புதன், 22 டிசம்பர், 2010

மீண்டும் படப்பிடிப்புக்கு அவர்களை அழைக்கும்போது படக்கென்று கேரவே

அத்தியாயம் 11
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அன்புவின் அனுபவம் ஒரு டைப்பான சுவாரஸ்யம். தாஜ்மஹால் படப்பிடிப்பு. கதாநாயகி ரியாசென் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு கண்ணீரோடு மாட்டு வண்டியில் பயணிப்பது போல காட்சி. கர்நாடக மாநிலத்தில் ஏதோ ஒரு அழகான பிரதேசத்தில் படமாக்கிக் கொண்டிருந்தார் பாரதிராஜா. குளோஸ் அப், மிட் ஷாட், லாங் ஷாட் என்ற வித விதமான கோணங்களில் படமாக்கிக் கொண்டேயிருந்தார்கள். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு விஷயத்தை கண்டுபிடித்தார் அன்பு. புது மணப்பெண்ணான ரியாசென் கழுத்தில் அணிந்திருக்க வேண்டிய தாலி மிஸ்சிங்.
டைரக்டரிடம் சொன்னால் இவ்வளவு நேரம் என்னய்யா பண்ணிட்டு இருந்தீங்க என்று அடி விழுந்தாலும் விழும். ஏனென்றால் இந்த தவறுக்கு பொறுப்பு கன்ட்டினியுடி பார்க்க வேண்டிய உதவி இயக்குனர்தான். அவ்வளவு பதற்றத்திலும், நைசாக ஒரு காரியம் செய்தார் அன்பு. ஒளிப்பதிவாளர் கண்ணனின் காதருகே போய் விஷயத்தைச் சொன்னார். முதலில் திடுக்கிட்ட அவர், அந்த ஷாட் முடிகிற வரைக்கும் காத்திருந்தார்.
பிறகு மெல்ல பாரதிராஜாவிடம் போய், அந்தப் பொண்ணு மாலையை கழட்டுற மாதிரி ஒரு ஷாட் எடுத்துரலாமே என்றார். ம்ம்ம்.. சரிய்யா என்றார் அவரும். அந்த இடைவெளியில் ஒரு தாலியை அவசரம் அவசரமாக ரியா கழுத்தில் மாட்டினார்கள். அதையும் ஜாக்கெட்டுக்குள் பதுங்கியிருப்பது மாதிரி மாட்டினார்கள். மாலையைக் கழற்றும்போது ஜாக்கெட்டுக்குள்ளிருந்து அந்தத் தாலி வெளியே வருவது போலவும் ஒரு ஷாட் எடுத்தார் கண்ணன். இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் ஒளிப்பதிவாளரிடம் சரண் அடைந்துவிட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என்பதும் ஒரு யுக்தி.
இப்படி ஒவ்வொன்றையும் ஆரம்பித்தால் எல்லா திரைப்படத்திலிருந்தும் ஒரு காட்சி தேறும் என்பதால் அடுத்தப் பகுதிக்குப் போவோமோ?
நடிகர் நடிகைகளைக் கையாளும் விதம் :
செய்கிற வேலையிலேயே கொஞ்சம் ரிஸ்கான வேலை இதுதான். அநேகமாக எல்லா நடிகர், நடிகைகளுமே அனிச்ச மலர் டைப் எனலாம். சின்ன மனக்குறை என்றாலும் லென்ஸ் வைத்துக் காட்டியதைப் போல முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதனால் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் கண்ணாடி கிளாஸ் போலவே கையாள வேண்டும் இவர்களை.
உதாரணத்திற்கு ஒரு சின்ன விஷயத்தைச் சொல்லலாம். ஒரு நடிகர் நடித்துக் கொண்டிருக்கிறார். முதல் டேக்கில் அவர் சொதப்பி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த ஷாட் போகும். அதிலும் முடியவில்லை என்றால் அடுத்தது. இப்படி ஷாட்டுகள் தொடர்ந்து கொண்டே போகும்போது ‘ஷாட் ஒன்று இரண்டு’ என்று உரக்கச் சொல்லிக்கொண்டே கிளாப் அடிப்பார் உதவி இயக்குனர். ஒன்று இரண்டுகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போய் ஷாட் நம்பர் பத்து என்று சொல்கிறபோது எவ்வளவு நம்பிக்கையோடு அந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும், முகம் இருண்டுவிடும் நடிகருக்கு. அதனால் புத்திசாலி உதவி இயக்குனர் என்ன செய்வார் தெரியுமா?
ஷாட் ஒன்… ஷாட் டூ என்று அடுக்கிக் கொண்டேயிருப்பார். ஒரு கட்டத்தில் அதை நீளவிடாமல் திடீரென்று ஷாட் ஒன் ஏ என்று சுருக்கிக் கொள்வார். அது பி, சி என்று நகருமே தவிர பத்தை நோக்கிப் போகாது. இந்த எண்ணிக்கை யுக்தி மேலோட்டமாகப் பார்த்தால் பெரிய விஷயமாகத் தெரியாது. உளவியல் ரீதியாகப் பார்த்தால் கிரேட்! அடிக்கடி ரீ டேக் வாங்குகிற ஹீரோ சோர்வடைய மாட்டார் அல்லவா?
இன்னொரு விஷயம். எவ்வளவுதான் நெருங்கிப் பழகிய நடிகர் என்றாலும் பொது இடங்களில் அவர்களுக்கான மரியாதையை உதவி இயக்குனர் என்பவர் கொடுத்தே ஆக வேண்டும். அந்த நேரத்தில் முதுகைத் தட்டிப் பேசுவது, மேலே விழுந்து நசுக்குவது போன்ற கீழ் குணங்களோடு நடந்து கொண்டால் அது அவரது எதிர்காலத்தையே குழி தோண்டிக் கூடப் புதைக்கலாம். உதாரணத்திற்கு ஒரு சம்பவம்.
அஜீத் நடித்த பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் நித்யா. படப்பிடிப்பு முடிந்தால் பணி முடிந்ததென்று வீட்டுக்கு போய்விடுகிறவர் அல்ல அஜீத். தனது யூனிட்டைச் சேர்ந்த உதவி இயக்குனர்களோடு பேட்மிட்டன் ஆடுவார். வீட்டுக்கு வரச்சொல்லி மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார். இப்படியே அஜீத்திடம் மிக நெருங்கிப் பழக ஆரம்பித்தார் நித்யா. இந்தப் பழக்கம் எந்தளவுக்கு வளர்ந்தது என்றால், நித்யாவுக்கு கால்ஷீட் கொடுத்து அவரை விரைவில் இயக்குனராக்கிவிட வேண்டும் என்று அஜீத்தே ஆசைப்படுகிற அளவுக்கு.
விதி இருக்கிறதே, அது தேர் ஏறியும் வரும். சில நேரங்களில் திண்ணையிலும் படுத்திருக்கும். இந்த பாழாய்ப் போன விதி, நித்யாவுக்கு அவர் சொன்ன ஒரு ஜோக்கில் குடியிருந்தது. ஒரு மாலை நேரம் அஜீத் வீட்டுக்குப் போயிருந்தார் நித்யா.
சிலருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கும். ஜோக்கடிப்பார்கள். அந்த ஜோக்குக்கு அவர்களே குய்யோ மொய்யோ என்று குரல் விட்டு சிரிப்பார்கள். அப்படியே ஓடிவந்து அந்த ஜோக்கை ரசித்துக் கொண்டிருக்கும் நம்மையும் ஒரு தாக்கு தாக்குவார்கள். அதாவது நமது முதுகில் ஓங்கி தட்டிவிட்டு சிரிப்பார்கள். இவர்கள் ஜோக் சொல்ல ஆரம்பிக்கும்போதே பாதுகாப்பான தூரத்தில் நின்று அதை ரசிக்கப் பழகியிருப்பார்கள் சக தோழர்கள். நித்யாவும் அப்படி ஒரு ஜோக்காளிதான்.
திருமதி அஜீத்தும் அந்த சந்திப்பின்போது இருந்தார். ஏதோ ஒரு ஜோக் சொல்லிவிட்டு அப்படியே எழுந்து ஓடிப்போய் அஜீத்தின் வயிற்றில் குத்திவிட்டார் நித்யா. கொஞ்சம் வாய்விட்டு சிரிக்கக் கூடிய பெரிய ஜோக் போலிருக்கிறது. அதற்கேற்றாற்போன்ற முரட்டுக் குத்து அது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷாலினி கோபத்தில் விருட்டென்று எழுந்து உள்ளே போக, முகத்தில் வலியைக் காட்டிக் கொள்ளாமல் இறுக்கமானார் அஜீத். அந்த அறையே வேறொரு மூடுக்குப் போனது. “சரி, நான் நாளைக்கு வர்றேன்” என்று கிளம்பினார் நித்யா. மறுநாள் அவர் போனபோது பழைய அஜீத்தைப் பார்க்க முடியவில்லை அவரால். நித்யா அஜீத்தை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை அந்த சம்பவத்தால் நிறைவேறாமல் போனது. பல வருடங்களுக்குப் பின் அவர் எடுத்த ‘வேதா’ என்ற படமும் ஓடவில்லை. நித்யாவுக்காக காத்திருந்த ஒரு பெரிய வாழ்க்கையை வெள்ளந்தியான அவரது குணமே காவு வாங்கியது.
நடிகர், நடிகைகளைப் படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்கு அழைத்து வருவதே ஒரு கலை. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்காக லைட்டிங் செட் பண்ணிக் கொண்டிருப்பார் ஒளிப்பதிவாளர். அந்த இடைவெளியில் சில நடிகர், நடிகைகள் கேரவேனுக்குள் புகுந்து கொள்வார்கள். அல்லது தன்னை பார்க்க வந்த ரசிகர்களோடு பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னும் பலர் அந்த நிமிடத்திலும் ஒரு குட்டி தூக்கம் போட்டுக் கொண்டிருப்பார்கள். புத்தகம் படித்தல், சீட்டாடுதல் போன்ற விஷயங்களும் நடக்கும்.
மீண்டும் படப்பிடிப்புக்கு அவர்களை அழைக்கும்போது படக்கென்று கேரவேன் கதவை தட்டி, ஷாட் ரெடி சார். வாங்கன்னு சொல்வது அவ்வளவு நாகரிகம் அல்ல. அப்படியென்றால் என்ன செய்வதாம்? பெரும்பாலும் இந்த கேரவேன் கதவுகளுக்கு வெளியே தங்கள் மேக்கப் மேனையோ காஸ்ட்யூமரையோ நிறுத்தி வைத்திருப்பார்கள் நடிகர்கள். அவர்களிடம் சொல்லி கதவை திறக்க செய்யலாம். அப்படி திறக்கிற நேரத்தில் தனது வருகையை அவர்களுக்கு அறிவித்துவிட்டு கீழேயே நிற்கலாம்.
டைரக்டர் பாண்டியராஜன், பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்த புதிதில் ஒரு காமெடி செய்தார்.
அது அடுத்தவாரம்.

கருத்துகள் இல்லை: