செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

2ஜி வழக்கில் திகைக்க வைக்கும் திருப்பம்! சி.பி.ஐ. வக்கீல் வசமாக சிக்கி கொண்டார்!

viruviruppu.com நாட்டில் அரசியலையையே புரட்டிப் போட்ட 2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிரடித் திருப்பம்! சி.பி.ஐ. வக்கீலே, குற்றம் சாட்டப்பட்ட ஒருவருடன் ரகசிய டீல் வைத்து, சிக்கிக் கொண்டிருக்கிறார். அதையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்துள்ளது சி.பி.ஐ. இந்த விவகாரம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டு கமிட்டி கூட்டத்தில் புயல் அடிக்கும் என ஊகிக்கப்படுகிறது. சி.பி.ஐ., கடும் கண்டனத்தை சந்திக்க நேரலாம். காரணம், இங்கு குற்றம் சாட்டப்பட்டவருடன் ரகசிய டீல் வைத்தவர், சி.பி.ஐ.-யால் நியமிக்கப்பட்ட வக்கீல்! ஏ.கே.சிங் என்ற இந்த சி.பி.ஐ. வக்கீல், குற்றம்சாட்டப்பட்ட யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திராவுடன் போனில் பேசிய உரையாடல்களின் ஒலிப்பதிவு ஒன்று சிக்கியுள்ளது. அதையடுத்தே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவு செய்யப்பட்ட அந்த ஒலிப்பதிவு, 17 நிமிடங்கள் ஓடுகிறது. அதில், வழக்கு பற்றி பல்வேறு வியூகங்களை சஞ்சய் சந்திராவுக்கு ஏ.கே.சிங் கற்று கொடுத்துள்ளார். முக்கிய அரசுத்தரப்பு சாட்சி எப்படி சாட்சி அளிப்பார்? தனது தரப்பு வாதத்தை சஞ்சய் சந்திரா எப்படி நடத்த வேண்டும்? சி.பி.ஐ.யின் வியூகம் எப்படி இருக்கும்? எந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும்? என்பவற்றையெல்லாம் விலாவாரியாக அவர் சொல்லி ஒலிப்பதிவில் உள்ளது. இந்த கேசட்டின் அடிப்படையில், ஏ.கே.சிங், சஞ்சய் சந்திரா ஆகியோர் மீது சி.பி.ஐ. பூர்வாங்க விசாரணையை பதிவு செய்துள்ளது. இருவரிடமும் நேற்று சி.பி.ஐ. தலைமையகத்தில் வைத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் சி.பி.ஐ. வக்கீல் பொறுப்பில் இருந்து ஏ.கே.சிங் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வேறு வக்கீல் நியமிக்கப்பட்டாடுள்ளார். 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா பயனடையும் வகையில் செயல்பட்டதாகத்தான் ஆ.ராசா மற்றும் மத்திய அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்போது, சி.பி.ஐ. வக்கீலே இவருக்கு சாதகமாக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. டைரக்டர் ரஞ்சித் சின்கா, “அந்த கேசட்டில் இருப்பது ஏ.கே.சிங்-சஞ்சய் சந்திரா ஆகியோரின் குரல் தானா என்று என்னால் உறுதியாக கூற முடியாது. அதுபற்றி தடயவியல் சோதனையில்தான் தெரியும்.
ஆனால், மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது, அது அவர்கள் இருவருடைய குரல்கள் போலதான் தோன்றுகிறது. சி.பி.ஐ. வக்கீலாக இருந்த ஏ.கே.சிங், நீக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. ஒருவரின் தவறான செயல்பாட்டால், சி.பி.ஐ.யின் நேர்மைக்கு எந்த பாதிப்பும் வராது” என்றார். நாடாளுமன்ற கூட்டு கமிட்டி சேர்மன் பி.சி.சாக்கோ, “இது ஒரு மிக சீரியஸ் விவகாரம். நாடாளுமன்ற கூட்டு கமிட்டி கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) நிச்சயம் இது பெரிய புயலை கிளப்பும். சி.பி.ஐ. என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்க்கலாம்” என்றார். அதே சமயத்தில் யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா தரப்பு, “சி.பி.ஐ. வக்கீலுடன் பேசவில்லை” என்று மறுத்துள்ளது. யுனிடெக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏ.கே.சிங்கை கோர்ட்டுக்கு வெளியே சஞ்சய் சந்திரா பார்த்ததே இல்லை. டெலிபோனிலும் பேசியது இல்லை. அந்த குரல், சஞ்சய் சந்திராவின் குரலே அல்ல. மோசடியாக அது தயாரிக்கப்பட்டுள்ளது. அவரை களங்கப்படுத்த முயற்சி நடக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: