வியாழன், 27 மே, 2021

வாட்ஸ் அப் வழக்கு.. சமூக ஊடங்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசு

minnambalm : மத்திய அரசு வகுத்துள்ள விதிகள், பயன்பாட்டாளர்களின் தனியுரிமைக்கு எதிராக இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நேற்று (மே25) டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப்பின் மனு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக செய்திகள் வந்தன. ஆனால் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது பற்றிய விவரங்கள் இல்லை.     இந்த வழக்கு குறித்து வாட்ஸப் செய்தி நிறுவனம், “வாட்ஸப்பில் பரப்பப்படும் செய்தியை முதன் முதலில் பதிவிட்டவர் யார் என்று கேட்பது வாட்ஸப் பயன்பாட்டாளர்களின் தனியுரிமையைப் பறிப்பது போன்றதாகும். வாட்சப் தனது பயன்பாட்டாளர்களின் தனியுரிமையை மீறும் வகையிலான, அழுத்தங்களை எதிர்ப்பதில் சிவில் சமூகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள நிபுணர்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும்.

அதேநேரம்... இதற்கிடையில், எங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களுக்கான சரியான சட்ட கோரிக்கைகளுக்கு பதிலளிப்பது குறித்து நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றுவோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

‘தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறை விதிகள்’ 2021 பிப்ரவரி 25 அன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தகவல் தொழில்நுட்ப தளங்களான வாட்ஸப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களுக்கு மூன்று மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று மே 25ஆம் தேதியோடு அந்த அவகாசம் முடிந்துவிட்டது.

மத்திய அரசின் டிஜிட்டல் மீடியா விதிகளில் முக்கியமானதாக, வைரலாகப் பரவும் ஒரு தகவலை முதலில் பதிவிட்டவர் யார் என்பதை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை உள்ளது என்று இந்த நெறிமுறைகள் கூறுகின்றன.

இதை எதிர்த்துதான் வாட்ஸ் அப் வழக்குத் தொடர்ந்துள்ளது. ‘மத்திய அரசின் இந்த நெறிமுறைகள் வாட்ஸப் பயனாளிகளின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் விதிகளை முறியடிக்கும் வகையில் இருப்பதாகவும் தனது மனுவில் வாட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று (மே 26) இந்த விவாகரத்தில் விளக்கம் தெரிவித்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில், “ தனியுரிமைக்கான உரிமையை அரசாங்கம் மதிக்கிறது. வாட்ஸப்பில் வரும் அனைத்து செய்திகளையும் டிரேஸ் செய்ய அரசு முனையவில்லை. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, அரசின் பாதுகாப்பு, வெளிநாட்டு அரசுகளுடனான நட்புறவு, அல்லது பொது ஒழுங்கு, அல்லது தூண்டுதல் தொடர்பான மிகக் கடுமையான குற்றங்களைத் தடுப்பதற்கும், விசாரிப்பதற்கும் மட்டுமே இத்தகைய தேவைகள் உள்ளன. மேலே கூறப்பட்ட அல்லது கற்பழிப்பு, பாலியல் வெளிப்படையான பொருள் அல்லது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களுக்கு மட்டுமே பதிவின் மூலகர்த்தாவை கண்டுபிடிக்கும் அவசியம் இருக்கிறது"என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: