வெள்ளி, 23 நவம்பர், 2012

கூவம் நதிக்கரையோரம்….எல்லாத்தையும் மனசுல அடக்கினு வாழறோம். வேற என்ன பண்ண முடியும்?”


பில்டர் காபி, இசிஆர் சாலை, ஷாப்பிங் மால்கள், ஹிந்து பேப்பர், சரவண பவன்கள் போன்றவை சென்னையின் அடையாளங்களாக உங்கள் மனதில் நிழலாடினால். உங்கள் கண்களையும் மனதையும் திறந்து வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்.
கூவம்சென்னையில் இன்று எந்த ஆற்றைக் கடக்கும் போதும், நமது கை அனிச்சைச் செயலாக மூக்கைப் பொத்தி விடுகின்றது, அல்லது சுவாசிப்பை சில விநாடிகளுக்கு நிறுத்த முனைகிறோம். சில விநாடிகள் அங்கு நிற்க வேண்டுமானால் கூட பல முறை “உச்” கொட்டி நொந்து கொள்கிறோம். ஆனால் சென்னையை தமது உழைப்பால் உயர்த்திக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களும், சென்னையின் பூர்வ குடிகளும் அந்த ஆற்றங்கரைகளில் துர்நாற்றத்தின் மத்தியில் தான் பல ஆண்டுகளாக வாழ்கிறார்கள்.
ஃபில்டர் காபி, மைலாப்பூர், எல்ஐசி, இசிஆர் சாலை, ஷாப்பிங் மால்கள், ஹிந்து பேப்பர், அதை படிக்கும் நடுத்தர வர்க்கம் சென்னையின் அடையாளங்களாக உங்கள் மனதில் நிழலாடினால். உங்கள் கண்களையும் மனதையும் திறந்து வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்.
சென்னை நகர வளர்ச்சியின் உண்மையான சாட்சியாக இருக்கும் மக்களை துர்நாற்றம் வீசும் ஆறுகளின் ஓரங்களில் நீங்கள் பார்க்கலாம். துர்நாற்றத்தைத் தாங்கிக்கொண்டு சில நொடிகள் நிற்க முடிந்தால் அவர்கள் உலகத்தினுள் நாம் நுழைந்து விடலாம்.


சென்னையின் ஐடி வளர்ச்சியை சுட்டிக் காட்டும் டைடல் பார்க், பின்னால்  அதன் கழிவுகள் கலந்தபடி இருக்கும் அடையாறு கரையோரமாக வாழும் மக்களைச் சந்திக்க சென்றோம். சைதாப்பேட்டை பாலத்தின் மேல் இருந்து பார்த்தபோது, பல சிறுவர்கள் ஆற்றின் ஓரம் சேற்றுப் பகுதியில் விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆற்று நீரை ஒட்டி இருக்கும் குடிசைகள் கரையில் இருக்கின்றனவா அல்லது ஆற்றில் இருக்கின்றனவா என்று பிரித்தறிய சிரமமாக இருந்தது.
பிறந்த சில நாட்களே ஆன குழந்தையை சர்வசாதாரணமாக பெரியவர் ஒருவர் தூக்கிக் கொண்டு சென்றார். கான்கிரீட் தரை போடப்பட்ட குறுகலான ‘தெரு’க்களில் நடந்து குடியிருப்புப் பகுதியின் விளிம்பில் இருக்கும் குடிசைகளுக்கு அருகில் சென்றோம். டைல்ஸ் போட்டு சுத்தமாக இருந்த தெருவோர அம்மன் கோவிலில் இருந்த ஒலிபெருக்கியில் பாடல் அலறிக் கொண்டிருந்தது.
ஒரு ஓலைக் குடிசையின் வெளியே ஒரு பெண்மணி துணி துவைத்துக் கொண்டிருந்தார். குடிசைக்குள் நான்கைந்து குழந்தைகள் திருத்தமாக உடையணிந்து, பாட்டுப் பாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். குடிசையின் மறுபக்க சுவரைத் தாண்டினால் ஆற்று நீரைத் தொட்டு விடலாம்.
‘என்னம்மா குடிசைக்குள்ள தண்ணி வந்திடுச்சு?’ என்று கேட்டபடியே பேச்சுக் கொடுத்தோம். அவர் எல்லாவற்றையும் புட்டுபுட்டு வைத்தார். பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு குழந்தை ஒற்றையடிப் பாதையில் குடு குடுவென ஓடிப் போய் ஆற்று (சாக்கடை) நீருக்கருகில் விளையாடப் போகிறது. துர்நாற்றத்துடன் ஈக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.
“ஆமா, குடிசைக்குள்ள தண்ணி புகுந்துடிச்சு. என்ன பண்றது. பை ஸ்டார் ஓட்டல்லையா தங்க முடியும். வேற இடத்துக்கு போனா வாடக கொடுக்க காசு இல்லாம தான் இங்க இருக்குறோம்”
“ராத்திரியானா கொசு புடுங்குது. கொழந்தைங்க ராத்திரிலே எழுந்து அழ ஆரம்பிக்குதுங்க. எல்லாத்தையும் மனசுல அடக்கினு வாழறோம். வேற என்ன பண்ண முடியும்?”
பேசியபடியே லேசாக அழுது, முகத்தைத் திருப்பி கண்ணீரைத் தோள் பட்டையின் ஓரத்தில் துடைத்து சரிப்படுத்திக் கொள்கிறார்.
குழந்தைகளிடம் பேச்சு கொடுத்தோம். அவர்கள் விளையாடுவதில் தான் மும்முரமாக இருந்தார்கள். நாங்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஒரு வயதான அம்மா அருகில் வந்து விசாரித்தார்.
அந்த அம்மா 1958-ல் இங்கே வந்து விட்டாராம்.
“அப்பவெல்லாம் நாங்க இந்த ஆத்துல தான் குளிப்போம். துணி தொவைப்போம். காசு போட்டா பாக்கலாம், தண்ணி அவ்வளவு சுத்தமா இருக்கும். மாடி வீடுகள் வரவர மொத்த சாக்கடையும் இதுல கலந்துடறாங்க” என்றார்.
“என்னமா! இங்கயே இருக்கீங்களே! நாத்தம் அடிக்கலையா?”
“நாத்தமா? அடிக்குது. என்ன பண்ணறது?. இங்கேயே வாழ்ந்துட்டோம் வேலைக்கு, பஸ்ஸுக்கு எல்லாம் வசதியா இருக்கு, வேற எங்கெயாவது போனா மட்டும் நம்ம சம்பாத்தியத்துக்கு மாளிகையிலயா தங்கப் போறாம்.”
“என்ன வேல பாக்குறீங்க?”
“இப்பயெல்லாம் வேலைக்கு எங்க தம்பி போக முடியுது. முன்னயெல்லாம் வீட்டு வேலைக்கு போவேன், இப்ப முடியல. இப்ப வடை, போண்டா போட்டு விக்கிறேன். எடுத்து ஏரியா ஃபுல்லா சுத்தி விக்க முடியாது. இங்கேயே வீட்டு திண்ணையில தான் வியாபாரம்.”
நாம் பேசுவதை பார்த்து பக்கத்திலிருப்பவர்கள் இயல்பாக பேச முன் வந்தார்கள். ஈக்களின், பூச்சிகளின் மொய்ப்பும் இடைவிடாது சேர்ந்து கொண்டன.
“ஏதாவது பெரிய செலவு வந்துட்டா கடனெல்லாம் வாங்குவீங்க இல்ல எவ்வளவு வட்டிக்கு கடன் தராங்க?” என்று கேட்டோம்.
“கடனா? எங்களுக்கு யாருப்பா தருவாங்க?”
“சரி! பெரிய செலவு வந்தா?”
“வரக் கூடாது, வராத மாறி நடந்துக்கணும். வந்தா அவங்க மாதிரி ஆயிடும்” என்று ஒரு கூட்டத்தைக் கை காட்டுகிறார். அவர் கை காட்டிய திசையில் பெரிய சண்டை. என்னவென்று விசாரித்தோம். ஏதோ நுண்கடன் நிறுவனத்தின் பிரதிநிதி, பல குழப்பும் கண்டிஷன்களைச் சொல்லி பணம் வசூலிக்க வந்திருக்க,  மக்கள் அவனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
வெளி ஆட்கள் வந்தால் மக்கள் பார்க்கும் பார்வைக்கு சில அர்த்தங்கள் இருக்கின்றன, ஒன்று ஏதாவது சங்கம், க்ளப்பில் இருந்து வந்த புரவலர்களாக  பார்க்கிறார்கள்.  இலவசமாக குடம், படுக்கை விரிப்புகள் கிடைக்கலாம். அல்லது அரசு அதிகாரிகள் வந்து வேறு இடத்துக்கு மாறிப் போகும் படி வற்புறுத்த வரலாம்.
ஆற்றோரம் வாழும் மக்களின் வாழ்க்கை பாவத்திற்குரியதோ, தலைவிதியோ அல்ல. அது நமது சமூக அமைப்பின் ஒரு கொடிய முகம்.
குடிசைகளை ஒழிக்கவும், ஏழ்மையைக் குறைக்கவும் அரசு பல திட்டங்கள் வைத்திருக்கின்றது. வறுமைக்கோட்டின் வரம்பைக் குறைத்து, ”இந்தியா வல்லரசு ஆயிடிச்சு, ஏழ்மை ஒழிஞ்சிடுச்சி” என்று ஜோக்கர் போல் கத்துவது, குடிசைகளைத் தீ வைத்துக் கொளுத்தி விடுவது, மக்களை சென்னைக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கு, பள்ளி, மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத இடங்களுக்கு துரத்தியடிப்பது என்றுதான் இந்தத் திட்டங்கள் உருவெடுக்கின்றன.
‘குறிப்பிட்ட தொகையை மாதத் தவணையில் கட்டினால் இடத்தை பட்டா போட்டு கொடுத்து விடுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இவர்களும் ஒரு சில வருடங்கள் பணத்தை கட்டியிருக்கிறார்கள். ஆனால் நிலைமை மாறி விட்டது. நிலத்தின் விலையேற ஏற, இவர்களின் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. கட்டிய பணமும் போச்சு.
‘இவர்கள் கூவத்தை ஆக்கிரமித்து விட்டார்கள். அதனால் ஆற்று நீர் சாலைக்கு வந்து விடுகிறது’ என்பது தான் அரசின் வாதம். அதனால் இவர்களைக் காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் டார்ச்சர் கொடுக்கிறார்கள். ஆனால்,  உண்மை என்பது வேறு விதமாக இருக்கிறது.
கூவத்தின் ஓரம் இவர்கள் குடிசை இருப்பது உண்மை தான், ஆனால் இவர்கள் குடிசை போட்டதெல்லாம் ஆற்றின் கரை மீது தான், ஆற்றில் இறங்கி குடிசை போடும் தொழில் நுட்பமோ, அதற்கான கான்கிரீட் வீடுகளைக் கட்டும் வசதியோ இவர்களிடம் இல்லை. மாறாக ஆற்றை உண்மையில் ஆக்கிரமித்திருப்பது யார்?
அமைந்தகரை பூந்தமல்லி சாலையில் இருக்கும் ‘அம்பா மால்’போன்றவை ஆற்றை ஆக்கிரமித்து, பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது, அவர்கள் ஆக்கிரமித்ததால் சுருங்கிப் போன ஆற்றின் அகலத்தை ஈடுசெய்ய மறுகரையில் இருக்கும் குடிசைகளைக் காலி செய்யச் சொல்கிறது, அரசு.
ஏழைகளுக்கு நிரந்தர வீடுகள், குடிசை ஒழிப்பு என்ற பெயரில் இந்த தகிடுதத்தம் நடக்கிறது.  சைதாப்பேட்டையில் நிலத்தின் விலை சரமாரியாக உயர்ந்து விட்டது. இவர்களை அடித்துத் துரத்தி விட்டு அங்கே ஒரு மால் கட்டலாம், நல்ல வருமானம் கிடைக்கும்; அல்லது அபார்ட்மென்ட்டுகள் கட்டி பல கோடிகள் சம்பாதிக்கலாம். மக்கள் வாழ்ந்தால் அல்லது செத்தால் யாருக்கு என்ன நஷ்டம்?
சைதாப்பேட்டையில் தங்கியிருக்கும் மக்களை பள்ளிக்கரணைக்கு மாறச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரசு தரும் இடம், மிகச் சிறியது. கான்கிரீட் குடிசைகளை மட்டும் கட்டி விட்டிருக்கும் குடிசை மாற்று வாரியம் சுகாதாரம், கல்வி, மருத்துவ வசதி எதற்கும் பொறுப்பேற்பதில்லை. அவர்கள் தினசரி வேலை செய்வதற்கு  சைதப்பேட்டை போன்ற இடங்களுக்கு வர வேண்டும்.
ஆற்றிலிருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கும் வீடுகள் அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப கொஞ்சம் வசதியாகவே இருக்கின்றன. கலைஞர் தொலைக்காட்சி, கேபிள் டிவி போன்றன சில வீடுகளில் நல்ல மின்சார இணைப்புடன் இருக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லை, ஆனால் இலவச தொலைக்காட்சி பெட்டி, மிக்ஸி, மின்விசிறி என்று சில உள்ளன.
மழை வந்துவிட்டால் வாழ்க்கை நரகமாகி விடுகிறது. வீட்டிற்குள் நீர் புகுந்து சகதியாகி விடும். எல்லோரும் எடுக்க முடிந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு சென்று விடுகிறார்கள்.
மழை முடிந்து திரும்பி வந்தால் வீடு முழுவதும் சகதியாகி விட்டிருக்கும். சில நாட்கள் அதை முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும். மறுபடியும் வீட்டை நிர்மாணம் செய்ய வேண்டும். குடிசைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கும். சுவர் இடிந்து விழுந்திருக்கும். அனைத்தையும் சரி செய்துகொள்ள வேண்டும். சிறிது கடன் வாங்குவார்கள், அந்த ஆண்டு முழுவதும் சம்பாதித்து அதை அடைப்பார்கள். அடுத்த ஆண்டும் இது தொடரும். அரசு உதவி செய்யலாம்… சரி அதை விடுங்கள்..
மலர் எனும் பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்தோம். அவர் ஆற்றோர வாழ்க்கையைப் பற்றி சொல்லியபடி இருந்தார். ‘’ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும், பிள்ளைகள் இல்லையா?” என்று கேட்டோம்.
சிறிது நேரம் நம்மை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர், திடீரென அழத் துவங்கினார். அழகைக்கு மத்தியில் “கஷ்டப்பட்டு வளர்த்த புள்ளைய கூட்டிகிணு போய் கொன்னுடாங்களே” என்றார்.
நாம் சற்றே அதிர்ச்சியடைந்து விசாரிக்க தொடங்கினோம். அவருடைய மகனைக் காதல் பிரச்சனையில்  கொலை செய்து விட்டார்கள். ஆனால் போலிசை விலைக்கி வாங்கி விட்டதால், அதை பைக் ஆக்ஸிடண்ட் என்று வழக்கை முடித்து விட்டார்கள். அந்த அம்மா நீதி கேட்டு இத்தனை ஆண்டுகள் போராடிய படியே இருக்கிறார்.
ஏழை மக்களை எப்படிக் கிள்ளுக்கீரையாக அதிகார அமைப்புகள் நடத்துகின்றன என்பதற்கு இவர் ஒரு வாழும் உதாரணம். தன் மகன் இறந்த அந்த துக்க நேரத்தில் போலீசார் தன்னை ஒரு நாய் போல் நடத்தியதாகச் சொல்கிறார். ‘’பொணத்தை எடுத்துக் கொண்டு செல்” என்பதை தவிர இவர் கேட்ட ஒரு கேள்விக்குக் கூட போலிசு பதில் சொல்லவில்லை. மேலும் இவரைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி வெளியே துரத்தியிருக்கிறார்கள். இவர் விடாமல் இன்னும் தன் பிள்ளையின் மரணத்திற்கு நீதியை தேடிய படியே போராடிக்கொண்டு இருக்கிறார்.
“போகாத எடம் இல்ல, பெரிய ஆபிஸருங்க, கவுன்சிலரு, எம் எல் ஏன்னு போய்கிட்டே தான் இருக்கேன். அலைச்சல் தான் மிச்சம். கடைசியா இருக்கிற ஒரே நம்பிக்கை அம்மன் தான். வெள்ளிக் கிழமையானா அம்மன் கோயில்ல வெளக்கேத்தி, ரெண்டு எலுமிச்சை பழம் வாங்கி சூலத்துல குத்திட்டு வருவேன். எம் பையன கொன்னவங்கள ஆத்தா பாத்துப்பா” என்று உடைந்து போய் அழுகிறார்.
சைதாப்பேட்டையில் இருந்து வரும் போது என் நண்பனை சந்தித்தேன். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நான் பார்த்த அனுபவங்களை அவனுக்கு சொல்லியபடி இருந்தேன். ‘’வாழ்க்கை எப்படி இருக்கிறது, பார்த்தாயா?” என்றேன்,
அவன் சற்றே சத்தமாகவும், கோபமாகவும் “இவங்களை எல்லாம் ஏன் போய் பார்க்க வேண்டும். என்னிடம் கேட்டால் நானே சொல்லியிருப்பேனே. எங்கோ டவுன் சௌத்திலிருந்து இங்க வந்து விடுகிறார்கள். முதலில் ஒரு குடிசை போட்டுக் கொள்கிறார்கள். அதன் பிறகு பக்கா வீடு கட்டிக்கொண்டு, காலி செய்ய மாட்டேன் என்று அடாவடி செய்கிறாங்க, அவங்களுக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன. இதுதான் பிரச்சனை” என்றான்.
கிராமத்தில் விவசாயம் நசிந்து போய்விட்ட நிலையில், பிழைப்பைத் தேடி சென்னை வருகிறார்கள் பலர். கிராமத்தில் சாதி ஒடுக்குமுறையின் உக்கிரம் தாங்காமல் சென்னைக்கு வருகிறார்கள் சிலர். ஊரில்  சிறு தொழில் செய்ய, விவசாயம் செய்ய  கடன் வாங்கிவிட்டு அடைக்க முடியாமல் இரவோடு இரவாகக் குடும்பத்துடன் சென்னைக்கு ஓடி வந்தவர்கள் அதிகம். ஏதோ ஒரு விதத்தில் நகரம் வாழ வைக்கும் என்று வருபவர்கள் தான் இவர்கள்.
என் அலுவலக மேலாளரான பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்த போது  உழைக்கும் மக்கள் குடிசைப் பகுதி பற்றிய பேச்சும் வந்தது.
”அவர்கள் எல்லாம் கொஞ்சம் பணக்காரர்களாகி விட்டால் நன்றாக இருக்கும்” என என் ஆசையைச் சொல்ல, நான் வாக்கியத்தைக் கூட முடிக்காத நிலையில் வேகமாகச் சொன்னார், “அவங்கெல்லாம் போயிட்டா நமக்கு வீட்டு வேலை செய்ய ஆள் கிடைக்க கஷ்டமாகிடும்” என்றார். வீட்டு வேலைக்கு ஆள் வேன்டும் என்ற காரணத்திற்காகவே மக்கள் ஏழையாக இருக்க வேண்டும் என்று மேலாளர்களே நினைக்கிறார்கள் என்றால், இந்த நாட்டையே ஆளும் தரகு முதலாளிகளுக்கு இந்த எண்ணம் எவ்வளவு வீரியமாக இருக்கும் என நினைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது.
குறைந்த கூலிக்கு வேலை செய்ய, நிரந்தர இடமோ, வேலையோ, சம்பளமோ இல்லாத உதிரி பாட்டாளிகளை அவர்கள் அரசின் உதவியுடன் உருவாக்குகிறார்கள். ஒரு வேளை இவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக கிராமத்தில் வாழ்கிறேன் என்று சொன்னாலும், அவர்களை உதிரிப் பாட்டாளிகளாக்கும் திட்டம் முதலாளிகளால் செம்மையாகத் தீட்டப்படும். இதையெல்லாம் என் நண்பன் புரிந்து கொண்டானா என்று தெரியவில்லை. அவனுமே முதலாளிகளால் கொஞ்சம் வசதிகள் அனுமதிக்கப்பட்ட பாட்டாளிதான் என்பதும் அவனுக்கு புரிந்திருக்கவில்லை.
நதிக்கரையில்தான் மனித குல நாகரீகங்கள் தோன்றி வளர்ந்தன. குழந்தைப் பருவத்தில் இருந்த மனித குலத்தை வளர்த்து ஆளாக்கிய நதிக்கரைகளில் கூவமும் ஒன்றாய் இருந்திருக்கும். இன்றும் சென்னை நகரத்தின் கடுமுழைப்பு வேலைகளுக்கு உழைப்பாளிகளை சப்ளை செய்யும் சேரிகளில் கூவம் நதிக்கரை சேரிகளும் அடக்கம். மகிழ்ச்சியான சென்னை வாழ்க்கைக்கு பாடுபடும் இந்த மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் அடையாளம் கூட இல்லை. ஆனாலும் அவர்கள்  வாழ்கிறார்கள். என்றாவது ஒரு நாள் நகரத்திற்கு வெளியே தூக்கியெறியப்படுவது நிச்சயமென்றாலும் அவர்கள் வாழ்கிறார்கள்.
_________________________________________________
- வினவு செய்தியாளர்கள்

கருத்துகள் இல்லை: