வியாழன், 19 ஜூன், 2014

சு.ப. வீ : பணம் பதவியை நோக்கி குழந்தைகளை துரத்தும் பெற்றோர் ! பாவம் இந்த காலத்து குழந்தைகள் !

சுப வீரபாண்டியன் பாடப் புத்தகங்களில் அறிவை வளர்க்க முற்பட்ட நாம், மனிதநேய உணர்வை வளர்க்க ஏன் மறந்தோம்? அயல்மண்ணின் அருமை பெருமைகளையெல்லாம் எடுத்துச் சொன்ன நாம், சொந்த மண்ணின் துயரங்களையும், பெருமைகளையும் ஏன் சொல்ல மறந்தோம்? பணம், பதவி, வெற்றி என்பவைகளை நோக்கியே நம் குழந்தைகளைத் துரத்தும் நாம் குற்றவாளிகள் இல்லையா? ஏறு, ஏறு, மேலே ஏறு என்று பிள்ளைகளை விரட்டிக் கொண்டே இருந்த நாம், அவர்கள் மேலேறிய பிறகு பெற்றோரை, உறவினர்களை மறந்துவிட்டார்களே என்று ஆதங்கப்படுவதில் என்ன நியாயம் உள்ளது? குழந்தைகளுக்காக ஏராளமாக எழுதிக் குவித்துவிட்டு, தன் 90ஆவது வயதில், அண்மையில் இறந்துபோன, புகழ்பெற்ற எழுத்தாளர் வாண்டுமாமா, "இந்தக் காலக் குழந்தைகள் பாவம் என்று சொல்லத் தோன்றுகிறது. இவர்களுக்கென்று எழுத யாருமே இல்லையே. நவீன சாதனங்களின் வளர்ச்சி வரவேற்கக் கூடியதுதான். எனினும், அவைதான் வாழ்க்கை என்றால், அது என்ன வாழ்க்கை? உங்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். படிக்கச் சொல்லுங்கள். கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுங்கள்" என்று தன் கடைசிச் செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.
அறிந்தும் அறியாமலும் - 8 : ஒன்று தமிழ்... இன்னொன்று வாழ்க்கை! அன்பை மேம்படுத்தவும், உறவுப் பாலங்களை வலுப்படுத்தவும் எந்தப் பள்ளிக் கூடத்தில் இன்று கதைகளும், பாட்டுகளும் சொல்லப்படுகின்றன? கேட்டால், அன்பு சோறு போடுமா, அன்பு வேலை வாங்கித் தருமா என்பன போன்ற கொச்சையான வினாக்கள் நம்மிடம் உள்ளன. முன்பெல்லாம், பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்புகள் வரையில் நன்னெறி வகுப்பு ((Moral Class) என ஒன்று இருந்தது. வகுப்புக்கும், மருந்துக்கும் கூட நீதி தேவையில்லை என்று விட்டுவிட்டோமே? அந்த வகுப்புகளில் சின்னஞ்சிறு கதைகளும், நெஞ்சைத் தொடும் பாடல்களும் சொல்லிக் கொடுக்கப்படும். அவற்றைக் கேட்டு, அத்தனை பேரும் ‘மகாத்மாக்கள்' ஆகிவிட்டனர் என்று சொல்ல வரவில்லை. அவற்றைக் கேட்ட நூறு பேரில் ஒருவருக்கேனும அந்தக் கருத்துகள் மூளையில் படிந்திருக்காதா? அந்த நூற்றில் ஒருவனால் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படாதா? இப்போதும் கூட எல்லாம் கைவிட்டுப் போய்விடவில்லை. இந்தத் தலைமுறைக் குழந்தைகளையாவது ‘அறம்' நோக்கித் திருப்புவோம். வீடுகளிலும், தொடக்கப் பள்ளிகளிலும் தமிழ்ப் பாடல்களும், கதைகளும் ஒலிக்கட்டும். அறிந்தும் அறியாமலும் - 8 : ஒன்று தமிழ்... இன்னொன்று வாழ்க்கை! ‘Ringa ringa Roses' ‘ Rain rain go away' போன்ற நம் மண்ணுக்கும், மரபுக்கும் பொருந்தாத பிறமொழிப் பாடல்களையெல்லாம் உடனடியாக நாட்டை விட்டு விரட்டிவிட வேண்டும் என்பது நடைமுறையில் நடக்கக் கூடியதன்று. அவற்றோடு சேர்ந்தாவது ஆத்திச் சூடியும், கொன்றைவேந்தனும் ஒலிக்கக் கூடாதா என்று ஏங்கும் அவல நிலையில்தான் நாம் உள்ளோம். திருக்குறள், சங்க இலக்கியம் போன்ற நூல்களை எல்லாம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, தமிழ்நாட்டில் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட ஏழு நீதி நூல்களை மீண்டும் கண்டெடுத்துக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்திற்கு நாம் வந்துவிட்டோம். அந்த ஏழு நூல்களில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நான்கு நூல்களை ஔவையார் எழுதியுள்ளார். உலகநாதர் எழுதியுள்ள ‘உலகநீதி', அதிவீரராம பாண்டியரின் ‘வெற்றி வேற்கை', சிவப்பிரகாச அடிகளாரின் ‘நன்னெறி' ஆகிய மூன்று நூல்களையும் சேர்த்து மொத்தம் ஏழு நூல்கள். ‘இளந்தமிழ் நூல்கள் ஏழு' என்பார் பேராசிரியர் வ.சுப. மாணிக்கனார். அறிந்தும் அறியாமலும் - 8 : ஒன்று தமிழ்... இன்னொன்று வாழ்க்கை! இவ்வேழு நூல்களும், நம் பிள்ளைகளுக்கு இரண்டினைக் கற்றுக் கொடுக்கின்றன. ஒன்று, தமிழ். இன்னொன்று, வாழ்க்கை! தமிழறியாத் தமிழர்கள் தென் ஆப்பிரிக்காவிலும், மொரிஷியஸ் போன்ற தீவுகளிலும் உண்டென்று கவலைப்பட்ட காலம் போய், இன்று அத்தகைய தமிழர்களை நாம் தமிழ்நாட்டிலேயே பார்க்க முடிகிறது. தமிழை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும், தமிழிலேயே ஏன் பேச வேண்டும், தமிழில் ஏன் பெயர் சூட்ட வேண்டும் என்றெல்லாம் நம் பிள்ளைகள் நம்மிடம் கேட்கின்றனர். தமிழ் என்பது நம் அடையாளம். நமக்கு ஆயிரம் அடையாளங்கள் இருந்தாலும், மொழியே நம் முதல் அடையாளம். 50 ஆண்டுகள் அந்நிய மண்ணில் வாழ்ந்தாலும், அந்த நாடும், மக்களும் நம்மை அந்நியனாகத்தான் பார்ப்பார்கள். ஆங்கிலேயர்களுக்கு இணையாய் ஆங்கிலம் பேசினாலும், சீனர்களுக்கு இணையாய்ச் சீனம் பேசினாலும், நாம் ஆங்கிலேயர்களாகவோ, சீனர்களாகவோ ஆகிவிட முடியாது. அவர்களும் நம்மை அப்படி ஏற்றுக்கொண்டுவிட மாட்டார்கள். தமிழர் என்பதே நம் அடையாளம்! இன்று நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தமிழில் கையொப்பம் இடுவதில்லை, பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதில்லை. நவீனத்தை நோக்கி நகர வேண்டாமா, பழைமையிலேயே ஊறிக்கிடப்பதா என்று இளைஞர்கள் கேட்கின்றனர். சமற்கிருதப் பெயர்கள் ஒன்றும் புதுமையானவை அல்ல. அந்த மொழியும், தமிழைப் போலப் பழைமையானதுதான். அந்த மொழி யாருக்குத் தாய்மொழியோ, அவர்கள் அம்மொழியில் பெயர்சூட்டிக் கொள்ளட்டும். தமிழர்களே தமிழில் கையொப்பம் இடவில்லை என்றால், வேறு யார் தமிழில் கையொப்பம் இடுவார்கள்? தமிழர்களே தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டவில்லையென்றால், ஜப்பானியர்களா தமிழ்ப் பெயர் சூட்டுவார்கள்? நம் மொழியை நாம் மறப்பது, நம் முகத்தை நாமே சிதைத்துக் கொள்வது போலத்தான்! இதற்கெல்லாம், ‘மொழி வெறி' என்றும், ‘குறுகிய மனப்பான்மை' என்றும், ‘பழைமை வாதம்' என்றும் இலவசப் பட்டம் வழங்கும் இளைஞர்களின் ஒரு பகுதியினரை நோக்கி நாம் உரத்துச் சொல்ல வேண்டிய சில செய்திகள் உள்ளன. தன் தாயை நேசிப்பது ‘தாய்வெறி' அன்று. தன் தாயிடம் அன்பு காட்டுவதால், பிற தாய்களையெல்லாம் வெறுக்கிறோம் என்றும் பொருள் இல்லை. இது தாய்க்கும் பொருந்தும், தாய்மொழிக்கும் பொருந்தும். நாம் எந்த மொழியையும் வெறுக்கவில்லை. மொழியில் உயர்வு, தாழ்வை நாம் கற்பிக்கவில்லை. அவரவர் தாய்மொழி, அவரவர்க்கு உயர்வான ஒன்றே! ஆதலால், தாய் மொழி பேணுதல் அனைவர்க்கும் அழகு. பிறமொழிகளைக் கற்றுக் கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை. பிறமொழி கற்றல் இன்றைய தேவையும் கூட. நம் தேவைக்கும், திறமைக்கும் ஏற்ப, எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், தாய்மொழிக்கு மாற்றாக இல்லை என்பதில் மட்டும் உறுதி வேண்டும். தாய்மொழி அடித்தளம். பிறமொழிகள் அனைத்தும் மேற்கட்டுமானங்கள். அடித்தளம் சரியில்லாத கட்டிடம் ஆடிப்போகும். தாய்மொழி கண். பிறமொழிகள் அனைத்தும் கண்ணாடிகள். கண் உள்ளவர்க்கு மட்டுமே கண்ணாடிகள் பயன்படும். பிற மொழிகளின் மீது நமக்கு வெறுப்போ, பகையோ இல்லை. எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள். தாய்மொழியின் மீது பற்றுக் கொள்ளுங்கள் என்பதே நம் வேண்டுகோள். சமற்கிருதத்தையும், இந்தியையும் பகைக்கவில்லையா, இந்தி எதிர்ப்புப் போராட்டமே நடத்தவில்லையா என்று நீங்கள் கேட்கக் கூடும். உண்மைதான், அவை எந்த ஒரு மொழியையும் எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள் இல்லை. நம் மொழியின் மீது அம்மொழிகள் ஆதிக்கம் செலுத்த முயன்றபோது, அதனை எதிர்கொண்ட எழுச்சிப் போராட்டங்கள் அவை. இன்றைய தினம் நாம் ஆங்கில அடிமைகளாகவும் ஆகிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையும் எதிர்க்கப்பட வேண்டியதே! சில வாரங்களுக்கு முன் இத் தொடரில், ‘தூரதர்ஷன்' என்னும் சமற்கிருதப் பெயருடன் 1976இல் தமிழ்நாட்டிற்குத் தொலைக்காட்சி வந்தது என நான் எழுதியிருந்தேன். சமற்கிருதப் பெயரை மட்டும் குறிக்கின்றீர்களே, ‘சன் டி.வி' என்னும் ஆங்கிலப் பெயர் உங்களை உறுத்தவில்லையா என்று ஒரு நண்பர் கேட்டுள்ளார். நியாயமான கேள்விதான். நான் அந்தப் பெயரையும் சேர்த்துத்தான் குறித்திருக்க வேண்டும். அது என் பிழையே. தாய்மொழியைத் தவிர்த்துவிட்டுச் சூட்டப்படும் பிறமொழிப் பெயர்கள் அனைத்தும் நம் எதிர்ப்புக்கும், கண்டனத்திற்கும் உரியவையே. என்றாலும் சமற்கிருதம், ஆங்கிலம் என்னும் இரு மொழிகளையும் ஒரே தட்டில் வைத்து என்னால் பார்க்க இயலவில்லை. இரண்டிற்குமிடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. இம் மொழிச்சிக்கல் குறித்தும், நம் நாட்டின் மொழி சார்ந்த அரசியல் குறித்தும் விரிவாகவே இத்தொடரின் பின் பகுதியில் நான் எழுதவிருக்கிறேன். இப்போது, ஆத்திசூடி முதலான ஏழு நீதி நூல்கள், தமிழையும், வாழ்க்கையையும் ஒருசேர நம் பிள்ளைகளுக்கு எப்படிக் கற்றுத் தருகின்றன என்று பார்க்கலாம். அறம் செய விரும்பு, ஆறுவது சினம் என்று தொடங்கும் ஆத்திசூடி, அகர வரிசையில் அமைந்திருப்பதை நாம் அறிவோம். பாட்டு நயத்தோடு சேர்த்து, இளம் பிஞ்சுகளுக்கு, அ, ஆ, இ... என்னும் அகரவரிசையையும் சொல்லித்தரும் பாங்கு இது. ஆத்திசூடியில் உள்ள அனைத்து அறிவுரைகளும் இரண்டிரண்டு சொற்களால் ஆனவை. குழந்தைகள் முதலில் ஒலிகளைக் கற்றுக் கொள்கின்றன. பிறகு ஒற்றைச் சொற்களை (Mono sylable)ப் பேசக் கற்கின்றன. ஆத்திசூடி அவர்களுக்கு இரட்டைச் சொற்களை (Bi sylables)க் கற்றுக் கொடுக்கிறது. ஆத்திசூடி, திருக்குறளை விடச் சுருக்கமானது. இரண்டே சொற்களில் வாழ்க்கை நெறிகளைச் சுருக்கி வைத்துள்ளது-. அடுத்து, கொன்றை வேந்தனுக்குப் போனால், அங்கு நான்கு நான்கு சொற்களில் செய்திகள் கூறப்பட்டுள்ளன. அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று...... இப்படி அங்கும் அகர வரிசையில் கருத்துகள் அமைக்கப்பட்டுள்ளன. வெற்றி வேற்கை, அகர வரிசையில் அமைக்கப்படாத, நான்கு சொற்களைக் கொண்டுள்ள ஒரு வரிச் செய்திகள். மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகியன வெண்பாக்களிலும், உலகநீதி எண்சீர் விருத்தத்திலும் அமைந்துள்ளன. படிப்படியாகத் தமிழின் எழுத்து, சொல், யாப்பு, அணிகளைச் சொல்லிக் கொடுக்கின்றன இவ்வேழு நூல்களும்! (வியாழன்தோறும் சந்திப்போம்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: