திங்கள், 24 மே, 2021

4380 வாகனங்கள் ரெடி.. தினமும் வீடுகளுக்கே வரும் காய்கறி, பழங்கள்.. தமிழக அரசு ஏற்பாடு.. முழு விபரம்

TN Government has announced that door delivery of vegetables will be done  during Complete lockdown | முழு ஊரடங்கில் வீடு தேடி காய்கறி, பழங்கள் விற்பனை:  தமிழக அரசு அறிவிப்பு | Tamil Nadu News ...

Shyamsundar -   சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் தினமும் 4380 வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதால் புதிய லாக்டவுன் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் விதிகள் நாளையில் இருந்து அமலுக்கு வருகின்றன.
தளர்வுகள் இல்லாத லாக்டவுன் என்பதால் அடுத்த ஒரு வாரம் மக்கள் காய்கறி வாங்க, மளிகை சாமான் வாங்க கடைகளுக்கு செல்ல முடியாது. காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வீடு தேடி வாகனங்கள் மூலம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அறிக்கை இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் காய்கறிகள், மளிகை பொருட்கள் எப்படி கொடுக்கப்படும் என்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இதற்காக தமிழக அரசு புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள மக்கள் தொகை சுமார் 7 கோடி காய்கறி மற்றும் பழங்கள் தேவை தினந்தோறும் சுமார் 18,000 மெட்ரிக் டன் என எதிர்பாக்கப்படுகிறது.



சேமிப்பு சென்னையை பொறுத்தவரை தினம் தோறும் 1500 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவைப்படும். தமிழகம் முழுவதும் 194 குளிர்பதன இடங்கள் 18,527 மெட்ரிக் டன் கொள்ளளவில் உள்ளன. அதில் தற்போழுது சுமார் 3000 மெட்ரிக் டன் மட்டுமே விளை பொருட்கள் சேமிப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 15527 மெட்ரிக்டன் கொள்ளளவை அருகில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேமித்து வைக்கலாம்.

விநியோகம் இந்த உணவுப்பொருட்கள் எல்லாம் உள்ளாட்சித் துறை மற்றும் கூட்டுறவுத் துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும். சென்னை மாநகரத்தில் மட்டும் அனைத்து மண்டலங்களிலும் 1610 வாகனங்கள் மூலம் தினந்தோறும் 1160 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் 2770 வாகனங்கள் மூலம் 2228 மெட்ரிக்டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து விநியோகம் செய்யப்படும்.

தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல் தெரிந்து கொள்ள 044 2225 3884 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகளை கண்காணித்திட தலைமையகத்தில் தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண்மை விற்பனைத் துறை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகத் தொடரை மேலும் விரிவுபடுத்திட நின்சாகார்ட், வே கூல், V பழமுதிர் நிலையம், தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் இணையம் அஹிம்சா விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் போன்றவற்றையும் ஈடுபடுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக தமிழகம் முழுவதும் நாளை முதல் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை , தினமும் 4380 வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: