது. அடுத்த காலாண்டும் மைனஸில் தான் இருக்கும். பொதுவாக இரண்டு காலாண்டு மார்க்கெட் சரிந்தாலே Recessionகான அறிகுறி என்பார்கள். ( இந்தியா கடந்த நான்கு காலாண்டுகளாக ஜிடிபி இறங்கி கொண்டே வந்திருக்கிறது. கூட இப்போது இதுவும் சேர்ந்துகொண்டதால் இன்னும் மோசமாக இருக்கும்). இப்போது ஏற்பட்டிருப்பது பொருளாதார சரிவு அல்ல முற்றிலுமான முடக்கம். நம் உடலில் வெட்டுக்காயம் ஏற்படும்போது அதன் வலி அந்த நேரத்தில் தெரியாது அட்ரினலின் சுரந்து அதை மறைத்திருக்கும். கொஞ்சநேரம் கழித்து தான் தெரியும் உயிர்போகும் வலி என்பது
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தால் ஏற்கனவே பெரும் பொருளாதார நெருக்கடியில் சமூக நெருக்கடியில் இருக்கும் மக்கள் வீதிக்கு வந்து போராடினால் இன்னும் நிலைமை மிகவும் மோசமாகும். இந்த டொமினோ காயின்கள் அடுத்தடுத்து சரியும் போது அது எமெர்ஜென்சி கொண்டுவந்தாலும் ஆச்சர்யமில்லை அல்லது ஆட்சி கவிழ்ந்தாலும் ஆச்சர்யமில்லை

கருத்துகள் இல்லை: