சனி, 22 அக்டோபர், 2022

தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 40 கோடி ரூபாய்... முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குற்றச்சாட்டு

tamil.samayam.com  : தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியின் போது, ஜெயலலிதாவின் திடீர் மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவியது.
அப்போது 2017 ஆம் ஆண்டு, பன்வாரிலால் புரோஹித் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
நான்கு ஆண்டுகள் தமிழக ஆளுநராக இருந்த அவர், 2021 இல் இங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு, பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தற்போது பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பு வகித்துவரும், தமிழகத்தின் முன்னாள் ஆளுநரான பன்வாரிலால் புரோஹித், பல்கலைக்கழக துணேவேந்தர்கள் நியமனம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளது தமிழக அரசியல் அரங்கில் புயலை கிளம்பும் விதத்தில் அமைந்துள்ளது.
" தமிழக கவர்னராக நான்கு ஆண்டுகள் பதவி வகித்த காலத்தில் அங்கு நிலைமை மோசமாக இருந்தது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி 40 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. ஆனாலும் சட்ட விதிகளின்படியே 27 பல்கலைகழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து உத்தரவிட்டேன்.

பஞ்சாப்பில் யார் தகுதியானவர்கள், யார் தகுதியற்றவர்கள் என்றெல்லாம் எனக்கு தெரியாது. மாநிலத்தின் கல்வி தரம் உயர வேண்டும் என்பது மட்டுமே என் எண்ணம். இதற்கு பஞ்சாப் மாநில அரசு என்னிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.


பல்கலைக்கழகங்களின் பணிகளில் ஆளுநர் தலையிடுவதாக பஞ்சாப் மாநில அரசு குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் இதில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஆளுநரிடமே உள்ளது. பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது. துணைவேந்தர் பதவி நீட்டிப்புக்கு அரசு மூன்று முறை கடிதம் அனுப்பியது. நியமனத்தில் ஆளுநருக்கு பங்கு இல்லை என்றால், பதவி நீட்டிப்பு வழங்குவதில் அவருக்கு எப்படி பங்கு இருக்க முடியும்? என்று புரோஹித் கேள்வி எழுப்பு உள்ளார்.

கருத்துகள் இல்லை: