வெள்ளி, 28 நவம்பர், 2014

வைகுண்டராஜன் ?சகாயம் விசாரணைக்கு உத்தரவிட்டாலும் மக்ககள் போராட்டமின்றி அவ்விசாரணை முழுமையாக நடைபெறாது

வைகுண்டராஜன்கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையையே கரைத்து, விலையுயர்ந்த, அபூர்வமான தாதுமணலைக் கொள்ளையடித்தவர் வைகுண்டராஜன்
தாது மணல் கொள்ளைதாது மணல் mineral sand கொள்ளை! தூத்துக்குடி வ.உ.சி துறைமுகக் கழகத் தலைவராக இருந்த சுப்பையா ஐ.ஏ.எஸ்க்கு வைகுண்டராஜன் ரூ ஏழரை கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் வைகுண்டராஜனுக்கு மதுரை உயர்நீதி மன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிப்பதற்காக அவர் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் சொல்லுகின்றன. மிகப்பெரிய தொழிலதிபர், ஜெயா டிவியின் பங்குதாரர், சேனல் நியூஸ் 7 டிவியின் உரிமையாளர், செல்வாக்கு மிக்க பெரும்புள்ளி தலைமறைவாகி விட்டார் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தென் மாவட்டங்களின் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், கிரிமினல் கும்பல்களும் வைகுண்டராஜனின் அடியாட்களாக செயல்பட்டு வருவது நாடறிந்த உண்மை. அப்படிப்பட்டவர் இவர்களுக்கெல்லாம் தெரியாமல் தலைமறைவாகி விட்டார் என்று சொல்வது நாடகம் தவிர வேறு என்ன?


கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையையே கரைத்து, விலையுயர்ந்த, அபூர்வமான தாதுமணலைக் கொள்ளையடித்தவர் வைகுண்டராஜன். சட்டவிரோதமாகத் தோரியம் உள்ளடங்கிய மோனோசைட் தாதுவை தூத்துக்குடி துறைமுகம வழியாக வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்கு உறுதுணையாக இருந்தததற்காகத்தான் சுப்பையா ஐ.ஏ.எஸ்க்கு ஏழரை கோடி லஞ்சம் கொடுத்துள்ளார் வைகுண்டராஜன். இதை ஆதாரபூரவமாக கண்டுபிடித்து 2012-ம் ஆண்டு வழக்கு தொடுத்த சி.பி.ஐ இதுவரை அவரைக் கைது செய்யவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வைகுண்டராஜன் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தபோதுதான் இந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இப்போது சி.பி.ஐ சொல்கிறது. “வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டார். தனிப்படை அமைத்து தேடுகிறோம்” என்று. இது கண்துடைப்பு நாடகம். சி.பி.ஐயும், தமிழக அரசும் சேர்ந்து வைகுண்டராஜனை தெரிந்தே பாதுகாக்கின்றன.
வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டார் என்றால் சி.பி.ஐ அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துக்களை முடக்க வேண்டியதுதானே! அதை ஏன் செய்யவில்லை? எனவே, “வைகுண்டராஜனை உடனே கைது செய்! அவர் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்!” எனக் கோருகிறோம். வாழ்வாதாரத்திற்காக கூடங்குளத்தில் போராடும் மக்களையும், பிழைப்பிற்காக தாமிரபரணி, வைப்பாறு உட்பட தமிழக ஆறுகளில் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் ஏழை விவசாயிகளையும் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், குண்டர் சட்டத்திலும் கைது செய்வதோடு, இரவு 11 மணிக்கு மேல் வியாபாரம் செய்யும் சிறு ஹோட்டல்கள், டீக்கடைகள் மற்றும் நடைபாதைக் கடைகளை அடித்து நொறுக்கியும், மேற்படி கடைகளில் உள்ள போண்டா, வடைகளை பிறந்து பார்த்து, கெட்டுப் போனதாகக் கூறி கடை உரிமத்தையே ரத்து செய்யும் மத்திய, மாநில அரசுகளுக்கு மனித குலத்திற்கும் இயற்கை வளத்திற்கும் சவால் விடும் வைகுண்டராஜனை கைது செய்வது இயலாத காரியம்தானோ?
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இயற்கை வளக் கொள்ளைகளை விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசு அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டது. ஆனால், அரசு அதற்கு எந்த ஒத்துழைப்பும் அளிக்காத நிலையில் நீதிமன்றம் அரசுக்கு ரூ 10,000 தண்டம் விதித்து மீண்டும் உத்தரவிட்டது. ஆனால், அரசு நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழலை மட்டும் விசாரிக்க உத்தரவிட்டது. கிரானைட் ஊழலை முதலில் அம்பலப்படுத்தியது சகாயம் ஐ.ஏ.எஸ்தான். பி.ஆர்.பி மீது பல வழக்குகளைத் தொடுத்து, தொழிலை முடக்கி, அவரைப் பல மாதங்கள் சிறையிலும் வைத்தது தமிழக அரசு. இதுவரை கிரானைத் தொழில் முடங்கியுள்ளது.
ஆஷிஷ்குமார்
மணல் கொள்ளையை ஆய்வு செய்து அரசுக்கு புகார் அனுப்பிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் மறுநாளே பந்தாடப்பட்டார்.
ஆனால், தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளையை விடப் பெரியது. 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. சுற்றுச் சூழல் மாசு, புற்றுநோய், மீன்பிடி தொழில் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளோடு, பல இலட்சம் கோடி மதிப்புள்ள மோனசைட் எனப்படும் தடை செய்யப்பட்ட கனிமம் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எதிராகப் போராடிய மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். அவர்களுடைய முறையீடுகள் அனைத்தும் குப்பைக் கூடைகளுக்குப் போயின. மக்கள் தொடர்ந்து நேரடியாக பலமுறை முறையிட்டதால் மணல் கொள்ளையை ஆய்வு செய்து அரசுக்கு புகார் அனுப்பிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் மறுநாளே பந்தாடப்பட்டார்.
வருவாய்த்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் தமிழக அரசு குழு அமைத்து விசாரணை நடத்தியது. ஆனால், அந்த விசாரணை அறிக்கையைக் கூட வெளியிடவில்லை. நீதிமன்றம் கேட்டும் அறிக்கையை தர அரசு மறுத்து விட்டது. வைகுண்டராஜன் கொள்ளை கடற்கரையோடு நின்று விடவில்லை. உள்நாட்டு மக்களையும் பாதிக்கும் வகையில் செம்மண்ணான தேரிமண்ணையும், பல ஆண்டுகளாக சூறையாடி வருகிறார். இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவது நாடார் சமூக மக்களும்தான். இவ்வாறு அனைத்து சமூக மக்களையும், அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் வகையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ராஜாங்கத்தை நடத்தி வரும் வைகுண்டராஜன் மீது இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.
சகாயம் ஐ.ஏ.எஸ்
சகாயம் ஐ.ஏ.எஸ் விசாரித்தால் உண்மைகள் அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதால் தமிழக அரசு சகாயம் குழுவை முடக்க முயற்சி செய்கிறது
இந்தச் சூழலில்தான் டிராபிக் ராமசாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் சகாயம் குழு விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சகாயம் ஐ.ஏ.எஸ் விசாரித்தால் உண்மைகள் அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதால் தமிழக அரசு சகாயம் குழுவை முடக்க முயற்சி செய்கிறது. மக்களிடம் ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த ஜெயா அரசு, ஓட்டுப் போட்ட உழைக்கும் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் இது. தாதுமணல், கிரானைட் போலவே ஆற்றுமணல் கொள்ளையும் தமிழகத்தில் தாமிரபரணி, வைப்பாறு, தொடங்கி பாலாறு, காவேரி வரை மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக நடைபெறும் இந்தக் கொள்ளைகளை எதிர்த்த பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அரசு அளித்துள்ள உரிமத்தைப் பெயரளவுக்கு வைத்துக் கொண்டு பல்லாயிரம் மடங்கு அதிகமாக மாபெரும் கொள்ளையாக இது நடைபெற்று வருகிறது. இவற்றைத் தடுத்து நிறுத்த சகாயம் குழு விசாரணை வரம்பை தாதுமணல் – கிரானைட் – ஆற்று மணல் ஆகிய மூன்றுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
சகாயம் குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டால் கூட மக்ககள் போராட்டமின்றி அவ்விசாரணை முழுமையாக நடைபெறாது. அரசும், அதிகாரிகளும் அதை முடக்குவதற்கு முயற்சிப்பார்கள். ஆகவே, கடற்கரை மக்களின் பல்லாண்டு காலப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மீண்டும் தீவிரமாக போராடினால், தாதுமணல் நிறுவனங்களை மூடி மக்களின் வாழ்வாதார நிலையை பாதுகாக்கலாம். படுவேகமாக ந டைபெறும் அனைத்து இயற்கை வளக் கொள்ளைகளையும் தடுத்து நிறுத்தலாம். இதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமின்றி அனைத்துப் பிரிவு மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். வெறும் பார்வையாளர் என்ற நிலையில் இல்லாமல் பங்கேற்பாளராக எங்களோடு இணையுங்கள். நம் தாய் மண்ணை கனிம கொள்ளையர்களின் பிடியில் இருந்து மீட்டெடுக்க உங்களை அழைக்கிறது மனித உரிமை பாதுகாப்பு மையம்.
தூத்துக்குடி துறைமுகக் கழகத் தலைவருக்கு ஏழரை கோடி லஞ்சம்
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜன் தலைமறைவு!
சி.பி.ஐ.-யே உடனே கைது செய்! சொத்துக்களை முடக்கு!
தமிழக அரசே
கனிமவளக் கொள்ளையை விசாரிக்க நியமிக்கப்பட்ட சகாயம் குழுவை முடக்காதே!
தாதுமணல்-ஆற்றுமணல் கொள்ளைகளையும் விசாரிக்க உத்தரவிடு!
தமிழ்நாட்டை சூறையாடும் அனைத்து கனிமவளக் கொள்ளைகளையும் தடுத்து நிறுத்த போராடுவோம்!
இயற்கை,சுற்றுச்சூழல், தலைமுறைகளைக் காப்பாற்ற களத்தில் இறங்குவோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் : 29.11.2014, சனிக்கிழமை காலை 10.00 மணி
இடம் : பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு, தூத்துக்குடி
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
தூத்துக்குடி –  நெல்லை – குமரி மாவட்டங்கள்
9443527613, 9442339260, 9486643116

கருத்துகள் இல்லை: