திங்கள், 29 ஏப்ரல், 2013

ஆயுத வியாபாரி அபிஷேக்கிற்கு எதிரான வழக்கில் அமெரிக்காவிடமிருந்து முக்கிய தகவல்

புதுடில்லி : ஆயுத வியாபாரி, அபிஷேக் வர்மாவுக்கு எதிரான வழக்கில்,
சி.பி.ஐ.,க்கு, அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து, முக்கிய தகவல் கிடைத்துள்ளது.இந்திய கடற்படை தலைமையகத்தின் ஆவண காப்பக அறையிலிருந்து, முக்கியமான தகவல்களை கசிய விட்ட வழக்கில், ஆயுத வியாபாரி, அபிஷேக் வர்மா கைது செய்யப்பட்டார்.ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதற்காக, மத்திய அரசின் கறுப்பு பட்டியலில் இடம் பெற்றிருந்த, சுவிட்சர்லாந்து ஆயுத நிறுவனத்திடம், லஞ்சம் வாங்கியதாகவும், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கறுப்பு பட்டியலிலிருந்து, அந்த நிறுவனத்தின் பெயரை நீக்குவதற்காக, அவர், லஞ்சம் பெற்றதாக, சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், அபிஷேக் வர்மாவின், தொழில் கூட்டாளியான, அமெரிக்காவைச் சேர்ந்த, எட்மண்ட் ஆலெனிடம், சில முக்கிய விவரங்கள் குறித்து, விசாரணை நடத்த, சி.பி.ஐ., திட்டமிட்டது.


இதற்காக, அமெரிக்க அரசின் உதவியை, சி.பி.ஐ., நாடியது. இதையடுத்து, அமெரிக்க அதிகாரிகள், ஆலெனிடம் விசாரணை நடத்தி, அதுகுறித்த அறிக்கையை, சி.பி.ஐ.,க்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில், ஆலென் கூறியுள்ளதாவது:கடற்படை ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் சிக்கியதை அடுத்து, அபிஷேக் வர்மாவின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. இதை முறியடித்து, வங்கி கணக்கை, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக, சி.பி.ஐ., அதிகாரிகள் தயாரித்தது போன்ற, போலியான கடிதத்தை, அபிஷேக் வர்மா தயாரித்தார். அதில், தனக்கு எதிரான வழக்கு, முடிக்கப்பட்டதாக கூறி, சி.பி.ஐ., அதிகாரி போல், தானே, போலியாக கையெழுத்திட்டார்.இவ்வாறு, ஆலென் கூறியுள்ளார்.அபிஷேக் வர்மாவுக்கு எதிராக, ஆலென் அளித்த, முக்கியத்துவமான வாக்குமூலம் கிடைத்துள்ளதை அடுத்து, சி.பி.ஐ., விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: