வியாழன், 24 ஆகஸ்ட், 2023

மதுரை திமுக உண்ணாவிரதம்: பிடிஆர் ஆப்சென்ட்!

மின்னம்பலம் Jegadeesh : மதுரையில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில்  திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு செயலாளரும், அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை.
நீட் தேர்வை கண்டித்தும் ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்தும், தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என திமுக ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி தமிழகம் முழுதும்  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று முடிந்தது.
மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக  மாநாடு நடைபெற்றதால் அன்று திமுக போராட்டம் தள்ளி வைக்கப்பட்டு, இன்று நடக்கிறது.  இந்த உண்ணாவிரத போராட்டம் திமுக இளைஞரணி, மருத்துவரணி,மாணவரணி சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில்  மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநகர செயலாளர் கோ.தளபதி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Image

ஆனால், இந்த போராட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொள்ளவில்லை. நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்த மதுரை மாவட்ட ஆர்ப்பாட்ட பங்கேற்பாளர்கள் தொடர்பான செய்திகுறிப்பிலும், பிடிஆர் பெயர் இடம் பெறவில்லை.

ஆனால், மாவட்ட செயலாளர்களாக இருக்கும் மூர்த்தி, கோ. தளபதி, மணிமாறன் மற்றும் மாணவர் அணி துணைச் செயலாளர் அதலை செந்தில் குமார், ஜி.பி.ராஜா, இன்பா ஏ.என்.ரகு, திலகவதி செல்வராஜ் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.

அதேநேரம் அமைச்சராகவும், கட்சியில்  சொத்து பாதுகாப்பு குழு மாநிலச் செயலாளராகவும் இருக்கும் பிடிஆர் பெயர் இடம் பெறவில்லை.

டி.எம். சௌந்தரராஜனின் நூற்றாண்டை முன்னிட்டு மதுரை, முனிச்சாலை சந்திப்பில்  மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் டி.எம். சௌந்தரராஜன் திருவுருவச் சிலையை கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியிலும் பிடிஆர் கலந்து கொள்ளவில்லை.

அதேபோல்  ஆகஸ்ட் 17 ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடந்த  திமுக தென் மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம், ஆகஸ்டு 18 ஆம் தேதி மண்டபத்தில்  நடைபெற்ற  மீனவர் நல மாநாடு என இரு நிகழ்வுகளிலும் பிடிஆர் கலந்துகொள்ளவில்லை.

ஆனால், பிடிஆரோ கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில், மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வுத் துறையில் தொழில்முறை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற சென்றுள்ளதாகவும், அதற்காக தனக்கு விடுப்பு வழங்கியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று மதுரையில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த உண்ணாவிரத போராட்டத்திலும் பிடிஆர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். அமைச்சர் பிடிஆர் சென்னையில்  இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறினர்.

இராமலிங்கம், ஜெகதீஸ்

 

கருத்துகள் இல்லை: