ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

இந்திய ராணுவ விமானம் காபூலுக்கு செல்கிறது- இந்தியர்களை மீட்டுவர நடவடிக்கை

 மாலைமலர் : ஆப்கானிஸ்தானில் 400 இந்தியர்கள் தவித்து வருகிறார்கள் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இந்திய ராணுவ விமானம் காபூலுக்கு செல்கிறது- இந்தியர்களை மீட்டுவர நடவடிக்கை
புதுடெல்லி:   ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதால் அங்குள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மூடப்பட்டன. அங்கு இருக்கும் வெளிநாட்டினரை அழைத்து வர அந்தந்த நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்தது.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை மீட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுக்கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில மாதங்களாக 3,500-க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு சென்றிருந்தனர்.
தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தபோது இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியதை அடுத்து பெரும்பாலானோர் இந்தியா திரும்பினர்.

ஆப்கானிஸ்தானில் சிக்கி இருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் விமானம் அனுப்பப்பட்டது. கடந்த 15-ந் தேதி 129 பேர் அழைத்து வரப்பட்டனர். பின்னர் 2-வது விமானத்தில் 120 பேர் இந்தியாவுக்கு திரும்பினர். இதில் தூதரக அதிகாரிகள், பாதுகாப்பு வீரர்கள் அடங்குவர். எஞ்சியுள்ள இந்தியர்களையும் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய விமானப்படையின் விமானம் விரைவில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு செல்ல உள்ளது. இந்திய ராணுவத்தின் சி.17 விமானம் காபூலுக்கு சென்று இந்தியர்களை மீட்டு வருவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய ராணுவ விமானம் கூடிய விரைவில் காபூலுக்கு செல்கிறது. இந்திய விமானப்படையின் சி.17 சரக்கு போக்குவரத்து விமானம் காபூலுக்கு செல்வது தொடர்பாக அமெரிக்க அரசுடன் பணிபுரிந்து வருகிறோம். இதில் 250 இந்தியர்களை காபூலில் இருந்து அழைத்து வர முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. ஆனால் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்கள் மற்றும் சோதனைச்சாவடிகளில் இருந்து எத்தனை பேர் கடந்து விமான நிலையத்துக்கு வர முடியும் என்பதை பொறுத்தே மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருக்கும்.

ஏர்-இந்தியா விமானங்கள் காபூலுக்கு செல்வது சிரமமாக இருக்கிறது. இதனால் இந்திய விமானப்படை விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் 400 இந்தியர்கள் தவித்து வருகிறார்கள் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. இதனால் சரியான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை: