வியாழன், 7 மே, 2020

ஊரடங்கு: ஆபாச இணையதளங்களில் மூழ்கும் இந்தியர்கள் - 95% அதிகரிப்பு

மின்னம்பலம் :  கொரோனா ஊரடங்கில் வீட்டில் சும்மா இருப்பதால் ஆபாச இணையதளங்களில் மூழ்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 95 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்தபோதிலும் கொரோனாவின் கோர தாண்டவம் இன்னும் குறையாததால் மூன்றாவது கட்டமாக வருகிற 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஆபாச இணையதளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
வேலோசிட்டி எம்.ஆர் என்ற ஆராய்ச்சி நிறுவன தகவலின்படி, ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் ஆபாச இணையதளங்களைப் பார்ப்பது கிட்டத்தட்ட 95 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 89 சதவிகித மக்கள் தங்கள் செல்போன்களில் ஆபாச வலைதளங்களைப் பார்க்கிறார்கள். கிட்டத்தட்ட 30 - 40 சதவிகிதத்தினர் பகலில் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து இரவில் பார்க்கின்றனர்.
நாட்டில் 3,500க்கும் மேற்பட்ட ஆபாச வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டபோதிலும் இது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் உள்ள 10 பள்ளிகளில் 400 மாணவர்களிடையே ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. குறைந்த பட்சம் 70 சதவிகித மாணவர்கள் 10 வயதை எட்டியவுடன் இணையத்தில் ஆபாச இணையதளங்களைப் பார்க்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மலிவான விலையில் இணைய வசதி கிடைப்பது இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இதனால் இளம் தலைமுறையினரும் மாணவர்களும் இந்த வலையில் சிக்கி இரையாகிவருகிறார்கள். இருப்பினும், ஆபாச இணையதளங்களைப் பார்ப்பதில் இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆபாச இணையதளங்கள் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது.
ராஜ்

கருத்துகள் இல்லை: