வெள்ளி, 25 ஜூன், 2010

வழிபாடுகளில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன,'' என்று, இந்தியன் யூனியன் முஸ்லிம்

கோவை : ""இறைத் தன்மை மற்றும் வழிபாடுகளில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன,'' என்று, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்கத்தில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது: "தமிழ்ச் செம்மொழியும், அரபியும் ஓர் ஒப்பாய்வு' என்ற தலைப்பிலான ஆய்வரங்கத்தில் பங்கேற்கிறேன். இறைவன் தன்மையில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன. "அல் -இலாஹ்' என்பதே, "அல்லாஹ்' என மருவியது என்பவர். "அல்லாஹ்'வுக்குரிய மூலச் சொல் அல், இல், எல் என்பது, இஸ்லாமிய அறிஞர்களின் முடிவாகும். இச்சொற்கள், தமிழிலும் உள்ளன என்பதை, அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். "எல்லே இலக்கம்' என்பது தொல்காப்பிய சூத்திரம்; "எல்' என்றால், ஒளிக்கடவுள் என்ற பொருள் உண்டு. இதே போன்று, அரபி - தமிழ் இடையேயான ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான 2,000 வார்த்தைகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், திருமணம், வழிபாடு, சடங்கு போன்றவற்றிலும் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன. தமிழ்நெறியில், திருமணத்தின் போது பெண்கள் குலவையிடுவர். இதே போன்ற வழக்கம், இஸ்லாமிய நெறியிலும் பின்பற்றப்படுகிறது. கோவிலில் வலம் வந்து வழிபடுவதை போன்று, மெக்காவிலும் வலம் வந்து வழிபடும் முறையை இஸ்லாமியர் பின்பற்றுகின்றனர். இதே போன்று எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. இவற்றை முன்வைத்தே தமிழுக்கும், அரபிக்கும் உள்ள ஒற்றுமையை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு, காதர்மொய்தீன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: