ஞாயிறு, 18 நவம்பர், 2012

திமுகவை வீழ்த்த எண்ணி இந்தியாவை வீழ்த்திய 2ஜி ஏலம்

 2ஜி விவகாரத்தில் பலரும் சேர்ந்து அரசியல் செய்ததன் பலன், அடுத்த பத்து வருடங்களுக்கு நம்மைத் தரையோடு சேர்த்து வைத்து அழுத்தப்போகிறது.
2ஜி ஏலம், நான் எதிர்பார்த்ததைப் போலவே குறைந்த பணத்தைத்தான் பெற்றுத் தந்துள்ளது. இது ஆ. இராசா குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளும் சிஏஜியும் கணக்கிடுதலில் பிசகியுள்ளனர் என்பதை  நிரூபித்ததாகவே ஆகிறது.
2010-ல் ஏலம் நடந்திருந்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியிருக்கும் என்றெல்லாம் சொல்வதை நான் நம்பவில்லை. 3ஜி ஏலமே தவறு என்பது என் கருத்து. இன்று டெலிகாம் நிறுவனங்கள் எல்லாம் மார்ஜின் அழுத்தத்தில் திண்டாடிக்கொண்டிருக்கின்றன. 3ஜி ஏலத்துக்கான பணத்தை அவை கடனாகத்தான் பெற்றுள்ளன. அந்தக் கடனுக்கான வட்டியே அவற்றின் லாப விகிதத்தைக் கடுமையாகக் குறைக்கின்றன. இன்று 3ஜி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியான தரத்தில் இல்லை. மேலும், 3ஜி ஸ்பெக்ட்ரத்தைப் பெற்றவர்கள், அதனை அடுத்தவர்களுக்கு வாடகைக்குத் தரக்கூடாது என்று டெலிகாம் அமைச்சகம் கழுத்தறுக்கிறது. http://www.badriseshadri.in/2012/11/2.html
ஆ.இராசா மேலான குற்றம் என்ன என்று இன்னும் நீதிமன்றத்தில் இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். இராசா லஞ்சம் வாங்கினாரா, அப்படியென்றால் எவ்வளவு, யாரிடமிருந்து, அந்தப் பணம் எங்கே என்று தெளிவாகக் காட்ட இன்றுவரை சிபிஐயால் முடியவில்லை. பால்வா - கலைஞர் டிவி விவகாரம் தவிர்த்து. அதிலுமே நிறையக் கேள்விகள் பாக்கி.

ஆனால் இதன் விளைவாக ஏலம் என்பதுதான் மிகச் சரியான முறை, அதிலிருந்து லட்ச லட்சம் கோடிகளாகக் கொட்டும் என்பது பரப்புரை செய்யப்பட்டு, இன்று இந்தியா முழுதுமே அதனை நம்புகிற நிலைக்கு வந்துவிட்டதுதான் துரதிர்ஷ்டம். பொருளாதார அடிப்படைகளின்படி, சில இடங்களில் ஏலம் மோசமான நிலைக்குத்தான் கம்பெனிகளைத் தள்ளும், மக்களையும் காயப்படுத்தும். டெலிகாம் நிச்சயமாக அதில் ஒன்று.

பாஜக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ரெவின்யூ ஷேர் என்பது மிக அற்புதமான ஒரு நடைமுறை. இன்றுவரை இந்திய தொழில்துறையின் எந்தப் பகுதிக்கும் இப்படிப்பட்ட தெளிவான ஒரு முறை அமல்படுத்தப்படவில்லை. அரசுதான் ஸ்பெக்ட்ரத்துக்குச் சொந்தக்காரர்; அதனைப் பயன்படுத்த ஒருசில நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி. ஸ்பெக்ட்ரத்தைப் பயன்படுத்தக் கூலி தரவேண்டும். அது, அதிலிருந்து பெறப்படும் வருமானத்தில் ஒரு பகுதி. இது தொழில் செய்வோருக்குத் தெளிவைத் தருகிறது. அரசுக்குத் தொடர்ந்த வருமானத்தைத் தருகிறது. நிறுவனங்களின் கடன் சுமையைக் குறைக்கிறது. பொதுமக்களின் போன் செலவைக் குறைக்கிறது. தொழில்நுட்பம் ஜனநாயகப் படுத்தப்பட்டு, அனைத்து மக்களின் கைகளிலும் செல்போனாக மிளிர்கிறது.

ஆனால் அதற்கடுத்த கட்டத் தாவலைச் செய்யாமல் நாம் இன்று தடுமாறிக்கொண்டிருக்கிறோம். இன்னும் 3ஜியே பரவல் அடையவில்லை. 4ஜி சேவையைச் செய்ய யாரும் தயாராக இல்லை. முகேஷ் அம்பானி கம்பெனி இதோ அதோ என்கிறது, ஆனால் சேவையைக் காணோம். குறைந்தவிலை இண்டெர்னெட் என்பது இன்னும் நம் நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. மறுபக்கம் சிலேட்டுக் கணினிகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. 3,000 ரூபாய்க்கு ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க டேப்லட் கையில் கிடைக்கிறது. ஆனால் இணைய வசதிக்குத்தான் தகராறே. மாதம் 250 ரூபாய்க்கு நல்ல வயர்லெஸ் (4ஜி) பிராட்பேண்ட் இணைப்பு கிடைத்தால் எவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

2ஜி விவகாரத்தில் பலரும் சேர்ந்து அரசியல் செய்ததன் பலன், அடுத்த பத்து வருடங்களுக்கு நம்மைத் தரையோடு சேர்த்து வைத்து அழுத்தப்போகிறது.

கருத்துகள் இல்லை: