புதன், 19 அக்டோபர், 2022

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே! கடந்து வந்த பாதை என்ன? New Congress chief , who is Mallikarjun Kharge?

நாங்கள் திராவிடர்கள் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நீங்கள் ஆரிய .... என்று நாடாளுமன்றத்தில் அன்று முழங்கியவர் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் காங்கிரஸ் தலைவரானது பொன்னெழுத்தினால் பொறிக்கப்பட்ட வேண்டிய நிகழ்வு .. வாழ்த்துக்கள் hindutamil.in  :; புதுடெல்லி: கடந்த 24 ஆண்டுகளாக காந்தி - நேரு குடும்பத்தின் வசம் இருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி, தற்போது காந்தி - நேரு குடும்பத்தின் தீவிர விசுவாசியாக அறியப்படும் மல்லிகார்ஜுன கார்கே வசம் வந்து சேர்ந்திருக்கிறது. அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்ப்போம்.

மாணவர் பருவம்: கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் பல்கி வட்டத்தில் உள்ள வரவட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மாபண்ண கார்கே - சபவ்வா தம்பதிக்கு 1942, ஜூலை 21ம் தேதி மகனாக பிறந்தவர் மல்லிகார்ஜுன கார்கே. கர்நாடகாவின் குல்பர்காவில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ பட்டமும், குல்பர்காவில் உள்ள எஸ்.எஸ்.எல் சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி பட்டமும் படித்தவர்.
தொழிற்சங்க போராளி: குல்பர்கா அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் தேர்தலில் போட்டியிட்டு பொதுச்செயலாளராக தேர்வான மல்லிகார்ஜுன கார்கே, சட்டப்படிப்பு முடித்த பிறகு நீதிபதி சிவராஜ் பாட்டீலின் அலுவலகத்தில் ஜூனியராக பணியாற்றத் தொடங்கி, தொழிற்சங்க வழக்குகளில் ஆஜராகி வந்தார். 1969ல் எம்.எஸ்.கே மில் தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக செயல்பட்ட அவர், சம்யுக்த மஸ்தூர் சங்கம் எனும் தொழிற்சங்கத்தின் செல்வாக்கு மிக்க நபராக உருவெடுத்தார். தொழிலாளர் உரிமைகளுக்காக இந்த சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தினார்.

காங்கிரஸ் கட்சியும் கார்கேவும்: 1969ல் தனது 27ஆவது வயதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்லிகார்ஜுன கார்கே, குல்பர்கா மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றார். 1972ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் குர்மித்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்கே, 1974ல் அரசின் தோல்பொருள் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும், 1976ல் பள்ளிக் கல்வித்துறை இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

1978ல் குர்மித்கல் சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன கார்கே, கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சராக பொறுப்பேற்றார். 1980ல் கர்நாடகாவின் முதல்வராக இருந்த குண்டு ராவ் அமைச்சரவையில் வருவாய்த் துறை கேபினெட் அமைச்சரானார் கார்கே. 1983ல் குர்மித்கல் தொகுதியில் 3வது முறையாக வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரான கார்கே, 1985-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்வானார் கார்கே.

1989ல் 5வது முறையாக குர்மித்கல் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான மல்லிகார்ஜுன கார்கே, 1990ல் பங்காரப்பா அமைச்சவையில் வருவாய்த் துறை அமைச்சரானார். இதையடுத்து ஏற்பட்ட வீரப்ப மொய்லி அமைச்சரவையில் 1992 முதல் 1994 வரை கூட்டுறவு அமைச்சராகவும், நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்களுக்கான அமைச்சராகவும் பதவி வகித்தார்.

குர்மித்கல் தொகுதியில் 6வது முறையாக 1994ல் வெற்றி பெற்ற கார்கே, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார். 1999 சட்டப்பேரவைத் தேர்தலில் 7வது முறையாக வெற்றி பெற்றார் கார்கே. இம்முறை, மாநில முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருந்தார். எனினும், முதல்வராக எஸ்.எம். கிருஷ்ணா பதவி ஏற்றதை அடுத்து அவரது அமைச்சரவையில், உள்துறை அமைச்சரானார்.

‘சந்தன கடத்தல்’ வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தியபோது கர்நாடகாவின் உள்துறை அமைச்சராக இருந்தவர் கார்கேதான். 2004ல் 8வது முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்வானார் மல்லிகார்ஜுன கார்கே. இம்முறையும் முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருந்தார். எனினும், தரம் சிங் முதல்வரானார். இதையடுத்து, அவரது அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் நீர்வளத் துறை அமைச்சராக பதவி ஏற்றார் கார்கே.

2005ல் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே, 2008ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 9 ஆவது முறையாக வெற்றி பெற்றார். இம்முறை கர்நாடக பேரவை எதிர்க்கட்சித் தலைவராக 2வது முறையாக பொறுப்பேற்றார்.

2009ல் குல்பர்கா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன கார்கே, 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்ததை அடுத்து நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார் கார்கே.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் குல்பர்கா தொகுதியில் போட்டியிட்ட கார்கே, பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவிடம் தோல்வியுற்றார். இதுதான் இவர் சந்தித்த முதல் தேர்தல் தோல்வி. எனினும், 2020 ஜூன் 12ல் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வான கார்கே, அதுமுதல் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார்.

இந்நிலையில்தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்திய மூத்த தலைவர்களில் கார்கே மிக முக்கியமானவர். காந்தி - நேரு குடும்பத்தின் தீவிர விசுவாசி இவர். அந்த குடும்பமும் இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி - நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடாத நிலையில், அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரான ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் போட்டியிட இருந்தார். எனினும், ராஜஸ்தான் முதல்வராகவும் தொடர வேண்டும் என்ற தனது விருப்பம் நிறைவேற வாய்ப்பில்லை என்பதை அறிந்த உடன், போட்டியில் இருந்து பின்வாங்கினார் கெலாட். இதையடுத்து, அவருக்குப் பதிலாக களமிறக்கப்பட்டார் மல்லிகார்ஜுன கார்கே.

கடந்த காலங்களில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இம்முறை தேர்தலில் போட்டி இருக்கும் என்றும் தான் போட்டியிடுவது உறுதி என்றும் அறிவித்தார் சசி தரூர். போட்டியை தவிர்க்குமாறு சசி தரூரை கேட்டுக்கொண்டார் கார்கே. எனினும், தரூர் பிடிவாதம் காட்டியதை அடுத்து, கடந்த 17ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றது. நேரு - காந்தி குடும்பத்தின் பிரதிநிதியாக கார்கே களமிறக்கப்பட்டதால் அவரது வெற்றி, வாக்குகள் எண்ணும் முன்பே உறுதியானது. எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார் என்பதை அறிந்து கொள்ளவே வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு கார்கேவுக்கு ஆதரவு இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பதிவான வாக்குகள் 19ம் தேதியான இன்று டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் பதிவான 9,385 வாக்குகளில் 7,897 வாக்குகள் பெற்று கார்கே வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள கார்கேவின் இல்லத்திற்கு வருகை தந்த விடைபெறும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

காந்தி - நேரு குடும்பத்தின் ஆதரவுதான் மல்லிகார்ஜுன கார்கேவின் வெற்றிக்குக் காரணம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதுதான் கார்கேவின் பலம். ஆனால், இனி இது அவருக்கு பலவீனமாக மாறலாம் என்ற கணிப்பையும் பலரும் முன்வைக்கின்றனர்.

சுதந்திரமாக முடிவெடுக்கும் ஆளுமை மிக்க தலைவர் என்ற பெயரா அல்லது காந்தி - நேரு குடும்பத்துக்கான பொம்மை தலைவர் என்ற பெயரா - இரண்டில் எது அவருக்கு பொருந்தப் போகிறது என்பதை இனிவரும் காலம் சொல்லும். பொறுத்திருத்திருந்து பார்ப்போம்

கருத்துகள் இல்லை: