திங்கள், 21 ஜூன், 2010

கலைஞர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே- செம்மொழி என்ற சிறப்பைச் சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ் அடைந்திருந்தாலும்

செம்மொழி மாநாடு ஏன் கொண்டாடப்படுகிறது: கலைஞர்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து முதலமைச்சர் கருணாநிதியின் உரை இன்று இரவு சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

அந்த உரையில் முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கும் செய்தி:
’’ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே- செம்மொழி என்ற சிறப்பைச் சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல் இப்பொழுதுதான், 2004 ஆம் ஆண்டில்தான்- அதுவும், மத்தியிலே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பின்னர்தான் நமக்கு கிடைத்துள்ளது.
இந்தப் பெருமையைக் கொண்டாடிடும் வகையில்தான் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது! இந்த மாநாட்டிற்கு உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள் பலர் வருகை தருகிறார்கள்!

குறிப்பாக, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் துறைத்தலைவராக விளங்கும் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் வருகிறார்.

அவர், எல்லாத் தகுதிகளையும் கொண்டுள்ள தமிழ் இதுவரை, செம்மொழி என அங்கீகரிக்கப்படவில்லையா? எனக்கேட்டு வருந்திக் கொண்டிருந்தவர்.

அதேபோல, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா என்னும் பேரறிஞர் வருகிறார். அவர், தனது ஆராய்ச்சி மூலம், சிந்து சமவெளி நாகரிகத்தையும் அங்கு கிடைத்துள்ள எழுத்து வடிவங்களையும் ஆராய்ந்து, அவை திராவிட நாகரிகத்தைச் சேர்ந்தவை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் செம்மொழித் தமிழாய்வு, மத்திய நிறுவனம் வழங்கும், கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினைப்பெற விருக்கிறார்.

இவர்களைப் போல உல கெங்கும் 49 அயல்நாடுகளிலிருந்து 536 தமிழறிஞர்கள் இந்த மாநாட்டிலே பங்கு பெறுகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட இந்தியாவிலிருந்து ஏறத்தாழ 5,000 அறிஞர்கள் பங்கு பெறுகின்றனர். மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்கள் 23.6.2010 அன்று காலையில் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்

எனவே, அருமைத் தமிழக மக்களே!

நமது தமிழ் மொழிக்குச் சிறப்புகள் சேர்க்க, தமிழ்ச் சமுதாயம் உலக அரங்கில் உன்னத நிலை பெற, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் அய்யன் திருவள்ளுவர் தந்த மணிமொழி மண்ணில் சமதர்மம் படைத்திட வழி வகை காண்போம்!

கோவை மாநகர் நோக்கி வருக வருக என அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்’’என்று பேசியுள்ளார்.

கருத்துகள் இல்லை: