செவ்வாய், 5 ஜூலை, 2011

பொக்கிஷங்கள் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானவை,சங்கராச்சாரி ஜெயேந்திரன்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் எடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானவை என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் பேசிய அவர், நீண்ட காலமாக பத்மநாப சுவாமி கோயிலின் பாதுகாவலர்களாக திருவாங்கூர் மன்னர் குடும்பம் தான் இருந்து வந்துள்ளது. அந்த கோயிலுக்காக அவர்களது ஆட்சி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்தது.

தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து நகைகளும் ஆபரணங்களும் கோயிலுக்கு திருவாங்கூர் மன்னர்களால் அளிக்கப்பட்டவை தான். எனவே, அவை அனைத்தும் மன்னர் குடும்பத்தினருக்கே சொந்தமானவை. எனினும், அந்த பொக்கிஷங்கள் அனைத்தும் கோயிலிலேயே வைக்கப்பட வேண்டும் என்றார்.

பல நூற்றாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த இந்தக் கோவிலின் ரகசிய அறைகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சமீபத்தில் திறக்கப்பட்டன. இதில், இதுவரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் காசுகள், தங்க-வைர நகைகள், வைரம், வைடூரியம் உள்ளிட்ட ஆபரணங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

விரைவில் மேலும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது. அதன் கதவு மற்றதை விட மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளதால், அதைத் திறக்க நிபுணர்களின் உதவி கோரப்பட்டுள்ளது. இந்த அறையில் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் பெருமளவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் தான் இந்தக் கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

ராஜமார்த்தாண்ட வர்ம திருமனசு என்கின்ற மன்னன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே பெரிய கார்பொரேட் முதலாளியாகவா இருந்தான்?
எல்லாம் மக்களை சுரண்டி கொள்ளை அடித்து சேர்த்த பணம்தான். இவ்வளவு தங்கம் அந்த மன்னனால் சேர்க்க முடிந்திருக்கிறது என்றால் அவன் இடி அமினை விட மோசமானவனாக அல்லவா இருந்திருக்க வேண்டும்?

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆதிவாசிகள் மிருகங்களை விட கேவலமாக நடாத்தப்பட்டார்கள். அதைப்பற்றி எழுதுவதென்றால் நாள்கணக்காக எழுதலாம்.
மன்னர் குடும்பத்தின் எலும்புத்துண்டு பணத்திற்கு ஆசைப்படுபவர்கள் எல்லாரும் ஒரே குரலில் மன்னர் குடும்பத்திற்கு ஆதரவாக குரல் எழுப்ப தொடங்கி விட்டார்கள். 
காஞ்சி ஜெயேந்திரன் வகையறாக்களின் மடங்கள் கூட அரண்மனைகள் போலவும் அதன் சொத்துக்கள் கூட நம்ப முடியாத அளவு உள்ளன. காவி தரித்தவனுக்கு எப்படி சொத்து சேரலாம்?

கருத்துகள் இல்லை: