ஞாயிறு, 7 நவம்பர், 2010

Noel Nadesan:எழுத்தாளர் ஒன்றுகூடல்-எனது பார்வை

- நடேசன்

இலக்கிய காவிகளின் சிறுபிள்ளைத்தனம்

கொழும்பில் வரும் தைமாதத்தில் நடக்கவிருக்கும் எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கு எதிராக இங்கிலாந்தில் பத்மனாப ஐயரும் கனடாவில் காலம் செல்வமும் மற்றும் தமிழ்நாடு உட்பட வேறும் சில வெளிநாடுகளில்; வாழும் எழுத்தாளர்;களும் இணைந்து பலரிடமும் கையொப்பம் வாங்கி அதை பிரசுரித்து இலக்கிய சேவை செய்கிறார்கள்.

வாழ்க அவர்களது சேவை.

கறுப்புப் பூனையை இருட்டில் தேடும் இவர்கள் தங்களது மன வெறுப்புகளை தீர்க்க நடத்தும் சிறுபிள்ளைத்தனமான சுய இன்பம் தேடும் நடவடிக்கையன்றி வேறில்லை. இந்த நடவடிக்கை மூலம் இவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சவை தனிமைப்படுத்த நினைக்கிறார்கள்.

இந்த வழிமுறையை இலங்கையில் புலிகளுக்கு சொல்லிக்கொடுத்திருந்தால் எத்தனை பேர் உயிரோடு இருந்திருப்பார்கள்?

எழுத்தாளர் சாருநிவேதிதா சொல்லும்; யானையோடு உடலுறவு கொண்ட கொசு மாதிரியான கதையாக இருக்கிறது இவர்களின் நடவடிக்கை. இதனால் மகாநாடு நடக்காமல் போய் விடும் என மகிந்த ராஜபக்ச இப்பொழுது நடுங்கிக்கொண்டிருப்பார் அவரது கனவில் பத்மநாப ஐயரும் காலம் செல்வமும் மொட்டை வாளுடன்; தோன்றுவார்கள்.

முள்ளிவாய்க்காலில் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் தேசியத்துக்காக போராடி துண்டு துணி இல்லாமல் அம்மணமாக போனபின் இந்த இரு இலக்கிய காவிகளும் போர்கொடியுடன் புறப்பட்டிருக்கிறார்கள். (இவர்கள் மற்றவர் படைப்பதை காவுபவர்கள்)

முக்கியமாக பத்மனாப ஐயர் “இதில் முருகபூபதி இல்லை நடேசன்தான் இதற்குப்பின்னணி எனச்சொல்லி, அதனால்தான் தாம் இப்படி எதிர்ப்பதாக” கூறி இருக்கிறார்.

யாரோ கஷ்டப்பட நான் பலனடைய விரும்பவி;ல்லை.

நான் ஏதாவது செய்வதென்றால் நேரடியாகத்தான் செய்வேன். மேலும் நான் என்னை ஒரு எழுத்தாளனாக என்றைக்கும் நினைப்பவனும் அல்ல. நான் சார்ந்த சமூகத்தின் தேவைகளுக்காக எழுத்தை பாவிப்பவன் மட்டுமே. அதாவது துப்பாக்கியை தற்பாதுகாப்புக்கு மட்டும் பாவிக்கும் சாமானியன் போல். நான் துப்பாக்கியை கொண்டு திரியும் போர்வீரன் அல்ல. தேவை முடிந்ததும் உதயம் என்ற பத்திரிகையின் நிருவாகப்பொறுப்பை மற்றுமொருவருக்கு கொடுத்தவன்.

இப்படி என்னை வரையறுத்துக் கொண்ட நான் எப்படி எழுத்தாளர் மகாநாட்டில் ஈடுபடுவேன்?

குறைந்த பட்சம் எஸ்.பொ சீனக் காசில் இந்த மகாநாடு நடப்பதாக சொன்னார். இரசிக்கக் கூடியதாக இருந்தது. அவருக்கு அதனால் தமிழ்நாட்டில் பிரபலமும் கிடைத்தது. ஆனாலும் நீஙகள் எழுத்தாளரிடம் பெட்டிசம் வாங்கி பகிஷ்கரிப்பதாக அறிக்கை விடுவதும் அத்துடன்; மகாநாடு நடத்;தும் உரிமையை அங்கீகரிப்பதாக கப்சா விடுவதும். நகைச்சுவையாகக் கூட இருக்கவில்லை

விடுதலைப்புலிகள் பொங்குதமிழ், மானுடத்தின் ஒன்று கூடல் என நடத்திய போது நாங்கள் அறிக்கை விட்டோமா? பகிஷ்கரிக்கச் சொன்னோமா? அப்போது மட்டும் தமிழன் இரத்தம் சிந்தாமல் வேறு என்ன சிந்திக் கொண்டிருந்தான்.?

கடந்த முப்பது வருடமாக இலங்கையில் நடந்த விடயங்கள் பத்மநாப ஐயருக்கும் செல்;வத்திற்கும் மறந்துவிட்டதா?

உங்களுக்கு விருப்பம இல்லையென்றால் பேசாமல் இருப்பதுதானே. காலம் காலமாக பகிஷ்கரித்து தமிழர் என்னத்தைக்கண்டனர்? ; இலங்கையில் தூக்கிய அதே காவடியை மேற்கு நாடுகளிலும் தூக்கிறதுதான் திடசங்கற்பம் என்று வரிந்துகட்டி நிற்கிறீர்களா?

நான் அறிந்த உண்மை

இந்த எழுத்தாளர் மகாநாடு பற்றிய உண்மையை அறிய விருப்பமில்லாதவர்களுக்கு சொல்லியும் பிரயோசனம் இல்லை. ஆனால் வெளியே சொல்லிவிடுவது சமூகக் கடமையாகிறது

இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு நடத்தவேண்டுமென்று பலவருடங்களாக டொமினிக் ஜீவா மல்லிகையில் எழுதி இருக்கிறார். மல்லிகையை தொடர்ந்து படிப்பவர்களுக்கு இது தெரியும். டொமினிக் ஜீவாவுக்கு தொடர்ச்சியாக பல வழிகளில உதவி செய்து மற்றவர்கள் மூலமும் உதவி செய்யவைக்கும் ஒரேமனிதர் முருகபூபதிதான் . ஒருவிதத்தில் இவரை ஜீவாவின் சீடர் எனலாம். இருவருக்கும்; பல ஒற்றுமையுண்டு. குறிப்பாக இலங்கையில் ஜீவாவும் அவுஸ்திரேலியாவில் முருகபூபதியும் தாங்கள் நம்பிய இலக்கியத்துக்கு உழைத்து பலவருடங்களை இழந்தவர்கள். இருவரும் பணத்துக்கு எதுவித மரியாதையும் கொடுக்காத மனிதர்கள்.

இப்படியான முருகபூபதி, டொமினிக் ஜீவாவின் கனவை நிறைவேற்ற புறப்பட்டதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனால் போர் முடிந்தபின் இதை நடத்தினால் இலங்கைக்கு வெளிநாடுகளில் வாழ்பவர்கள்; வருவார்கள் என திட்டமிட்ட முருகபூபதிக்கு தமிழக எழுத்தாளர்கள் பற்றிய புரிந்துணர்வு இருக்கவில்லை. விடயம் புரிந்தவர்கள் கூட காற்று எங்கு வீசுகிறதே அங்குதான் இருப்பார்கள். விடுதலைப் புலிசார்பு காவடியை இலங்கையை சேர்ந்தவர்கள் இறக்கிவைத்தாலும் தமிழகத்தில் இறக்க முடியாமல் திணறுகிறார்கள். பாரிய எண்ணைக்கப்பல்; போல் திரும்புவதும் கடினம் கல்பாக்கம் அணுஉலையில் இருந்து வரும் சக்தியிலும் பார்க்க தமிழ்நாட்டில் கோசங்களுக்கு மிகவும் வலிமை உண்டு

முருகபூபதியை பொறுத்த மட்டில் புலிசார்பு எழுத்தாளர்கள் இம்மகாநாட்டை எதிர்க்;கமாட்டார்கள் என தப்புக்கணக்குப் போட்டார். உண்மையில் இவர் புலிசார்பு ஈழத்தமிழ் எழுத்தாளர்களைத்தான் தொடர்பு கொண்டு பேசினார். இராhஜேஸ்வரி மற்றும்; என் போன்றவர்கள் உண்மையிலேயே கொழும்பில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்டோம். இராஜேஸ்வரி முழு நேரமும் மண்டபத்துக்கு வெளியே நின்று முருகபூபதியை விமர்சித்துக் கொண்டிருந்தார். நான் அரைவாசி நேரம் வெளிநடப்பு செய்தேன்.எனது காட்டத்திற்கு காரணம், புரபஸர் சிவத்தம்பி இப்படித்தான் வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுத வேண்டும் என பாடம் நடத்திவிட்டுச் சென்றார். இதற்கு பதில் அளிக்க முயன்ற போது புரபஸர் சிவத்தம்பி வெளியேறும் வரையும் அவருக்கு பதில் அளிக்க முருகபூபதி அனுமதிக்கவில்லை.

முருகபூபதி இதுவரைகாலம் விடுதலைப்புலிகளை விமர்சித்தது இஸ்லாமிய மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியபோது மட்டும்தான். முருகபூபதி தான் இலக்கியவாதி, அரசியல்வாதி இல்லை என கூறிக்கொண்டு மனமுடையாத விக்கிரமாதித்தன் போல் மீண்டும் மீண்டும் போஸ்ட்கார்ட், கடிதம் எழுதுபவர்களை எல்லாம் அழைத்து விழா நடத்துவார். அவர் அவுஸ்திரேலியால் 2001 ஆம் ஆண்டு முதலாவது எழுத்தாளர் விழாவை நடத்தியபோது அதனை பகிஷ்;கரிக்கச் சொல்லி வன்னியிலிருந்து உத்தரவு வந்ததாக இங்கு புலிசார்பினர் பகிஷ்;கரிப்பார்கள். இது கடந்த பத்துவருடங்களாக நான் இங்கு காணும் காட்சி. முருகபூபதி முடிந்தவரையில் எழுத்தாளர்களை ஒருங்கிணைப்பார்.

முருகபூபதி; இலங்கையில் பலரது வேண்டுகோளையேற்று அங்கும் ஒருங்கிணைக்க விரும்பி இந்த நிகழ்ச்;சியை சர்வதேச மகாநாடாக்கிவிட்டார். அதாவது சாதாரண அரிசிக் கடைக்கு சிவா இன்ரநாசனல் எனப் பெயர்;போடுவது போல். இதனை மகாநாடு என்று பெயர் சூட்டியது அவரது இயல்பான நல்ல குணம்தான்.

இப்படி இவர் தொடங்கியதும் நான் எச்சரித்தேன். முக்கியமாக எனது இலக்கிய ஆசானாக நான் கருதும் எஸ்.பொ.வைப் பற்றி சொல்லியிருந்தேன்.. நிச்சயமாக எஸ்.பொ இந்தமகாநாட்டுக்கு எதிராக கருத்து வெளியிடுவார் அதனை தமிழ்நாட்டு பத்திரிகைகள் பெரிது படுத்தும். இறந்துவிட்ட வேலுப்பிள்ளையின் மகனை கதிரையில் இருத்தி பத்திரிகை படிக்கக் கொடுத்தவர்களுக்கு இது பெரிய விடயம் அல்ல. வெறும் வாயை மெல்லும் இவர்களுக்கு இது அவல். நீங்கள் மகாநாடு நடத்தி பெறும் பிரபல்யத்தை விட எஸ்.பொ. அதிகமாக பிரபலம் பெறுவார். இதை விட அவருக்கு தேவை என்ன?

அவரை இந்த மகாநட்டுக்காக இலங்கைக்கு வரும்படி நான் அழைத்தேன் அவர் இலங்கைக்கு வந்தால் எனது கருத்தை சொல்வேன். அது பிரச்சினையில் போய் முடியும் என்று கண்ணியமாக மறுத்தார். இத்தகவலை முருகபூபதியிடம் சொன்னேன்

இந்த மகாநாட்டுக்கு எதிராக மட்டும் அவர் கருத்து வெளியிட்டிருந்தால் எஸ்.பொ. தொடர்ச்சியாக தனது பெயரைக்காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் மகாநாட்டு அமைப்பாளர்கள் அரசாங்கத்திடமும் கே. பி.யிடமும் சீனாவிடமும்; பணம் வேண்டுவதாகக் கூறி தனது கருத்தில் தனக்கே நம்பிக்கை இல்லை எனக்காட்டிக்கொண்டார்.

கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற அமைப்பின் மூலம் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்க்குழந்தைகளுக்கு படிப்பதற்கு உதவும் முருகபூபதி மீது பண ஊழல் குற்றச் சாட்டு ஒட்டவே ஒட்டாது.

மெல்பனில் சாதாரணமான ஒரு தொமிற்சாலையில் வேலை செய்துகொண்டு பொது விடயங்களில் ஈடுபடும் முருகபூபதியை பல முறை கண்டு நான் வியந்தது உண்டு.

பத்து டொலரும் இல்லாமல் பத்தாயிரம் டொலர் செலவு தரும் பொது வேலையை தொடங்கும் இவரது துணிவை யாரிடமும் நான் கண்டதில்லை.

இப்படிப்பட்ட முருகபூபதிமேல் எஸ்.பொ எறிந்த சேறு மீண்டும் அவரிடமே திரும்பி வந்து அவரை அசிங்கப்படுத்தி உள்ளது.

மிகவும் கூர்மையானவர் என கருதப்படும் எஸ்.பொ. வுக்கு எப்படி இது புரியாமல் போய்விட்டது? கோபம் அவரது அறிவை மழுங்கடித்து விட்டதா? அவரது கோபம் நிட்சயமாக முருகபூபதி மீது இருக்கவில்லை. முருகபூபதியால் யாரையும் காயப்படுத்தத் தெரியாது என்பது இரண்டு தசாப்தகாலமாக அவருடன் பழகும் அதேவேளையில் அவரை விமர்சிக்கும் எனக்கு நன்கு தெரியும.; எஸ்.பொ.வின் ஆத்திரம் வேறுவிதமானது – This is called misdirected anger

தமிழ் நாட்டு எழுத்தாளர் உலகம்

அன்பான தமிழ்நாட்டு எழுத்தாள நண்பர்களே நான் சொல்லப்போகும் விடயங்கள் கசப்பானவை. ஆனால் உண்மை என்பது நேர்மையானவர்களுக்கு புரியும்

எஸ்.பொ எறிந்த கைக்குண்டை எடுத்துக் கொண்டு கிடையில் நிற்பவரகள்; யார் எனப்பார்போம். இவர்கள் எல்லோரும் மொத்தமாக செய்த மனிதாபிமான உதவிகளை விட முருகபூபதி தனி ஒருவனாக இலங்கைத் தமிழருக்கு உதவிகள் செய்துள்ளார். இந்த மனிதாபிமானம் மட்டும் முருகபூபதிக்கு யானைப்பலம் கொடுக்கும்.

ஆனால் பாவம்... சில தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் சிலரைத்தவிர மற்றவர்கள்; எந்தக்காலத்திலும் இலங்கைப்பிரச்சினையைப் புரிந்து கொள்ளவில்லை.

எத்தனை பேர் இலங்கை வந்திருக்கிறார்கள்?

எத்தனை பேர் ஆய்வுகளை செய்திருக்கிறார்கள்?.

பலர் தமது வாழ்க்கையில் ஒரு சிங்களவரைக்கூடப்பார்த்;ததில்லை. இலங்கைப் பிரச்சினையை மணியனின் பயணக்கதை போல் எழுதுகிறார்கள். பரபரப்புக்காக தினத்தந்தி பாணியில் எழுதும் இவர்களை வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் மந்தைகள் விமான ரிக்கட் கொடுத்து அழைப்பார்கள். இப்படி ஒரு தரம் வந்த பின் அவர்கள் பிரபலமாகிவிடுவார்கள்

இலங்கை பிரச்சினையில் அவுஸ்திரேலி;ய பல்கலைக்கழகங்கள் செய்த அளவு கூட தமிழ்நாட்டில் ஆய்வுகள் செய்யப்படவில்லை (டில்லியில் உள்ள ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகம் விதிவிலக்கு)

கேள்வி ஞானத்திலும் விடுதலைப்புலிகளின் பிரச்சாரத்திலும் அறிந்தவற்றைக் கொண்டு தற்கால புறநானூறு படைக்கலாம். ஆனால் நுட்பமாக விடயங்களைப் புரிந்து கொள்ளமுடியாது. தமிழ்ப்பட கனவுக்காட்சிகளில் வருவது போல்த்தான் பெரும்பாலோருக்கு இலங்கைப் பிரச்சினை. இலங்கைப்பிரச்சினை சிங்கள-தமிழ் பிரச்சினையாகப் புரிந்து கொண்டுள்ளார்கள்.

60 விழுக்காடுக்கு மேற்பட்டதமிழ் பேசுபவர்கள் சிங்கள மக்களோடு. தமிழர் வாழும் வடக்கு- கிழக்குக்கு வெளியே அதிகமான தமிழர்கள் வாழ்வது இவர்களுக்குத் தெரியுமா?

விடுதலைப்புலிகள் நினைத்தது போல் இலங்கையில் வட,கிழக்கு பிரிக்கப்பட்டிருந்தால் முள்ளிவாயக்;கால் மரணங்கள் சிறு பிள்ளை விளையாட்டாக இருந்திருக்கும்.

இந்திய- பாகிஸ்தான் பிரிவினையில் பஞ்சாப்பில் நடந்ததற்கு ஒப்பான அழிவை இலங்கைத் தமிழர்கள் எதிர் கொண்டிருப்பார்கள்

முக்கியமாக இந்தியாவில் இருந்து 200 வருடங்கள் உள்ளே வந்த மலையகத்தமிழர் இதன் தாக்கத்தை அனுபவித்திருப்பார்கள். மகாவலிகங்கைக்குப் பதிலாக மத்திய மலைநாட்டில் இருந்து இரத்த கங்கை ஓடி இருக்கும்.

தமிழ் நாட்டில் எழுந்த திராவிடநாடு கோரிக்கையின் விளைவாகவே எமது ஈயடிச்சான் கொப்பிகளும் இந்த ஈழக்கோரிக்கையை வைத்தார்கள். ஆனால்; என்ன? நாங்கள் பக்கத்து வீட்டார் கொளுத்திய வெடியைப் பார்த்து கொளுத்த வெளிக்கிட்டு எங்களது வீட்டையே கொளுத்திப் போட்டு இப்ப கையை தலையில் வைத்தபடி முற்றத்தில் குந்தி இருக்கிறம்.

நீங்கள்; செய்யும் வேலையால் மற்றவர்கள் பாதிக்கப்படுவர் என தெரிந்தும் அதை செய்வது பொறுப்பான செயல் இல்லை என்பதை தமிழக எழுத்தாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

கடந்த ஒன்றரை வருடத்தில் அகதியாக நிற்கும் மக்களுக்காக அறிக்கை விடுவதையும் தமிழனுக்கு கவிதை எழுதுவதையும்; மகிந்த இராஜபக்சவிற்கு அறம் பாடுவதையும் தவிர்த்து நீங்கள் செய்தது என்ன? என்பதை சற்று சிந்தியுங்கள்.

ஈழத்தில் நடந்தது புதிய விடயம் அல்ல. மிக அருகிலேயே முன்னுதாரணங்கள் உண்டு

இலங்;கை அரசாங்கங்கள் மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பி.க்கு எதிராக இருமுறை போர் தொடுத்தபோது 60 ஆயிரத்துக்கும் மேல் சிங்கள இளைஞர்கள் அழிந்தார்கள். ரோஹணவிஜயவீரவுக்கு நடந்ததுதான் வேலுப்பிள்ளை பிரபாகனுக்கும் நடந்தது. இந்திய அரசாங்கம் பஞ்சாப்பில் காலிஸ்தான் இயக்கத்தினரை கொன்று குவித்தபோது நான் இந்தியாவில் இருந்தேன். தற்பொழுது காஸ்மீரில் நடப்பதும் எதிர்காலத்தில் நக்சலைட்டுகள் என்று இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் வாழும் ஆதிவாசி மக்களுக்கு நடக்கப் போவதுதான் இலங்கையில்; விடுதலைப்புலிகளுக்கும் நடந்தது. அரசுயந்திரங்கள் எந்த நாட்டிலும் ஒரேமாதிரியாகத்தான் தொழிற்படும்;. விடுதலைப்புலிகள்விடயத்தில் அவர்களின் பலத்தினால் சிறிது காலம் எடுத்தது.

பயங்கரவாதம் மூலம் மக்கள் பிரச்சினையில் தீர்வு காண முடியாது. காரணம் அரசாங்கங்களும் அதனது படைகளும் பயங்கரவாதத்தை வீரியமாக திறமையாகப் பாவிப்பார்கள் - By Leon Trotsky

கருத்துகள் இல்லை: