புதன், 18 ஜூன், 2014

வீரப்பன் மனைவி: தமிழர்களின் சுதந்திரத்தை பறிக்கும் கர்நாடக வனத்துறை

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடந்தது. வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தலைமையில் பொது மக்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில்,  ‘’தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் உள்ள பொது வழிப்பாதையை பொதுமக்கள் கடந்த 50 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். தப்போது 2 பேர் இந்த பாதை தங்களுக்கு சொந்தமானது என்று கூறி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அந்த பாதை வழியாக செல்ல அவர்கள் அனுமதிப்பதில்லை.
இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தோம். இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் எச்சரித்தனர். மீண்டும் அவர்கள் 2 பேரும் அந்த பாதையை ஆக்கிரமித்துக் கொண்டு பொதுமக்களை மிரட்டுகின்றனர். அந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்த கலெக்டர் அனுமதிக்க வேண்டும், அந்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.
மனுக் கொடுத்துவிட்டு வந்த வீரப்பனின் மனைவி செய்தியாளர்களிடம், ’’எனது கணவர் வாழ்ந்த காலத்தில் தான் வன விலங்குகள் காட்டில் பாதுகாப்பாக இருந்தன. மரங்களும் வெட்டப்படாமல் இருந்தன. அவரது மறைவிற்கு பிறகு சமூக விரோதிகளாலும் அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளாலும் சந்தனமரங்கள் மற்றும் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. மரங்களை வெட்டி கடத்துபவர்களை மினி வீரப்பன் என்று குறிப்பிடுகிறார்கள்.
ஆந்திர செம்மரக்கடத்தல் சம்பவத்தின் போது அந்த மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் வீரப்பன் ஆட்கள் தான் செம்மரத்தை வெட்டி கடத்துகின்றனர் என்று கூறி இருந்தார். இது கண்டிக்கத்தக்கது. எனது கணவர் வீரப்பன் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் அவரின் பெயரை பயன்படுத்தி மற்ற கடத்தல் காரர்களை மினி வீரப்பன் என்று குறிப்பிடக்கூடாது. இதுபோன்று எனது கணவர் பெயரை கொச்சைப்படுத்தும் காரியங்களை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தர்மபுரி மாவட்டம், பெண்ணாகரம் வட்டம், நாகமறை பகுதியில் காவிரி ஆற்றின் மறுகரையில் ஏமனூர், ஒட்டனூர், கொங்குருபட்டி உள்ளிட்ட தமிழக கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 500 தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியை ஒட்டியுள்ள கர்நாடக வனப்பரப்பில் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டால் தமிழர்கள் மீது பழி போடப்படுகிறது.
மேலும் கர்நாடக வனத்துறையினர் தமிழர்கள் வளர்க்கும் நாய்களை சுட்டுக் கொல்கின்றனர். அதை கேட்டால் பொதுமக்களை மிரட்டுகின்றனர். மேலும் அங்கு வசிக்கும் தமிழர்கள் சுதந்திரமாக நடமாட முடியாதவாறு பல்வேறு கட்டுப்பாடுகளை கர்நாடக வனத்துறையினர் விதித்துள்ளனர். எனவே தர்மபுரி மாவட்ட நிர்வாகமும், அன்புமணி எம்.பி.யும். தலையிட்டு அங்கு வசிக்கும் தமிழர்களின் பிரச்சினை தீர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறினார்nakkheeran.in

கருத்துகள் இல்லை: