ஞாயிறு, 17 ஜூலை, 2016

உணவு தேடி கொலம்பியாவுக்கு படையெடுக்கும் வெனிசுலா மக்கள்..

வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பஞ்சமும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனால், உணவுக்கலவரங்கள் அதிகரித்தன. இந்நிலையில், கடந்த ஜுன் 20ஆம் தேதி வெனிசுலாவில் அதிபர் மதுரா ஆட்சியில் நீடிக்க வேண்டுமா, இல்லையா என்பதை முடிவு செய்யும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. 2014 முதலே நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, உணவுப்பொருட்கள், எண்ணெய், சரக்கு பொருட்களை நாடு கடத்துவதையோ, ஏற்றுமதி செய்வதையோ தடுக்க அதிபர் மதுரா சுமார் 2,219 கி.மீ நீள எல்லைகளை மூடுமாறு ஆகஸ்ட் 2015இல் உத்தரவிட்டார்.

இதனால், அண்டை நாட்டு எல்லைகள் அடைக்கப்பட்டன. இந்நிலையில், உணவுப்பஞ்சம் அதிகரித்திருப்பதை அடுத்து மக்கள் உணவுக்காக கொலம்பியாவுக்குள் நுழையத் தொடங்கியுள்ளனர். தற்போது, மக்களைத் தடுக்க வேண்டாம் என்றும், அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் மதுரா அறிவுறுத்தியுள்ளார். இதுவரை சுமார் 35,000 பேர் கொலம்பிய எல்லைக்குள் நுழைந்திருப்பதாக கொலம்பிய அரசு தெரிவித்துள்ளது. வெனிசுலாவிலிருந்து வருபவர்களுக்குத் தேவையான உணவு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொலம்பியா தெரிவித்துள்ளது.  minnambalam.com

கருத்துகள் இல்லை: