வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

நடிகர் வடிவேலுவின் 23-ஆம் புலிகேசி பார்ட்-2 படப்பிடிப்புக்கு மீண்டும் ஆரம்பம்! ரெட் கார்டு நீக்கம்… உற்சாகத்தில் வடிவேலு! நடந்தது என்ன?

 தினகரன்  :சென்னை: நடிகர் வடிவேலுவின் 23-ஆம் புலிகேசி பார்ட்-2 திரைப்படத்தின் பிரச்சனை தீர்ந்தது. நடிகர் வடிவேலு, தயாரிப்பு நிறுவனம் எஸ் பிக்சர்ஸ் இடையிலான பிரச்சனை தீர்ந்தது.
 இம்சை அரசன் 24-ம் புலிகேசி என படத்திற்கு பூஜை போடப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நடைபெறவில்லை. வடிவேலு, எஸ் பிக்சர்ஸ் பிரச்சனை தீர்ந்தால் விரைவில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு உள்ளது

 விகடன் நா.கதிர்வேலன் அதியமான் ப  :    இன்று லைகா நிறுவனத்திற்கும் வடிவேலுவிற்கும் இடையே சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டதால் நெடுநாளாக நீடித்துவந்த இவ்விவகாரம் முடிவுக்கு வந்தது.
‘வடிவேலு ரிட்டன்ஸ் எப்போது?!’ கடந்த சில ஆண்டுகளாகவே இதுதான் பலரது கேள்வியாகவும், விருப்பமாகவும் இருந்து வருகிறது. அவரது ஆள் டைம் ஹிட்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும் மீம் டெம்ப்ளேட்களில் வலம்வந்துகொண்டிருந்த வடிவேலுவின் ரியாக்ஷன்களுக்கும் வெர்ஷன் 2.0 வரப்போகிறது.
ஆம், வடிவேலுவின் டரியல் ஆட்டம் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது.
23ம் புலிகேசி வெற்றிக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் துவங்கிய 24ம் புலிகேசி திரைப்படம் பல்வேறு தயாரிப்பு சிக்கல்களால் நின்றுபோனது. இதனால் இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தினர் இடையே மோதல் நிலவிவந்தது.

இந்நிலையில், இன்று லைகா நிறுவனத்திற்கும் வடிவேலுவிற்கும் இடையே சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டதால் நெடுநாளாக நீடித்துவந்த இவ்விவகாரம் முடிவுக்கு வந்தது. ஆக, இனிமேல் வடிவேலு தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கு எந்த தடையுமில்லை என்று தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நடிகர் வடிவேலுவிடம் நேரடியாக தொடர்புகொண்டு பேசினோம், “ஆமாண்ணே அய்யனாரு கண்ண தொறந்து கதவையும் தொறந்துவிட்டாரு அண்ணே! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்திடுச்சு. ரெண்டு தரப்புலயும் சமரசம் பேசியாச்சு. இனிமே நிறைய நல்ல படங்கள் பண்ணனும். அடிக்கடி சந்திப்போம்!” என்று கூறியவருக்கு வாழ்த்துகள் கூற தொடர்ந்து அலைபேசிகள் அழைப்புகள் வந்துகொண்டிருக்க மிகுந்த ஆனந்தத்துடன் முடித்துக்கொண்டார்.

 

கருத்துகள் இல்லை: