திங்கள், 23 ஆகஸ்ட், 2021

கட்டப் பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட முடியாது: உஷா ராஜேந்தர்

கட்டப் பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட முடியாது: உஷா ராஜேந்தர்

மின்னம்பலம் : 'வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தால் கட்டப் பஞ்சாயத்து செய்ய முடியாது' என உஷா ராஜேந்தர் கூறியுள்ளார்.
நடிகர் சிலம்பரசனுக்கும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், லிங்குசாமி, பி.டி.செல்வகுமார் உள்ளிட்ட பலருக்கும் இடையே பண விவகாரம் தொடர்பாக மோதல் உள்ளது.
சிலம்பரசன் நடிக்கும் படத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டாம் என 'பெப்சி' தொழிலாளர் கூட்டமைப்புக்கு, தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தியது.
இதனால் சிலம்பரசன் நடிக்கும், 'வெந்து தணிந்தது காடு' படம் தடைபடும் சூழல் உருவானது. பின், படத்தின் தயாரிப்பாளர் பேச்சு வார்த்தை நடத்தி, படப்பிடிப்பைத் தொடங்கினார்.
இவ்விவகாரம் தொடர்பாக, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுடன், சிலம்பரசனின் தாய் உஷா கலந்துகொண்ட பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் எந்தவிதமான சுமுக முடிவும் ஏற்படாத நிலையில்
உஷா ராஜேந்தர் வெளியிட்ட அறிக்கையில்,
“தயாரிப்பாளர் சிவசங்கரன் உடனான பிரச்சினைக்குப் பேசி தீர்வு காணப்பட்டது.


இதற்கான கடிதத்தை, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குக் கொடுத்துள்ளார். லிங்குசாமி உடனான பிரச்சினையில், மனிதாபிமானம் அடிப்படையில், வட்டியில்லாத முன்தொகையை, திருப்பித் தர சம்மதித்துள்ளோம். பி.டி.செல்வகுமார் மற்றும் டி.ராஜேந்தர் உடனான பிரச்சினையில், சிலம்பரசனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

மைக்கேல் ராயப்பன் உடனான பிரச்சினை, நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது. இதற்கு முன், சிலம்பரசன் மீதான காழ்ப்புணர்ச்சியால், அவர் நடிக்க முடியாதபடி, விஷால் கட்டப் பஞ்சாயத்து செய்தார். மைக்கேல் ராயப்பன் மீது, சிலம்பரசன் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளதால், அது குறித்து, தயாரிப்பாளர்கள் சங்கம், எந்த கட்டப் பஞ்சாயத்தும் செய்ய முடியாது” என்று கூறியுள்ளார்.

-இராமானுஜம்

கருத்துகள் இல்லை: