சனி, 9 ஜூலை, 2011

வெள்ளவத்தையிலிருந்து புறப்படக்கூடாது,Colombo Jaffna பஸ்கள்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையிலீடுபடும் தனியார் பஸ்கள் வெள்ளவத்தையிலிருந்து புறப்படக்கூடாது என்று பொலிஸார் உத்தரவு பிறப்பித் துள்ளனர். நேற்று முன்தினம் முதல் இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் இத்தகைய நடவடிக்கையினால் வெள்ளவத்தையிலிருந்து யாழ். நோக்கி புறப்படும் பஸ்களின் உரிமையாளர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் பெரும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளவத்தையிலிருந்து பயணிகளை தனியார் பஸ்கள் ஏற்றக்கூடாது என்றும் புறக்கோட்டையிலிருந்தே ஏற்றிச்செல்ல வேண்டுமென்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால், நேற்று முன்தினமும் வெள்ளவத்தையில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச்செல்வதற்கு தனியார் பஸ்களுக்கு அனுமதி வழங்க முடியாதென பொலிஸார் அறிவித்திருந்தனர். இதனையடுத்து தனியார் பஸ் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையம் சென்று பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமையவே தாம் செயற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டையில் பஸ்கள் தரித்து நிற்பதற்கு போதியளவு இடமில்லாத சூழ்நிலை காணப்படுகின்றது. இதனைவிட வெள்ளவத்தை பகுதியிலிருந்து புறப்படும் தமிழ் மக்கள் புறக்கோட்டை பகுதிக்கு வருவது என்பது பெரும் சிக்கலான விடயமாக அமையும். எனவே, வெள்ளவத்தை பகுதியிலிருந்தே பஸ்கள் புறப்படுவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வகையிலேயே தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் நாம் வீதி அனுமதி பத்திரங்களை பெற்றுள் ளோம். எனவே, அதற்கு இணங்க சேவையில் ஈடுபடுவதற்கு எம்மை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். வெள்ளவத்தையிலிருந்து புறப்படுவதற்கு அனுமதி மறுக்கப்படுமானால் தாம் சேவை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: