வெள்ளி, 21 அக்டோபர், 2022

பாகிஸ்தான் இம்ரான் கான் 5 ஆண்டு தேர்தலில் நிற்க தடை!

minnambalam.com -  Kalai  :  இலவச பரிசுப் பொருட்கள் தொடர்பான வழக்கில் 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.  
“தோஷ்கானா” என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தின் கீழ்  1947ல் உருவாக்கப்பட்டத் துறை. இந்த துறை என்பது நாட்டின் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் அதிகாரிகள் பெறும் பரிசு பொருட்களை பெற்று பாதுகாக்கும்.
தோஷ்கனாவில் இருந்து குறிப்பிட்ட தள்ளுபடி விலையில் பொருளை வாங்கி வைத்து கொள்ளவும் வழிவகை இருந்தது.
2018ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற இம்ரான்கான், பல்வேறு வெளிநாடு பயணத்தின் போது குறிப்பாக அரபு ஆட்சியாளர்களிடம் இருந்து விலையுயர்ந்த கடிகாரம், பேக் உள்ளிட்ட பரிசு பொருட்களை பெற்றுள்ளார்.
அந்த பரிசு பொருட்கள் தோஷ்கனாவில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அந்த பெருட்களுக்கு தள்ளுபடி அறிவித்து,

பின்னர் தள்ளுபடி விலையில் இம்ரான் கான் அந்த பொருட்களை வாங்கி அதனை வெளியில் அதிக தொகையில் விற்பனை செய்ததாகப் புகார் எழுந்தது.

இது குறித்து பாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜா தலைமையிலான 4 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி இன்று(அக்டோபர் 21) தீர்ப்பளித்தது.

அதில், இம்ரான் கான் குற்றம் செய்தது உறுதியானது என்றும் சட்டப்பிரிவு 63ன் கீழ் இம்ரான் கான் 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதித்து, தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இம்ரான் கான் உதவியாளர் ஃபவாத் சவுத்ரி, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட போவதாக கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பால் இம்ரான்கான் அவரது எம்.பி பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கலை.ரா

கருத்துகள் இல்லை: