புதன், 11 மே, 2011

குடும்ப சுமை போக்க கண்ணிவெடி அகற்றும் ஆபத்தான பணியில் பெண்கள்!

கடந்த 30 வருடகால யுத்தத்தின் போது வட பகுதியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் வட மாகாண பெண்கள் ஆர்வாம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பிரித்தானியாவை சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனமொன்றும் வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்த அரச சார்பற்ற நிறுவனத்தில் இணைந்து பணியாற்றும் 29 வயதான யோகலிங்கம் ரூபகாந்தி சிறந்த முறையில் செயற்பட்டு வருவதோடு ஏனைய பெண்களுக்கும் கண்ணிவெடி அகற்றல் பயிற்சிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் பணி மிகவும் ஆபத்தானதும் வித்தியாசமானதுமாகுமென குறித்தப் பெண் வெளிநாட்டு ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போதான ஷெல் தாக்குதலில் தாய், தந்தை மற்றும் 3 சகோதர சகோதரிகளை இழந்த யோகலிங்கம் ரூபகாந்தி பாடசாலை செல்லும் தனது ஒரு சகோதரனின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு கண்ணிவெடி அகற்றும் ஆபத்தான தொழிலை செய்து வருகிறார்.

கண்ணிவெடி அகற்றுவதன் மூலம் முகாம்களில் உள்ள மக்களை மீளவும் அவர்களுடைய சொந்த இடத்தில் மீளக் குடியேற்ற முடியுமென அவர் தனது தொழில் குறித்த திருப்தியையும் வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: