வெள்ளி, 16 மார்ச், 2018

நடிகை ஸ்ரீ வித்தியாவின் வீடு ஏலத்திற்கு வருகிறது ...

மறைந்த நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்!மின்னம்பலம் :வரி ஏய்ப்பு செய்ததால் வருமானத் துறையினர் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வீட்டை ஏலத்தில் விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்தவர் ஸ்ரீவித்யா. 80களில் முன்னணி நடிகையாக இருந்த இவர் பல்வேறு குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். சென்னை அபிராமபுரத்தில் உள்ள வீட்டில் வசித்துவந்த இவர், 2006ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார். இவரின் இறப்புக்குப் பிறகு, இவரது அபிராமபுர வீட்டை அவரின் சகோதரர் கே.பி.கணேஷ்குமார் என்பவர் நிர்வகித்துவந்தார். அந்த வீடு தற்போது மாதம் 13,000 ரூபாய்க்கு வழக்கறிஞர் உமாசங்கர் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இந்த வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரூ. 45,28,000 வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதன் காரணமாக, அவரது வீட்டை வரும் 26ஆம் தேதி வருமான வரித் துறை ஏலத்தில் விடுகிறது. இதன் ஆரம்பக் கட்ட ஏலத் தொகை, ரூ.1.14 கோடி. இது குறித்த நோட்டீஸ் அவரின் இல்லத்தின் முன்பு ஒட்டப்பட்டுள்ளது.
இது குறித்து உமாசங்கர் ஆன்மனோரமா இணையதள பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், “கடந்த 2005ஆம் ஆண்டு ஸ்ரீவித்யா வீட்டில் வாடகைக்குக் குடியேறினேன். ஸ்ரீவித்யா 2006ஆம் ஆண்டு இறந்த பிறகு அவரது வீட்டை கே.பி.கணேஷ்குமார் நிர்வகித்துவந்தார்.ஸ்ரீவித்யா கடந்த 1996ஆம் ஆண்டிலிருந்து வருமான வரி கட்டவில்லை. தற்போது அந்தத் தொகை 45லட்சமாகியுள்ளது. அதனால் வருமான வரித் துறை வீட்டை ஏலமிடவுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: