புதன், 18 ஜூன், 2014

மும்பை கேம்பா கோலா கட்டிட இடிப்பு விடியோவில் பதிவு !


கேம்ப கோலா கட்டிடத்தை இடிக்கும் போது, அந்த காட்சியை வீடியோ கேமராவில் பதிவு செய்வோம் என்று மும்பை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் மோகன் அட்டானி தெரிவித்து உள்ளார். கேம்ப கோலா கட்டிடம் தகர்ப்பு சர்ச்சைக்குரிய கேம்ப கோலா கட்டிடத்தை நாளை மறுதினம் (20–ந் தேதி) இடித்து தள்ள மாநகராட்சி திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில், அக்கட்டிடத்தை இடிக்கும்போது குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த காட்சிகளை வீடியோ கேமராவில் படம் பிடிப்போம் என்றும், குடியிருப்பாளர்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும்போது, அந்த வீடியோ காட்சிகள் தங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் மும்பை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் மோகன் அட்டானி தெரிவித்து உள்ளார். மாநகராட்சி கூடுதல் கமிஷனர் பேட்டி


இது தொடர்பாக அவர் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கேம்ப கோலா கட்டிடத்தை இன்று (நேற்று) தான் இடித்து தள்ள திட்டமிட்டு இருந்தோம். இருப்பினும், அந்த கட்டிடத்தில் வாழும் 2 பேர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் தற்போது எங்கள் பணியை தள்ளிவைத்து உள்ளோம். வருகிற 20–ந் தேதி முதல் கேம்ப கோலா கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கும்.

அப்போது, கேம்ப கோலா குடியிருப்புவாசிகள் எங்களை பணி செய்ய விடாமல் தடுத்தால், அதனை வீடியோ கேமிராவில் பதிவு செய்வோம். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, குடியிருப்பாளர்களுக்கு எதிராக அந்த வீடியோ காட்சி பதிவுகளை தாக்கல் செய்வோம்.

மின்சாரம்–குடிநீர் ரத்து

கேம்ப கோலா கட்டிடத்தை 2 கட்டமாக இடிக்க திட்டமிட்டு இருக்கிறோம். முதற்கட்டமாக, குடியிருப்புவாசிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வரும் மின்சாரம், குடிநீர் மற்றும் கியாஸ் ஆகியவை நிறுத்தப்படும். அதன்பின், 2–வது கட்டமாக உட்புற சுவர்கள் இடித்து தள்ளப்படும். இதையடுத்து பால்கனியை இடிப்போம்.

இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் மோகன் அட்டானி தெரிவித்தார்.

2 பேர் மரணம்

கேம்ப கோலா கட்டிடத்தில் முதல் முதலில் குடியேறிய வினோத் கோதாரி (வயது 82) என்பவர் கடந்த 15–ந் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரை தொடர்ந்து, இந்த கட்டிடத்தில் வசித்து வந்த 83 வயது பாகிஸ்தான் நாட்டு அகதி சக்ரவர்த்தி சாவ்லா சிறுநீரக கோளாறு காரணமாக மரணம் அடைந்தார்.

இந்த 2 பேரது இறுதி சடங்கும் முடிவடைந்த பின்னர் தான், கேம்ப கோலா கட்டிடத்தை இடிப்பதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது. dailythanthi.com

கருத்துகள் இல்லை: