வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

காபூல் குண்டுவெடிப்புகளில் 60 பேர் பலி, 140 பேர் காயம்: நடந்தது என்ன?

BBC : ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூலின் விமான நிலையத்தில் நேற்று மாலை நேரத்தில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் அமெரிக்க மீட்புப் படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 60-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். மேலும் 140 பேர் காயமடைந்தனர்.
மெரைன்ஸ் எனப்படும் அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 11 பேரும் ஒரு கடற்படை மருத்துவர் ஒருவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்கள். கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்படுவது இதுவே முதல்முறையாகும்.
பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.
தாலிபன்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி வரும் 31-ஆம் தேதிக்குள் படைகள் அனைத்தும் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும்.

இதற்கான காலக்கெடு நெருங்குவதால் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூடியிருக்கிறார்கள்.

உள்ளூர் நேரப்படி மாலை ஆறு மணியளவில் விமான நிலையத்தின் அபே நுழைவு வாயில் அருகே முதல் குண்டு வெடித்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு ஆப்கானியரை மீட்பதற்காக பிரிட்டன் அதிகாரிகள் பயன்படுத்திவந்த ஹோட்டலில் மற்றொரு குண்டு வெடித்தது.

இரண்டு குண்டுகளுமே விமான நிலையத்துக்கு வெளியே வெடித்துள்ளன.

தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்று ஐஸ்எஸ்ஐஎஸ்-கே என்ற பயங்கரவாத இயக்கம் கூறியுள்ளது.

குண்டுகள் வெடித்திருக்கும் நிலையிலும் "மீட்புப் பணிகளை நிறுத்தப் போவதில்லை. தொடர்ந்து செய்வோம்" அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

காபூலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கே இயக்கத்தினரால் இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் மேலும் தாக்குதல்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து தாலிபன்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் அமெரிக்க மத்தியப் படைப்பிரிவின் தலைவர் பிராங்க் மெக்கென்சி கூறினார்.

காபூல் விமான நிலையத்தில் தற்போது 5,800 அமெரிக்க வீரர்களும் சுமார் 1000 பிரிட்டன் வீரர்களும் உள்ளனர்.

இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து 104,000 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 66,000 பேர் அமெரிக்கா மூலமாகவும் மேலும் 37,000 பேர் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மூலமாகவும் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட பல நாடுகள் ஏற்கனவே தங்களது மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திவிட்டன.

விமான நிலையத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வந்த துருக்கி தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை மூத்த அதிகாரிகளுடன் நடந்த அவசரக் கூட்டத்தில் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தங்களது மீட்பு நடவடிக்கைகள் தொடரும் என்று குறிப்பிட்டார்.

காபூல் தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை: