ஞாயிறு, 21 ஜூலை, 2013

மதியஉணவில் விஷம்? தலைமை ஆசிரியையின் சொத்துகள் பறிமுதல்?

புதுடில்லி:பீகாரில், மதிய உணவு சாப்பிட்டு, 23 குழந்தைகள் இறந்த துயரச்
சம்பவத்துக்கு காரணமான, பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு சொந்தமான சொத்துகளை, பறிமுதல் செய்யும் நடவடிக்கை துவங்கியுள்ளது. குழந்தைகள் சாப்பிட்ட உணவில், பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சு கலந்திருந்ததை, தடயவியல் துறை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.கெட்டுப்போன பொருட்கள்:பீகாரில், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, சரண் மாவட்டத்தில், தர்மாசதி கண்டேவான் என்ற கிராமத்தில் உள்ள, அரசு துவக்கப்பள்ளியில், 15ம் தேதி, பெரும் துயரச் சம்பவம் நடந்தது. அங்கு மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள், திடீரென மயங்கி விழுந்தன.இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 23 குழந்தைகள், பரிதாபமாக இறந்தன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில், பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதுகுறித்து, போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், "கெட்டுப் போன அரிசி மற்றும் எண்ணெயை பயன்படுத்தி, உணவு சமைக்கப்பட்டதே, இந்த விபரீதத்துக்கு காரணம்' என, தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளியின் தலைமை ஆசிரியை, மீனா தேவியை விசாரிப்பதற்காக, போலீசார் தேடினர். அவர் தலைமறைவாகி விட்டார். சமைப்பதற்கான பொருட்களை எடுத்துக் கொடுத்த, அவரது கணவரும் தலைமறைவாகி விட்டார். இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.இதில் காட்டும் வேகம் அரசியல்வாதிகள் விஷயத்திலும் இருந்தால் பாராட்டுவார்கள். இப்படி அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தால் நமது இந்திய பொருளாதாரம் சரிவிலிருந்து விரைவில் மீண்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை.


நெருக்கடி:

பீகார் மாநில மதிய உணவு திட்ட இயக்குனர், லட்சுமணன் கூறியதாவது: தலைமறைவான பள்ளி ஆசிரியை, மீனா தேவியை தேடும் பணியை, போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். எந்த நேரத்திலும், அவர் கைது செய்யப்பட்டு விடுவார். மீனா தேவியை சரண் அடைய வைப்பதற்காக, அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.சரண் மாவட்டத்திலும், மற்ற இடங்களிலும், அவருக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை துவங்கியுள்ளது. துயரச் சம்பவம் நடந்த பள்ளி, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அருகில் உள்ள, வேறு ஒரு பள்ளியுடன் இணைக்கப்பட்டு, இங்கு படித்த மாணவர்கள், அந்த பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இவ்வாறு, லட்சுமணன் கூறினார்.

உணவில் நச்சு:

இதற்கிடையே, குழந்தைகள் இறப்புக்கு காரணமான உணவை, தடயவியல் நிபுணர்கள், சோதனை கூடத்துக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்த, பீகார் மாநில கூடுதல் டி.ஜி.பி., ரவீந்திர குமார் கூறியதாவது:மதிய உணவுக்காக பயன்படுத்தப்பட்ட எண்ணெய் இருந்த டின்களும், குழந்தைகள் சாப்பிட்டு விட்டு, மீதம் வைத்திருந்த உணவுகளும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், டின்களிலும், உணவிலும், "மோனோக்ரோடோபோஸ்' என்ற, பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த பூச்சிக்கொல்லி மருந்து, விவசாயப் பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுவது. இந்த மருந்தை, மனிதர்கள் சாப்பிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும். இந்த பூச்சிக்கொல்லி மருந்து, குழந்தைகளுக்கு சமைப்பதற்காக வைத்திருந்த எண்ணெய் டின் மற்றும் உணவுப் பொருட்களில், எப்படி கலந்தது, இதை, யார் கொண்டு வந்தது என்பது குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு, ரவீந்திர குமார் கூறினார்.

சரியான நேரமல்ல:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரும், காங்., கட்சியைச் சேர்ந்தவருமான, பல்லம் ராஜு கூறியதாவது:மதிய உணவுத் திட்டம் போன்ற, முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தும்போது, அந்த திட்டங்கள் முறையாக நடைமுறைப் படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும். இந்த சம்பவத்துக்காக, ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதற்கு, இது சரியான நேரம் அல்ல. மதிய உணவுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்த, மாநில அரசு, மத்திய அரசு, பள்ளி நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, பல்லம் ராஜு, வழக்கத்திற்கு மாறான பொறுமையுடன் கூறினார்.

மதிய உணவில் விஷத் தேள்:

ஒடிசாவில், தென்கானல் மாவட்டத்தில் உள்ள, ஆரம்பப் பள்ளி ஒன்றில், கடந்த வெள்ளிக்கிழமை, மாணவர்களுக்கு மதிய உணவுடன் உருளைக்கிழங்கு - சோயா கலந்த கறி வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட, 39 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில், 36 குழந்தைகள் முதலுதவிக்குப் பின், வீட்டிற்கு அனுப்பப்பட்டன; மூன்று குழந்தைகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றன. குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில், ஒரு விஷத் தேள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.dinamalar,com

கருத்துகள் இல்லை: