புதன், 20 ஜூலை, 2016

பழ.கருப்பையா திமுகவில் இணைந்தார்

சென்னை: அதிமுகவிலிருந்து விலகிய பின்னர் எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்துவந்த பழ. கருப்பையா, இன்று திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் அக்கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு  முன்னதாக,  துக்ளக் ஆண்டு விழாவில் அதிமுக அமைச்சர்களுக்கு எதிராக பேசி  தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பழ. கருப்பையா,  அதன் பின்னர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதிமுகவிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். இதனையடுத்து பழ. கருப்பையா திமுகவில் சேரக்கூடும் என அப்போதே கூறப்பட்டது. ஆனாலும் இன்றுதான் அவர் திமுகவில் சேர்ந்தார். சென்னை, அறிவாலயத்தில் கருணாநிதியை நேரில் சந்தித்து, அக்கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, அதிமுகவிலிருந்து வெளியேறிய பின்னர் திமுகவையே சுற்றிச் சுற்றி வந்ததாகவும், மனதளவிலும் உடலளவிலும் அப்போதே தாம் திமுகவில் இணைந்துவிட்டதாகவும் கூறினார்.

மேலும் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர்களுடன் இணைந்து திராவிட இயக்க வளர்ச்சிக்கு தாம் பாடுபடப்போவதாகவும் கருப்பையா தெரிவித்தார்.  விகடன்.காம்

கருத்துகள் இல்லை: