சனி, 4 மே, 2013

கனிமொழிக்கு தொடர்பில்லை :கலைஞர் "டிவி' நிர்வாகி சாட்சியம்

புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில், கலைஞர், "டிவி'க்கு 200 கோடி ரூபாய் கைமாறியது தொடர்பான புகார் குறித்து, நேற்று டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதில், கலைஞர், "டிவி' நிதி பொது மேலாளர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.ஐ.மு., கூட்டணி அரசில், தி.மு.க., வைச் சேர்ந்த, ராஜா மத்திய தொலை தொடர்பு அமைச்சராக இருந்த போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களில் ஒன்று, பிரதிபலனாக, கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாயை பல்வேறு கம்பெனிகள் வழியாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வகையில், சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும், கலைஞர் "டிவி'க்கும் இடையே பணபரிமாற்றம் நடந்ததாக, சி.பி.ஐ., குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக நடந்த, இந்த பண பரிமாற்றத்தில் எந்ததெந்த நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்பதையும், அதில், தி.மு.க., - எம்.பி., கனிமொழிக்கு பங்கு இருந்து என்றும், சி.பி.ஐ., குற்றம் சாட்டியிருந்தது. சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் டைரக்டர் கரீம் மொரானி மீதும் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. கனிமொழி எம்.பி., சார்பில், மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜரானார். நேற்று அரசு தரப்பு சாட்சியாக, கலைஞர், "டிவி'யின் நிதி பொது மேலாளர் ஜி.ராஜேந்திரனை, நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் ராம்ஜெத்மலானி குறுக்கு விசாரணை செய்தார். விசாரணையின் போது ராஜேந்திரன் கூறியதாவது:
சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், கலைஞர், "டிவி'க்கும் இடையே நடந்த பண பரிமாற்றத்தில், கனிமொழிக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லை. கலைஞர், "டிவி'யில் டைரக்டராக கனிமொழி இருந்தார். அவர் அந்தப் பதவியில் இருந்து, 2007 ஜூன் 20ம் தேதி விலகினார். இதன் பின், 2007 ஜூலை, 30ம் தேதிதான், மத்திய ஒளிபரப்பு அமைச்சகத்திடம், கலைஞர், "டிவி'க்கு ஒளிபரப்பு உரிமம் கேட்டு, விண்ணப்பிக்கப்பட்டது. உரிமம் வாங்குவதற்கான நடவடிக்கைகளை கனிமொழி கவனித்து கொண்டார் என்பதும் தவறு.இவ்வாறு அவர் கூறினார்.ராஜேந்திரனின் சாட்சியத்தை பதிவு செய்வது நேற்றுடன் முடிந்ததுdinamalar.com

கருத்துகள் இல்லை: