திங்கள், 12 மார்ச், 2018

பாலுமகேந்திரா புத்தக சாலை... படைப்புத் திறனை மெருகூட்ட...

மின்னம்பலம் :தினேஷ் பாரதி
உதவி இயக்குநர்கள் தங்களின் படைப்புத் திறனை மெருகூட்டிக்கொள்ள பாலுமகேந்திரா புத்தக சாலை என்ற பெயரில் புதிதாக நூலகம் ஒன்றை தொடங்கவிருக்கிறார் இயக்குநர், நடிகர், எழுத்தாளர், பதிப்பாளர் அஜயன் பாலா.
திரைத் துறையில் இயக்குநராக வேண்டும் என்ற கனவில் நாளும் வெவ்வேறு துறை சார்ந்த இளைஞர்கள் சென்னையை நோக்கிப் படையெடுத்து வந்தவண்ணம் இருக்கின்றனர். உதவி இயக்குநர்கள் தங்களின் அறிவை மேம்படுத்திக்கொள்ளப் புத்தகங்களை நாடுகிறார்கள். ஆனால், அவர்களின் முழுமையான தேவையை அரசு துறை சார்ந்த நூலகங்களால் நிறைவேற்ற முடிவதில்லை. அதேசமயம் தான் விரும்பும் புத்தகங்களை வாங்கிப் படிப்பதற்கான பணமும் அவர்களிடம் இருப்பதில்லை.
உதவி இயக்குநர்களின் இத்தகைய நிலையைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் தமிழில் மிகச் சிறந்த 5,000 புத்தகங்கள் கொண்ட நூலகம் ஒன்றை ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்க இருப்பதாக அஜயன் பாலா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் சினிமா நூல்களை கொண்ட நூலகமாகவும், நண்பர்களின் நல்ல நூல்களின் கொடையும் நூலகத்தைச் சிறப்பிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.


இது சம்பந்தமாக அவரைத் தொடர்புகொண்டபோது, நூலகம் அமைப்பது சார்ந்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த உரையாடலின் சில பகுதிகள்...
எழுத்தாளர், பதிப்பாளர், இயக்குநர், நடிகர் என பல தளங்களில் இயங்குகிறீர்கள். நூலகம் அமைப்பதற்கான எண்ணம் எப்படி வந்தது?
குட்டி நூலகம் என்று சொல்லுமளவுக்கு என் வீட்டில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. உதவி இயக்குநர்கள் பலரும் என்னிடம் புத்தகங்கள் வாங்கிச் சென்று படித்துவிட்டு மீண்டும் என்னிடம் திருப்பிக் கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நிறைய பேருக்கு வாசிக்கப் புத்தகங்கள் கொடுப்பதை எழுதி வைத்துக்கொண்டும், பின்னர் திருப்பித் தந்ததும் அதை வரவு வைத்துக்கொள்வதுமாகத் தொடர்ந்து செய்துவந்தேன். இந்தச் செயல்பாடுதான் ஒரு நூலகம் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கியது.
எதற்காக இந்த முன்னெடுப்பு?
அரிதான புத்தங்கள் பல பதிப்பில் இல்லாமல் இருக்கின்றன. படம் சம்பந்தமான கதை விவாதங்களில் நமக்குத் தேவையான புத்தகம் சரியான நேரத்தில் கிடைத்து விடுவதில்லை. அந்தப் புத்தகங்களை பெறுவதற்காக ஃபேஸ்புக், வாட்ஸ்அப், போன் மூலமாக பலரிடம் தொடர்புகொண்ட பிறகே வாங்கிப் படிக்கும் நிலை உருவாகிறது. அதனால் ஒரு நூலகம் தொடங்கி அதில் அரிதான புத்தகங்கள் இடம்பெறச் செய்து, பலரின் தேவையைப் பூர்த்தி செய்யலாம் என்ற யோசனையே இந்த முன்னெடுப்பு.
புத்தகம் சார்ந்த நூலகமாக மட்டுமே இது இருக்குமா?

புத்தகம் சார்ந்த நூலகமாக மட்டுமில்லாமல் உலகின் அனைத்து மொழி சார்ந்த தரமான சினிமாவும் கிடைக்கக்கூடிய விர்ச்சுவல் லைப்ரரியாகவும், உலகின் தலைசிறந்த திரைப்படங்கள் கிடைக்கக்கூடிய சேகரமாகவும் இந்த நூலகம் இருக்கும்.
முழுக்க சினிமா சார்ந்த ஒன்றா?
சினிமாவுக்கு இலக்கியம் தேவையானதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக நாவல் மிக முக்கியமான ஒன்று. அதனால் தமிழின் மிக முக்கியமான நாவல்கள் பல இதில் இடம்பெறும். ஓர் அறிவுச் சேகரமாக இதை உருவாக்கவிருக்கிறேன். சமூகத்துக்கு, கலைக்கு, தமிழ் சினிமாவுக்கு உதவும் வகையில் இது ஒரு மையமாகவும், எல்லாரும் தங்களின் அறிவைப் பரிமாறிக்கொள்ளும் இடமாகவும் இது இருக்க வேண்டும் என்பதே என் இலக்கு.
இதில் உங்களின் பங்களிப்பு மட்டுமே இருக்கிறதா, அல்லது மற்றவர்களும் பங்களிப்பு செய்கிறார்களா?
என்னுடைய பங்களிப்பு மட்டுமில்லாமல் எல்லாருடைய பங்களிப்பிலும் இது உருவாகவிருக்கிறது. என்னிடம் 2,000 புத்தகங்கள் இருக்கின்றன. அதில் தேர்வு செய்தால் 900 புத்தகங்கள்தான் தரமானதாக இருக்கும். அதனால் என்னிடம் இல்லாத தரமான பல புத்தகங்கள் நண்பர்களிடம் இருக்கின்றன. அவர்களும் அந்தப் புத்தகங்களைக் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். ஆகையால், அனைவரின் பங்களிப்பும் இதில் இருக்கும்.

(நூலகத் தொடக்கப் பணிகளைப் பார்வையிட்ட இயக்குநர் சுப்ரமணியம் சிவா)
எங்கு இந்த நூலகத்தை அமைக்கவிருக்கிறீர்கள்?
சாலி கிராமம் (சென்னை) திலகர் தெருவில் தற்சமயம் சின்னதாக அலுவலகம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறேன். ஏப்ரல் 14ஆம் தேதி அலுவலகத் திறப்பு விழா தொடங்கத் திட்டமிட்டிருக்கிறேன். புத்தகப் பாதுகாப்புக்கான ரேக் அமைத்தல் உள்ளிட்ட முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது சம்பந்தமான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.
நூல்களை நன்கொடை அளிக்க விரும்புவோர் தொடர்புகொள்ள: அஜயன் பாலா முகநூல். செல்பேசி: 9884060274.

கருத்துகள் இல்லை: