வியாழன், 27 பிப்ரவரி, 2020

NEET... மருத்துவம், சுகாதாரத்துறையை இந்த மோசக்காரர்களின் பிடியிலிருந்து மீட்க வேண்டும்

Muralidharan Pb : Neat என்றால் சுத்தம், ஒழங்கு என சில பொருள் உண்டு.
NEET என்றால் கபடம், அழுக்கு, ஒழுங்கீனம் என பல முன் மாதிரிகள் நிரம்பி இருக்கு.
2018ல் ஓசூரைச் சேர்ந்த குமார் என்ற மாணவன் நீட் எழுத விண்ணப்பித்த ஊர் எது தெரியுமா?
கயா. பீகார் மாநிலம்.
எந்த மொழியில் தெரியுமா?
ஹிந்தி.
ஹிந்தி தமிழ்நாட்டில் படிக்கின்றனரே ? அதில் என்ன அதிசயம் என்று வினவுவர்களுக்கு.
பணிக்காக வட மாநிலங்களில் பணிபுரிய வேண்டி, இந்தியை வேறு வழியின்றி விருப்பப் பாடமாக படிக்கும் தமிழர்கள் நிறைய உண்டு. அதில் எந்த தவறும் இல்லை. அது அவர்களது சொந்த விருப்பம்.
நீட் எழுத வேண்டும் என்று அதுவும் இந்தியில் எழுத விண்ணப்பிப்பதும் கூட தவறில்லை. அதுவும் ஏற்புடையதே.
நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் எடுத்த குமார் மிகப் பெரிய, சிறப்பான மருத்துவ கல்லூரியாகக் கருதப்படும் சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் (MMC)அனுமதி வாங்கிவிட்டான்.
பன்னிரண்டாவது தேர்வில் மிக மோசமான மதிப்பெண்கள் பெற்றவன், நீட் எழுதியது தப்பு.
அது நீட் தேர்வின் அதிகப்படியான குளறுபடி.
ஆனால் பலநாள் திருடன் ஒருநாள் மாட்டித்தானே ஆகவேண்டும்?
முதலாமாண்டு தேர்வு எழுதியதில் சில பாடங்களில் படு மோசமான தோல்வி பெற்றது அவனது உண்மைத்தன்மையை உணர்த்தியது.
ஆனாலும் இரண்டாம் ஆண்டு சென்ற போது பல அக்கிரமங்கள் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.

20 லட்சம் செலவு செய்து அவனுக்கு பதிலாக வேறு ஒருவன் கயாவில் தேர்வு எழுதியதும், இந்த மோசக்கார கும்பல்களின் அட்டகாசங்கள் வெளி வந்துள்ளது.
மிகக் கொடுமை யாதென்றால், குமார் போட்டோவை ஹால் டிக்கெட்டில் கூட சரியாக கவனிக்காமல் அந்த ஆளை எழுதவிட்டது மிகப்பெரிய மோசடி என தற்போது தெரியவந்துள்ளது.
இவ்வளவு தொழில்நுட்ப கோளாறுகள் இங்கு இந்த நீட் தேர்வில் ஓட்டையாக அமைந்துள்ளதால், உண்மையாக, நேர்மையான வகையில், பல லட்சங்கள் செலவழித்து படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களது விடா முயற்சி அடுத்து வரும் ஆண்டுகளில் பெரியக் கேள்விக்குறியாகியுள்ளது.
பழைய முறையில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மருத்துவ படிப்பில் இடமுண்டு.
எல்லாரும் ஏற்றுக்கொண்ட
இடஒதுக்கீடு முறையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொது வகுப்பினர் எல்லோருக்கும் கட் ஆஃப் மதிப்பெண்கள் வேற்றுமை மொத்தமே 1.5 மதிப்பெண்கள்.
ஆனால் தற்போது பூதாகரமாக வெடித்துள்ள இந்த முறைகேடில் குறைவாகவே மதிப்பெண்கள் எடுத்தால் போதும், நீட் தேர்வின் போது அதில் அதிகமாக மதிப்பெண்கள் வாங்கினால் உங்களுக்கு அரசு கல்லூரியில் அனுமதியுண்டு.
தமிழகத்தில் எழுத வரும் மாணாக்கர்களை சோதனை என்ற பெயரில் கொடுக்கும் தொல்லைகளை சொல்ல வேண்டுமா என்ன?
ஆனால் அதிலும் வடக்கில் உள்ள தேர்வு மையங்களில் இப்படியான நடவடிக்கைகள் எடுக்காத போது இங்கு மட்டும் எழுதும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவது ஏன்?
எதற்காக இப்படியான பாரபட்சம்?
எதற்காக இப்படி தேவையற்ற தேர்வு முறை? நீட்டை ஒழித்தால் எல்லாமே சரியாகிவிடும்.
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது சரியா என்று சிலர் நினைக்கலாம்.
சென்ற 2019 ஆண்டில் நடந்த நீட் ஆள்மாறாட்டம் செய்த ரஷீத் என்பவனுக்கும் இந்த பித்தலாட்டத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. அது வேறு. இது வேறு. இவை 2018ல் நடந்த முடிச்சவுக்கித்தனம்.
இது பணம், வணிகம், கொள்ளை, அட்டூழியம் என்ற வகையான செல்லரிக்கப்போகும் தவறான கட்டிடம். இதை இடித்துவிட்டு முறையை கையாள்வதே சிறந்தது.
இந்திய மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையை இந்த மோசக்கார கும்பல்களின் பிடியிலிருந்து மீட்க வேண்டும்.
இல்லையென்றால் நாடு, மருத்துவம், கல்வி, மக்கள் அனைத்தும் வஞ்சகர்களிடமும், மாஃபியாக்களிடமும் சிக்கி நாசமாவது உறுதி.
#BANNEET
27/02/2020

கருத்துகள் இல்லை: