ஞாயிறு, 3 மே, 2020

ஊரடங்கிலும் ஊழல் பிஸியில் எடப்பாடி: ஸ்டாலின்

ஊரடங்கிலும் ஊழல் பிஸியில் எடப்பாடி: ஸ்டாலின்மின்னம்பலம் : நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
துரை ஜெயக்குமார் என்ற பதிவுபெற்ற முதல் நிலை ஒப்பந்தக்காரர் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றினை பொதுநல வழக்காகத் தாக்கல் செய்துள்ளார். அதில் பாதிக்கப்பட்டவரே அவர் என்பதால், உயர்நீதிமன்றம் அந்த பொதுநல வழக்கை ரிட் மனுவாக தாக்கல் செய்ய அனுமதித்துள்ளது.
அதில், “தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை உப கோட்டங்களில் 462.11கி.மீ. நீள நெடுஞ்சாலைத்துறை சாலைகளை ஐந்து வருடங்கள் பராமரிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது 15.4.2020 அன்று ஆன்லைன் டெண்டர் தாக்கல் செய்ய கடைசி நாள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 32 பதிவு பெற்ற முதல்நிலை ஒப்பந்ததாரர்கள் செய்யும் வேலையை ஒரேயொரு ஒப்பந்ததாரருக்கு (MONOPOLY) வழங்கும் விதத்தில் இந்த டெண்டர் விடப்பட்டது” என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதனைக் குறிப்பிட்டு இன்று (மே 3) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “கொரானோ நோய்த் தொற்றில் மாநிலமே, ஏன், உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார். துரை ஜெயக்குமார் வழக்கில் கூறப்பட்டுள்ள முறைகேடுகள், அதிமுக ஆட்சியில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான நெடுஞ்சாலைத் துறையின் முறைகேட்டை அம்பலத்திற்குக் கொண்டு வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “துரை ஜெயக்குமார், ‘இந்த டெண்டரில் கூறப்பட்டுள்ள பணிகள் 500 கோடி ரூபாய் மட்டுமே மதிப்பிலானவை. ஆனால், 1165 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இது 700 கோடி ரூபாய் வரை அதிகம்’ என்றும் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அது தவிர “அரசு ஆணையில் உள்ள பணியின் ரூபாய் மதிப்பிற்கும் - டெண்டரில் உள்ள பணியின் ரூபாய் மதிப்பிற்கும் வேறுபாடு இருக்கிறது” என்பதையும் விளக்கிக் கூறியிருக்கும் அந்த மனுதாரர், டெண்டருக்காக குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் பல ஒருசில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களை மனதில் வைத்து, கொண்டு வரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒரு காண்டிராக்டர் ஊரடங்கு நேரத்திலும் வழக்குத் தொடருவதற்கு காரணமான இந்த டெண்டரில், துறை அமைச்சராக இருக்கும் பழனிசாமி - கொரோனா பணிகளுக்கு இடையிலும் அவசரம் காட்டியது ஏன்?” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாலை பராமரிப்புக்கான, ஐந்து வருட பணிகளுக்கு டெண்டர் விடுவதற்கு ஊரடங்கு முடிவிற்கு வரும் வரை ஏன் முதலமைச்சர் திரு. பழனிசாமி பொறுத்திருக்கவில்லை?கொரோனா நோய்த் தொற்றுப் பணியில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்; போர்க்கால அடிப்படையில் பணியாற்றுகிறோம் என்பதில், இப்படி உயர்நீதிமன்றம் வரை போகும் முறைகேடுகள் அடங்கிய டெண்டர்களை விடும் பணிகளும் அடங்கியுள்ளனவா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ள அவர்,
“இந்த வழக்கை நிச்சயம் உயர்நீதிமன்றம் விசாரிக்கத்தான் போகிறது. அந்த விசாரணையில் எடப்பாடியின் டெண்டர் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரத்தான் போகின்றன. எல்லா வழக்கிலும் ஓடோடிச் சென்று “ஸ்டே” வாங்குவது போல், இந்த வழக்கையும் இழுத்தடிக்க முதலமைச்சர் பழனிசாமி தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யலாம். ஆனால், இன்னும் எத்தனை நாட்களுக்கு அதிகார துஷ்பிரயோகம்? ஊரடங்கு நேர ஊழல்களும், கொரோனா கால கொள்ளைகளும், டெண்டர் முறைகேடுகளும் மக்கள் மன்றத்திற்கு வந்தே தீரும். எந்த ஊழலில் இருந்தும் யாரும் தப்பி விட முடியாது” என்று வலியுறுத்தியுள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை: