![]() |
![]() |
ராதா மனோகர் :உலக தமிழாராய்ச்சி மன்றத்தை இலங்கை தமிழரசு கட்சியின் கிளை நிறுவனமாக மாற்றிய கதை!
இதற்காக அமைச்சர் திருச்செல்வத்தின் மனைவி திருமதி.புனிதம் திருச்செல்வம் தந்திரமாக வண தனிநாயகம் அடிகளின் இடத்தை கைப்பற்றினர்
தமிழரசு கட்சியினர் நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டை தமிழரசு கட்சி மாநாடாகவே உருமாற்றினார்கள்.
முழு தமிழரசு கட்சியும் அதன் தொண்டர் குண்டர் படைகளும் புனிதம் திருச்செல்வத்தின் ஏவல் பேய்களாக செயலாற்றினார்கள். ( இந்த தொண்டர் குண்டர் கூட்டத்தில் சிவகுமாரும் ஒருவர்)
திருமதி புனிதம் திருச்செல்வமும் + திரு முருகேசு திருச்செல்வமும்
திரு நீலன் திருச்செல்வத்தின் கொலையும்!
இலங்கை தமிழர்களின் போராட்டம் என்பது இன அடக்கு முறையின் வெளிப்பாடு என்று பொதுப்புத்தியில் கருதப்படுகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல
1970 வரை ஆட்சியில் இருக்கும் எந்த கட்சிக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் சுமார் பதினைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவை இருந்தது.
ஆனால் 1970 இல் பதவிக்கு வந்த ஸ்ரீ மாவோ அம்மையாரின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு பதவிக்கு வந்தது . இதன் மூலம் தமிழரசு கட்சி போன்ற சிறுபான்மையினரின் கட்சிகளின் தேவை அவருக்கு இருக்கவில்லை.
அது மட்டுமல்ல அந்த தேர்தலில் தமிழரசு கட்சியின் தலைவர் பொது செயலாளர் உட்பட நான்கு தலைவர்கள் தோல்வி அடைந்தனர்.
தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூன்று முக்கிய தலைவர்களும் தோல்வி அடைந்தனர்
மறுபுறத்தில் வெற்றி பெற்ற தமிழரசு கட்சியினரும் மிக சொற்ப வாக்குகளால் ( (உ+ம் = 56 - 69) மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர் .
இரு கட்சிகளின் பெருந்தலைவர்கள் தோற்றுவிட அந்த இடங்களில் கொஞ்சம் அட்ரஸ் இல்லாத புதியவர்கள் தெரிவாகினர் .
வடக்கில் தமிழரசு தமிழ் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஏறக்குறைய சம பலத்தில் காட்சி அளித்தன!
இரு கட்சிகளிலும் இருந்த பெரும் தமிழ் தலைவர்கள் எல்லோருமே மக்களால் தூக்கி வீசப்பட்டிருந்தனர்!
மறுபுறத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ( ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க) மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்!
அது மட்டுமல்ல வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஸ்ரீமாவோ அம்மையார் தமிழரசு கட்சியால் கடுமையாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலை கழகத்தை நிறுவி அப்போது யாழ் மேயராக இருந்த திரு அல்பிரட் துரையப்பாவுக்கு கொடுத்த வாக்கினை நிறைவேற்றினார்!
திரு அல்பிரட் துரையப்பா அப்போது யாழ் மேயராக இருந்து யாழ்ப்பாண பல்கலை கழக திறப்பு விழாவில் பிரதமர் ஸ்ரீ மாவோ அம்மையாரோடு கலந்து கொண்டார்!
மக்கள் தமிழ் கட்சிகளை தாண்டி செல்ல தொடங்கி இருந்தனர்
வடக்கு தமிழர்களின் பெரும் செல்வாக்கு பெற்ற தலைவராக திரு அல்பிரட் துரையப்பா உருவாகினார்!
இந்த பின்னணியில்தான் தமிழ் தீவிரவாத அரசியல் செயற்கையாக கட்டமைக்கப்பட்டது.
யாழ்ப்பாண தமிழாராய்ச்சி மாநாடு ஜனவரி 10, 1974
அல்பிரட் துரையப்பா கொலை ஜூலை 27, 1975 ஆம்
வட்டுக்கோட்டை தீர்மானம் 1976 மே 14 .
யாழ்ப்பாணத்தில் நடந்த உலக தமிழாராய்ச்சி மாநாட்டு வரவேற்பு குழு தலைவியாகவும் , உலக தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கை கிளையின் துணை தலைவியாகவும் செயல்பட்ட திருமதி.புனிதம் திருச்செல்வம் அவர்களின் வரலாறு போதியளவு கூறப்படவில்லை என்று தெரிகிறது.
தமிழாராய்ச்சி மாநாட்டை முழுக்க முழுக்க தமிழரசு கட்சியின் மாநாடாக திசை திருப்பியதில் இவரின் பங்கு அளப்பெரியது.
அந்த மாநாட்டில் முழுக்க முழுக்க தமிழரசு கட்சி பிரமுகர்களும் அவர்களின் எடுபிடிகளும்தான் கலந்து கொண்டார்கள்
அதை விட முக்கியமானது அந்த மாநாட்டில் தமிழாய்வு என்பது அங்கு பெரியளவில் பேசப்பட்டதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்
அங்கு இளைஞர்களை உசுப்பேத்தும் நிகழ்ச்சி நிரலே பெரிதும் அரங்கேறியது .
அதில் திருமதி புனிதம் திருச்செல்வத்தின் பங்களிப்பு சாதாரணமானது அல்ல.
அந்த காலக்கட்டங்களில் பத்திரிகைகளில் தமிழராய்ச்சி மாநாடு பற்றிய எந்த செய்தி வந்தாலும் அது புனிதம் திருச்செல்வம் பெயர் குறிப்பிடாமல் வருவது அரிது.
அவரே அதன் மக்கள் தொடர்பு அதிகாரியாக செயல்பட்டார்
இந்த கட்டுரை அந்த அரசியல் மடை மாற்று மாநாடு பற்றிய ஒரு சிறு குறிப்பு மட்டுமே.
திருமதி புனிதம் திருச்செல்வமும் அவரது கணவர் திருகோணமலை புனித நகர புகழ் மந்திரி திருச்செல்வமும் ஊட்டி ஊட்டி வளர்த்த விஷ அரசியல் செடியின் நச்சு காற்று திரு அல்பிரட் துரையப்பாவை சீண்ட வேண்டும் என்றுதான் இவர்கள் காய்களை நகர்த்தினார்கள்.
ஆனால் அந்த காய்கள் வெடிகுண்டுகளாக மாறி இவர்களின் மகனான நீலன் திருச்செல்வம் போன்றவர்களின் தலை மீதும் விழும் என்பதை இவர்களை அறியாதது வேதனைதான்.
தமிழாராய்ச்சி மாநாட்டு விடயங்களில் முன்னணியில் அடிபட்ட புனிதத்தின் பெயர் அதன் பின்பு பொதுவெளியிலும் பத்திரிகைகளிலும் திட்டமிட்டு மறைக்கப்பட்டது
அந்த மாநாட்டில் இவர்கள் அரங்கேறிய கேவல அரசியல் நாற்றம் எடுத்ததும் காணாமல் போய் விட்டார் அசல் மேட்டுக்குடி புனிதம் திருச்செல்வம்
இன்றுவரை யாழ் மையவாதிகளின் புராணங்களை ஒவ்வொன்றாக அரங்கேற்றி பக்கங்களை வீணடிக்கும் மெத்த படித்த யாழ் வெறுப்பு வியாதிகள் திருமதி புனிதத்தை மறந்தே விட்டார்கள் போலும்.
காலம் மறக்காது இவர்களின் கயமையை
பிற்சேர்க்கை :
இலங்கையில் நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துவது என்று உலக தமிழாராய்ச்சி மன்றம் தீர்மானித்த.போது இது ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் மாநாடாக உருமாறும் என்று வணக்கத்திற்கு உரிய தனிநாயகம் அடிகள் கனவில் கூட கருதி இருக்கமாட்டார்
இலங்கையில் உலக தமிழாராய்ச்சி மாநாடு நடத்துவது என்று முடிவான உடனேயே களத்தில் குதித்தது தமிழரசு கட்சி.
உலக தமிழாராய்ச்சி மன்றம் இலங்கை அரசின் பூரண ஆதரவோடும் உதவியோடும் நடத்துவதற்குதான் தீர்மானித்தது
ஏற்க்கனவே மலேசியாவில் நடந்த மாநாட்டை மலேசிய அதிபர் துங்கு அப்துல் ரஹ்மான் ஆரம்பித்து வைத்ததை போலவே இலங்கையில் நடக்க இருக்கும் மாநாடு ஜனாதிபதி வில்லியம் கோபல்லவா மற்றும் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆகியோரின் தலைமையில்தான் ஆரம்பித்து வைக்கப்படும் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டது
இதை ஒரு தமிழ் துரோகமாக கூச்சல் போட்டது தமிழரசு கட்சி
வண தனிநாயகம் அடிகளாருக்கு மின்கம்ப தண்டனை கொடுக்காததுதான் பாக்கி.
அந்தளவு மூர்க்கத்தனமாக வசை மாறி பொழிந்தார்கள்
மேலும் உலக தமிழாராய்ச்சி மன்ற உறுப்பினர்களிடையே ஏராளமான சிண்டு முடிதல்களை முடுக்கி விட்டார்கள்
எப்படியாவது உலக தமிழாராய்ச்சி மன்றத்தின் கட்டுக்கோப்பை உடைத்து விட இரவு பகலாக பல தமிழரசு கட்சி கலாநிதிகள் வேலை பார்த்தார்கள்
தமிழரசு கட்சியின் இந்த நரித்தந்திரம் பலித்தது.
தமிழரசு கட்சியின் எடுபிடி சு வித்தியானந்தன் இலங்கை கிளையின் தலைவராக இருந்தார்
பல தமிழரசு கட்சி பிரமுகர்கள் தமிழாராய்ச்சியில் பெரும் புலமை வாய்ந்தவர்கள் போல கிளையின் பதவிகளை பங்கு போட்டுக்கொண்டனர்
இந்த மாநாட்டை எப்படி எப்படி எல்லாம் சிதைத்து குட்டி சுவராக்க முடியுமோ அந்த அளவு சிதைத்தார்க்ள
அசல் தமிழரசு கட்சி மாநாடாகவே அது நடந்தது
புனிதம் திருச்செல்வம் என்ற தமிழ் பேரறிஞர் எல்லாவற்றையும் தன் கண்ட்ரோலில் வைத்து
மின்கம்பி விழுந்து 9 உயிர்கள் போகும் வரை நடத்தி முடித்தார்
அதன் பின்பு அப்படியே அவர் காணாமல் போய்விட்டார்
இத்தனை கூத்தும் செய்துவிட்டு கொஞ்சம் கூட பொறுப்புணர்ச்சியோ பொறுப்பு கூறுதலோ இன்றி பதுங்கி விட்டார்
இந்த மாநாட்டில் நடந்த சம்பவங்களை பற்றி விசாரணை செய்ய வந்த சன்சோனி கமிஷன் முன்பு இவர் ஆஜராகவில்லை.
இவரது உயர்மட்ட செல்வாக்கு இந்த குற்றவாளியை விசாரணை கூட செயாது தப்பிக்க விட்டது
அன்றைய சுதந்திரன் பத்திரிகை செய்தி பின்வருமாறு :
சுதந்திரன் 24 0 3 - 1974 கோவை மகேஸ்வர சர்மா :
மண்டபத்தின் உள்ளே மெத்த ஆவலுடன் உள்ளே நுழைந்த எனக்கு பகீர் என்றிருந்தது.
ஆசனம் காலி இல்லை மண்டபத்தில் இடம் இல்லை என்கிறார்கள் மண்டபத்தின் கவுண்டரில் இருந்த சில இளம்பெண்கள்.
நான் எனக்கு வந்திருந்த அழைப்பிதழை எடுத்து காட்டினேன்
ஏதோ கோவைகளை புரட்டி பார்த்துவிட்டு கைவிரித்து விட்டார்கள் அவர்கள்.
என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றேன்
நல்ல வேளையாக அப்போது அந்த வழியே வந்தார் திருமதி புனிதம் திருச்செல்வம் அவர்கள் .
மாநாட்டு வரவேற்பு குழுவின் தலைவி அவர்தான்!
மிகவும் சுறுசுறுப்புடன் அலுப்பு சோர்வின்றி ஓடியாடி சமுதாய பணியாற்றும் திருமதி புனிதம் திருச்செல்வம்.
சமுதாய பணியை தன் கண்ணாக கொண்டுள்ள திருமதி புனிதம் திருச்செல்வம் ஆடம்பரமோ படோடோபமோ இன்றி மிகவும் எளிமையாக காட்சி அளித்தார்.
இலங்கை தமிழர் மகளிர் சமாஜத்தின் தலைவியாகவும் அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் இலங்கை கிளையின் துணை தலைவியாகவும் பணிபுரிபவர்.
ஈழத்தமிழ் சமுதாயத்தின் மீது படிந்துள்ள அடிமைத்தனம் சாதிபேதம் போன்ற குருட்டு தனங்களை போக்கிட அரசியல் ரீதியாக உழைத்து வரும் தனது கணவர் திரு திருச்செல்வம் அவர்களை போலவே உலக மாந்தர்களின் குருடர்களின் நலன்களை கவனிக்கும் பேரவையில் இலங்கை சார்பில் அங்கத்துவம் வகித்து பணிபுரிபவர் திருமதி திருச்செல்வம்.
மலேசிய இந்தியா போன்ற நாடுகளில் நடைபெற்ற முதலாம் இரண்டாம் அனைத்துலக தமிழராய்ச்சி மாநாடுகளில் கலந்து கொண்டு அந்த மாநாடுகள் நடை பெற்ற முறைகளை நன்கு அவதானித்து வைத்திருந்தவர் திருமதி புனிதம் திருச்செல்வம்.
முதலிரெண்டு மாநாடுகளின் பொது நடந்த தவறுகளும் குறைகளும்
ஈழத்தில் நடைபெறும் 4 ஆவது மாநாட்டில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து கரிசனையுடன் செயல்பட்டவர் திருமதி புனிதம் திருச்செல்வம்.
அத்தகைய நிர்வாக திறனும் கனிவும் பண்பும் ஆற்றலும் சுறுசுறுப்பும் மிக்கவரான திருமதி புனிதம் திருச்செல்வம் அவர்கள் வரவேற்பு குழுவின் தலைவராக பணியாற்றும் போது அங்கு குறைகள் தலைதூக்க இடமேது?
என்னுடைய நிலையை கூறி அவரிடம் அழைப்பிதழை காட்டினேன்.
அடுத்த நிமிடம் எனக்கு மண்டபத்துள் இடம் கிடைத்தது.
மண்டபத்தின் உள்ளே மதத்தலைவர்கள் அரசியல் கட்சி தலைவர்கள், தேசிய பேரவை உறுப்பினர்கள், அரசியல் சார்பற்ற தமிழ் பிரமுகர்கள் தமிழறிஞர்கள் ஏராளமானோர் முன் வரிசைகளில் அமர்ந்திருந்தனர்.
தமிழ் மொழியின் உயர்வுக்காகவும் தமிழ் சமுதாயத்தின் விடுதலைக்காகவும் உழைத்து கொண்டிருக்கும் தமிழர் கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் அங்கு பார்வையாளர் வரிசையில் காணப்பட்டனர்.
தமிழுக்கு உரிமை கிடைக்கின்ற தமிழுக்கு உலகம் தழுவிய விழா நடைபெறுகின்ற இடத்தில - தமிழ் மொழியின் உரிமைக்காக போராடிவரும் ஒரு இயக்கத்தவர்கள் அகமும் முகமும் மலர்ந்திட அங்கு வந்தமர்ந்ததில் வியப்பேது?
அரசியல் கடந்த இந்த தமிழ் உணர்வுக்குத்தான் அரசியல் என்று முலாம் பூசுகிறார்கள் தமிழுக்கு கொள்ளி வைத்துக்கொண்டிருக்கும் ஒரு சில புல்லுருவிகள்.
அத்தகையக தமிழ் பகைவர்கள் தமிழ் துரோகிகள் யாரும் அந்த மண்டபத்தில் காணப்படாததால் அது புனிதமடைந்து காணப்பட்டது
மாநாட்டு மேடைக்கு ஈழத்து பூதந்தேவனார் என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது மிகவும் பொருத்தமாக இருந்தது.
தமிழர்கள் இந்நாட்டில் தனியரசோச்சி தமிழ் வளர்த்த காலை இங்கிருந்து தமிழ்நாடு சென்று சங்கத்தில் இருந்து தமிழ் ஆய்ந்த புறநானூற்று புலவன் அல்லவா ஈழத்து பூதந்தேவன்.
மாநாட்டு மேடையின் பின்னணியில் நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணம் இலங்கை என்று எழுதப்பட்ட பென்னம் பெரிய பதாகை ஒன்றும் அதன் கீழ் அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றத்தின் யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும் புறநானூற்று வரியை கொண்ட வட்டவடிவமான சின்னமும் காணப்பட்டது.
இவற்ற்றை எல்லாம் பார்த்து ரசித்து கொண்டிருந்த நான்,
அங்கிருந்த அறிஞர்களும் பிரமுகர்களும் பரபப்புடன் எழுந்து நிற்பதை அவதானித்தேன்.
அவர்களின் முகத்தில் ஒருவித மரியாதையும் பயபக்தியும் இழையோடி கொண்டருந்தது
என்னெவென்று திரும்பி பார்த்தபோதுதான் விஷயம் புரிந்தது.
முப்பத்தைந்து இலட்சம் ஈழத்தமிழர்களின் தலைவரும் தமிழ் சமுதாயத்திற்கு விடுதலை உணர்வுக்கு வித்திட்டவரும் தமிழ் ஈழத்தின் முதல்வருமான பெரியவர் தந்தை செல்வா அவர்கள் தமக்கே உரிய அந்த சுந்தர புன்னகையை அந்த பொன் முகத்தில் பொலிய விட்டபடி அந்த மாநாட்டு மண்டபத்திற்குள் வந்து கொண்டிருந்தார்
சாதி மதபேத பிரதேச வேறுபாடுகளையும் கட்சி பேத மாச்சரியங்களையும் கடந்து தமிழ் ஈழத்தின் ஒப்பற்ற தலைவராக அனைவராலும் ஏற்று கொள்ள பட்டிருக்கும் அந்த கிழவருக்குத்தான் அங்கிருந்த பெருமக்கள் அப்படி எழுந்து நின்று மரியாதையை செய்தனர்
![]() |


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக