ஞாயிறு, 23 மே, 2021

சக வீரரை கொலை செய்த வழக்கு- மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது

 மலையமலர் :   சுஷில் குமார் நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர்.
புதுடெல்லி:  ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான மற்றொரு வீரர் சாகர் தங்கார் (வயது 23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 4ந்தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சாகர் தங்கார் கடுமையாக தாக்கப்பட்டார். பலத்த காயமடைந்த சாகர் தங்காரை அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்தார். இது தொடர்பாக  சாகர் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.



மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட சிலரை போலீசார் தேடி வந்த நிலையில் சுஷில் குமார் தலைமறைவானார். சாகர் உயிரிழந்ததையடுத்து, இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். சுஷில் குமார் தொடர்ந்து தனது இடத்தை மாற்றிக்கொண்டே வந்ததால், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தனர்.

இந்நிலையில், சுஷில் குமாரை டெல்லி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இத்தகவலை போலீஸ் அதிகாரி நிரஜ் தாக்வர் இன்று  உறுதி செய்துள்ளார்.

சுஷில் குமார் நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர். சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் டெல்லி கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்தது. அவரை பிடிப்பதற்கு பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: