திங்கள், 23 ஆகஸ்ட், 2021

சிறுவன் உயிரிழப்பு : அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்!

சிறுவன் பலி : அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

மின்னம்பலம் : விழுப்புரத்தில் கட்சி கொடிக் கம்பம் ஊன்றியபோது உயிரிழந்த சிறுவன் விவகாரத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மீது குழந்தை தொழிலாளர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு பகுதியில் திமுக கட்சியின் நிர்வாகி பொன்குமார் என்பவரது இல்ல திருமண விழா நேற்று முன் தினம் நடைபெற்றது.
திருமண விழாவுக்கு சிறப்பு விருந்தினராக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அழைக்கப்பட்டிருந்தார்.

அமைச்சரின் வருகைக்காக விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து திமுக கட்சி கொடிகள் அலங்கார தோரணங்கள் நடப்பட்டன. வெங்கடேசன் என்பவர் கொடிக்கம்பம் நடும் பணியை மேற்கொண்டிருந்தார். ஏகாம்பரம் என்பவரது இளைய மகன் தினேஷ் (13) என்ற சிறுவனும் கொடி கம்பம் நட்டு கொண்டிருந்தார்.
சிறுவன் நட்ட கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டான். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறுவன், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கட்சி கொடிக் கம்பம் நட்ட சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 23) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “விழுப்புரத்தில் விலை மதிக்க முடியாத சிறுவன் உயிருக்கு மாவட்ட அமைச்சர் ஒன்றரை லட்சம் கொடுத்து அந்த சம்பவத்தை மூடிவிட்டார். 13 வயது சிறுவனை சம்பளம் கொடுத்து தொழிலில் அமர்த்தியுள்ளனர். அதனால் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மீது குழந்தை தொழிலாளர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டினால் சிறுவன் உயிரிழந்ததாக போலீஸ் வழக்கு பதிவு செய்ததாக கூறுகிறீர்கள். போலீஸ் மாற்றிதான் வழக்கு பதிவு செய்வார்கள். எங்கள் ஆட்சியில் போலீஸ்காரர்கள் அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள்” என்று கூறினார்.

-வினிதா

கருத்துகள் இல்லை: