சனி, 23 ஜூலை, 2016

தோழர் மாரியப்பனின் தலையை வெட்டிய இந்து முன்னணி விஸ்வநாத பாண்டியன்.. சாதி ஆதிக்கத்தை எதிர்த்ததால் ..

திருநெல்வேலியில் சாதி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய சிபிஐ எம் எல் கட்சி தொண்டரை இந்து முன்னணி ஆதரவாளர் தலையை வெட்டி கொடூரமாகக் கொன்றுள்ளனர். இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
“2 4 வயதான தோழர் மாரியப்பன் சாதி வெறியர்களால் கடந்த 20 அன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவர் வண்ணார் சாதியைச் சேர்ந்தவர். அவரின் தலையை வெட்டியெறிந்திருக்கிறார்கள். தலையில்லா உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் மாரியப்பனுக்கு ஆதிக்க சாதி வெறியன் ஒருவன் கொலை மிரட்டல் விடுத்த அன்றைய மாலையிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். தோழர் மாரியப்பனின் உடலை வாங்க மறுத்து, அவரின் குடும்பத்தினர் உள்பட 600 பேர் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.


இதுவரை குற்றவாளிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான குற்றவாளி பிஜேபி ஆதரவாளர் வீட்டில் மறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிஜேபியினர் பிரதான குற்றவாளி அப்பாவி என்று சொல்லிவருகின்றனர். மாரியப்பன் இளம் மனைவிக்கு வளைகாப்பு நடந்த நாளில்தான் மாரியப்பன் காணமற் போனார். அதன் பின் அவர் தலையற்ற உடல்தான் கிடைத்தது. மாரியப்பன் 2007 முதல் சிபிஐஎம்எல் கட்சியின் செயல்வீரராக இருந்து வருகிறார்.
ஏஐசிசிடியூவிலும் புரட்சிகர இளைஞர் கழகத்திலும் பணியாற்றுகிறார். அவரின் தந்தை சங்கர் திருநெல்வேலி மாநகராட்சியின் 43-44 வார்டின் செயலாளர். தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும்தான் கிளையின் உறுப்பினர்கள். வார்டு 44ல் ஆதிக்க சக்தியாக முக்குலத்தோர் சாதியைச் சேர்ந்த விஸ்வநாத பாண்டியன் என்பவர் இருக்கிறார். வேறு சாதியைச் சேர்ந்த எவரும் மாநகராட்சி வார்டு தேர்தலில் நிற்பதற்கு அவர் அனுமதிப்பதில்லை. ஆனால், சிபிஐ எம்எல் கட்சி அங்கே வளரத் துவங்கியவுடன் கட்சியின் வேட்பாளர்களை ஆதிக்க சாதியினர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அம்பேட்கர் முன்வைத்த ஒரு மனிதன்- ஒரு வாக்கு- ஒரு மனிதன்- ஒரு மதிப்பு என்ற கோட்பாடு ஆதிக்கம் செய்யும் சாதிகளுக்கான அச்சுறுத்தலாக இருந்துவருகிறது.
தோழர் மாரியப்பன் வண்ணார் சாதியைச் சேர்ந்தவர். அந்தப் பகுதியில் 150 வீடுகள் வரை கொண்ட பெரிய சாதிக்குழு. வண்ணார்கள் மேல்சாதியினருக்குச் சேவை செய்து வந்தவர்கள். சமீப காலத்தில் ஆதிக்க சாதிகளைச் சார்ந்து அடிமைத் தொழில் செய்வதை விடுத்து, சுதந்திரமாக வாழத்துவங்கியுள்ளனர். ஆதிக்க சாதிகளை எதிர்க்கும் சிபிஐ எம்எல் அவர்களின் கட்சியாக மாறியுள்ளது. வண்ணார் சாதியைச் சேர்ந்தவர்கள் சலவைத் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராகி AICCTU சங்கமாக இயங்கிவருகின்றனர் 2013ல் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறந்தவரின் உடலை மாநகராட்சி சாலையில் எடுத்துச்செல்ல ஆதிக்க சாதிகள் அனுமதிக்கவில்லை.. இந்து முன்னணி துணையுடன், ஆதிக்க சாதியினர் ஊர்வலத்தைத் தடுத்தனர். பொதுப்பாதை உரிமையை விட்டுக்கொடுக்க சிபிஐ எம்எல் தயாராக இல்லை. அப்போது சிபிஐ எம்எல் தோழர்களில் ஒருவர் இந்து முன்னணி குண்டர்களால் தாக்கப்பட்டார். அதன்பின் தோழர்கள் சாலை மறியல் செய்து பொதுச் சாலையில் இறுதி ஊர்வலம் செல்லும் உரிமை மீட்கப்பெற்றது. நமது தோழரைத் தாக்கியவர் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. புகாரை அளித்தவர்களில் ஒருவர் மாரியப்பன்.
இன்றுவரையும் சிபிஐஎம்எல் வென்றெடுத்த பொதுப்பாதை உரிமை நடைமுறையில் இருக்கிறது.. ஒடுக்கப்பட்ட வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதி ஒழுங்கை மீறுவதை ஆதிக்க சாதியினனரால் பொறுக்க முடியவில்லை. அதுவும் தோழர் மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் நீதிமன்றத்தில் நிற்க வேண்டியிருந்த அவமானத்தையும் சகிக்கமுடியவில்லை. சாட்சியங்களைக் கலைப்பதற்கு எடுத்த முயற்சிகளையும் தோழர் மாரியப்பன் தோற்கடித்தார். ஜூலை 20 அன்ற தோழர் மாரியப்பன் சாட்சியங்களுடன் நீதிமன்றம் சென்றிருந்தார். அப்போது, விஸ்வநாத பாண்டியன் என்ற அந்த சாதி வெறியன் தோழர் மாரியப்பனைக் கொலைசெய்துவிடுவேன் என்று மிரட்டினான். அன்று மாலையே தோழர் மாரியப்பன் கொலை செய்யப்பட்டார்.
மாரியப்பன் வீடு திரும்பாததால் அவரின் தந்தை தோழர் சங்கர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். நள்ளிரவில் மாரியப்பனின் தலையற்ற உடல் கிடைத்தது. மறுநாள் மாலையில் அவரின் தலை கண்டெடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆதிக்க ஆர்எஸ்எஸ் அமைப்புகளில் சேர்ந்து பண்டைய சாதி கட்டமைப்பின் கீழ் வாழ உடன்பட வேண்டும், அல்லது கொல்லப்பட வேண்டும் என்பதுதான் தேசத்தின் விதியாக மாறி வருகிறது. அதன் வெளிப்பாடே, ஆதிக்க முக்குலத்தோர் சாதியின் கட்டுப்பாட்டுக்கு கீழ்பட மறுத்த மாரியப்பன் கொலை செய்யப்பட்டது. ஆதிக்கத்தை வேரறுக்க சாதிகள் அனைத்தையும் நீர்மூலமாக்க சிபிஐ எம்எல் மேற்கொள்ளும் போராட்டம் விடாது தொடரும்… சாதிகள் ஒழிக்கப்படுவது வரை தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.   thetimestamil.com

கருத்துகள் இல்லை: