செவ்வாய், 25 மே, 2021

பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்க முடிவு” அமைச்சர் அன்பில் மகேஸ்!

“பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்க முடிவு” : அதிரடி காட்டும் அமைச்சர் அன்பில் மகேஸ்!

kalaignarseithigal.com : சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

“பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்க முடிவு” : அதிரடி காட்டும் அமைச்சர் அன்பில் மகேஸ்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பி.எஸ்.பி.பி பள்ளி நிர்வாகம் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், காவல்துறை இவ்வழக்கை கையில் எடுத்துள்ளது. தீவிர விசாரணை நடத்திய பின்பு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.    மேலும், ஆன்லைன் வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை யாரும் பின்பற்றவில்லை என்பது இவ்விவகாரம் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், மீண்டும் ஒருமுறை வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும்.     

பாலியல் குற்றச்சாட்டு புகார்களை பதிவு செய்ய/விசாரிக்க ஒரு குழு அமைக்க அரசு ஆலோசித்துள்ளது. மேலும் ஒரு நல்ல ஆசிரியரும் இதுபோன்ற புகார்களால் பாதிக்கக் கூடாது என்பதிலும் அரசு உறுதியாக உள்ளது.

மேலும், நாங்களும் இதுப்போன்ற பாதிப்பை சந்தித்து உள்ளதாக முன்னாள் மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அவர்கள் நேரடியாக வந்து புகார் தெரிவித்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் சி.பி.எஸ்.இ பள்ளியில் பணிபுரிவதால், மாநில அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் விசாக கமிட்டி அமைக்க அரசு ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

12ம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய அரசிடம் இன்று வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும். முதலமைச்சரின் ஒப்புதலுக்கு பிறகு அதிலுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி 3 தொகுதிகளாக தேர்வு நடைபெறும், அதில் எந்த மாற்றமும் இருக்க கூடாது என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறுமா என்பது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும்.

ஒரு மாணவர், மாணவி தேர்வுக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் தேர்வு மையத்துக்கு வந்து மீண்டும் வீடு திரும்பும் வரை அரசின் பொறுப்பு முழுமையாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், அதனை எல்லாம் கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றம் கூடி தீர்மானம் நிறைவேற்றிய பின்பு தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: