வெள்ளி, 22 அக்டோபர், 2010

சந்திரிக்கா, தற்கொலை தாக்குதல் சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்


1999ம் ஆண்டு கொழும்பில் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளி என கருதப்பட்ட சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். சத்தியவேல் இலங்கேஸ்வரன் என்ற குறித்த சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கான தண்டனை குறித்து எதிர்வரும் 27ம் திகதி தீர்மானிக்கவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.பி.டி.வராகம தெரிவித்துள்ளார். 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்கவை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு வந்த நபரே இவ்வாறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் சட்ட மா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சந்தேகநபரிடம் கைவிரல் அடையாளங்களைப் பெறுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: