சனி, 26 ஆகஸ்ட், 2023

சிலிண்டர், விறகு அடுப்பு, கரி.. ரயில்வே ஊழியர்கள் சோதனையில் சிக்காதது எப்படி? வெளியான தகவல்கள்

tamil.oneindia.com  - Vishnupriya R  :மதுரை: ரயிலில் எரிவாயு சிலிண்டர் எடுத்துச் செல்லக் கூடாது என்ற போதிலும் இந்த எரிவாயு சிலிண்டரை கொண்டு சென்றது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 65 க்கும் மேற்பட்டோர் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயில் மூலம் கடந்த 17ஆம் தேதி தமிழகம் வந்துள்ளனர்.
இவர்கள் சுற்றுலா ரயிலில் ராமேஸ்வரம் சென்றுள்ளனர். அந்த ரயில் புனலூருக்கு அதிகாலை 3.48 மணிக்கு வந்துள்ளது. அவர்கள் சென்னை வருவதற்காக அந்த ரயில் நிலையத்தில் இணைப்பு ரயில் வருவதற்காக காத்திருந்தனர். அப்போது ஒரு ரயில் பெட்டியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. குபுகுபுவென ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலியாகிவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மதுரை ஆட்சியர், அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். இறந்தவர்களின் உடல்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விசாரணையில் தீப்பிடித்ததற்கு இவர்கள் ரயிலில் கொண்டு சென்ற சிலிண்டரே காரணம் என சொல்லப்படுகிறது.

இந்த சிலிண்டர் வெடித்ததில்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது தெரியவந்தது. அதாவது ரயில் பெட்டியை பூட்டிக் கொண்டு இவர்கள் சமைத்ததால் தீப்பிடித்தவுடன் அவர்களால் வெளியேற முடியாமல் உடல் கருகி இறந்தனர். இன்று அதிகாலை 4.30 மணிக்கு டீ குடிப்பதற்காக சிலிண்டரை ஆன் செய்துள்ளனர். அப்போதுதான் சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து தீப்பிடித்துள்ளது.

ரயில் பெட்டியை ஏன் பூட்டினார்கள் என காயமடைந்த பயணிகளிடம் கேட்ட போது வடமாநில கொள்ளையர்கள் போல் யாரேனும் ரயில் பெட்டியில் வந்து கொள்ளையடித்துவிடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு கருதியே ரயில் பெட்டியை உள்பக்கமாக பூட்டிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதுவே இவர்களுக்கு வினையாக முடிந்துவிட்டது. இறந்த 10 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

இறந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம் லக்னோவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து ஓய்வு பெற்ற அதிகாரி சிவராஜ் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்த ரயில் விபத்து நடந்ததற்கு எரிவாயு சிலிண்டரே காரணம் ஆகும். பொதுவாக சுற்றுலா ரயில்கள் என்றால் அதில் உள்ள கோச்சுகள் அந்தந்த ரயிலுடன் இணைக்கப்பட்டு பயணம் மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில்தான் இந்த ரயிலும் இணைப்பு ரயிலுக்காக அதாவது நாகர்கோவில் டூ சென்னை செல்லும் ரயிலுக்காக காத்திருந்தது. இந்த ரயில் வந்ததும் சுற்றுலா ரயில் பெட்டி அதனுடன் இணைக்கப்பட்டு சென்னைக்கு செல்வர். இது சுற்றுலா ரயில் என்பதால் இந்த பெட்டிக்கு யாரும் வரமாட்டார்கள். ரயில் 1 கி.மீ. தூரம் சென்றவுடனேயே இந்த சுற்றுலா ரயில் பெட்டிகள் இணைக்கப்படும்.

ரயில் நிலையங்களில் சுற்றுலா ரயில் பயணிகள் ஏறினால் கடுமையான நெரிசல் ஏற்படும் என்பதால் இவர்கள் சைடிங் பகுதியில்தான் ஏற்றப்படுவர். அதனால் இவர்களை சோதனையிட முடியாமல் போயிருக்கலாம். மேலும் ரயிலில் ஆட்சேபனைக்குரிய பொருட்களை கொண்டு செல்லவில்லை என்பதை எழுதி சுற்றுலா நிறுவனம்தான் கையெழுத்திடும். இதனால் அவர்கள் பொறுப்புடன் பயணிகளுக்கு அறிவுறுத்தியிருப்பார்கள் என ரயில்வே ஊழியர்கள் கருதி இருப்பார்கள்.

விதிகளை மீறும் பட்சத்தில் சுற்றுலா நிறுவனம்தான் முழு பொறுப்பேற்கும் என்பதால் பெரிய அளவில் சோதனைகள் நடத்தப்பட்டிருக்காது. இந்த ரயில் இணைப்பு பெட்டிக்காக காத்திருக்கும் போது இந்த விபத்து நடந்ததால் குறைந்த அளவு உயிர் சேதம் நடந்துள்ளது. ஒரு வேளை இணைப்பு பெட்டியில் இணைத்தவுடன் தீவிபத்து ஏற்பட்டிருந்தால் அதிக உயிரிழப்புக் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறு சிவராஜ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: