சனி, 24 மார்ச், 2018

திருமுருகன் காந்தி :அதிமுக பாஜகவிற்கு கைக்கூலி

Thirumurugan Gandhi : அப்பாவி தமிழர்களைக் கொன்றும், 10664 தமிழர்களை
சிறையிலிட்டும் தமிழர்களை கொடுமைப்படுத்தும் சந்திரபாபு நாயுடு ஆட்சிபுரியும் ஆந்திரா கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க முடியாது..."
என்று சொல்லும் அதிமுகவின் தம்பித்துரை அவர்கள், ஆந்திரவில் நடைபெறும் படுகொலைகளை ஆந்திர அரசு அல்லாது சுதந்திரமாக , நேர்மையாக விசாரிக்க வேண்டுமென்று தேசிய மனித உரிமைக் கமிசன் சொன்னது பற்றியோ.
இப்படுகொலைகளின் குற்றவாளியான சந்திரபாபு நாயுடுவின் வணிக நிறுவனங்கள் தங்குதடையின்றி தமிழகத்தில் இயங்குவது பற்றியோ இதுவரை பேசி இருக்கிறாரா??..
பாராளுமன்ற துணை சபாநாயகாரான திரு.தம்பித்துரை ஆந்திர அரசு செய்யும் இப்படுகொலைகள், சட்டவிரோத சிறை, சித்திரவதைகள் குறித்து ஏதேனும் பாராளுமன்றத்தில் பேசி, தம் கட்சி உறுப்பினர்களைக் கொண்டு முடக்கி இருக்கிறாரா?...
20 தமிழர்களை படுகொலை செய்தபோது அக்குடும்பங்கள் ஒன்றைகூட நேரில் சந்தித்துப் பேசி ஆறுதல் கூற ஒரு அமைச்சரையும் அதிமுக அரசு அனுப்பவும் இல்லை, இது குறித்த சுதந்திரமான விசாரணை இன்று வரை கோரவுமில்லை..

ஆந்திர சிறைகளில் வாடும் அப்பாவி தமிழர்களுக்காக தமிழகத்தின் மனித உரிமை அமைப்புகளும், தோழர். க்ராந்தி சைதன்யா போன்ற ஆந்திர மனித உரிமையாளர்களுமே போராடி வருகின்றனர்.
நிலை இப்படி இருக்க , பாஜகவின் காலில் அடிபணிந்து கிடக்கும் அதிமுகவின் இந்த பேச்சு பாஜகவிற்கு கைக்கூலி வேலைபார்க்கும் கீழ்த்தரமான வேலையேயன்றி வேறென்ன?..
திரு.தம்பித்துரையின் இப்பேச்சு கீழ்த்தரமானது, நேர்மையற்றது.
இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் அதிமுக இதுவரை பாராளுமன்றத்தில் ஆந்திர அரசு செய்யும் அயோக்கியதனம் குறித்தும், அதற்கு உடந்தையாக இருக்கும் வெங்கைய்யா நாயுடு குறித்தும் வாய் திறந்ததில்லை.
பாஜக மோடி அரசை காக்கும் ஒரே நோக்கத்துடன் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புகிறதே ஒழிய, காவிரி மேலாண்மை வாரியம் குறித்தான எந்த அக்கரையும் இவ்வரசிற்கு கிடையாது. காவிரியில் தண்ணீர் வராமல் போனால் மணல் அள்ளும் வணிகத்தை மிகச் சிறப்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் செய்யமுடியும்.
இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் திமுகவினருக்கும் இது லாபமே.
கர்நாடகத்தில் 2016 கலவரத்தில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து இதுவரை எந்த விசாரணை கமிசனும் அமைக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, இது குறித்து இவ்விரு கட்சிகளுமே பேசியதில்லை.
எரிக்கப்பட்ட- தாக்கப்பட்ட தமிழர் கடைகள், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை. இதுபற்றி தமிழ்நாட்டின் அரசு எவ்வித முயற்சியை மேற்கொள்ளவில்லை.
இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்தும் அதிமுக அடிமைகள் , பாராளுமன்றத்தில் நடத்தும் போராட்ட நாடகம் வெட்கக்கேடானவை. தமிழர்களை தலைகுனிய வைக்கும் இந்த அடிமைக்கூட்டம் மக்கள் போராட்டங்கள் மூலம் அகற்றப்பட வேண்டும்.
இந்த போராட்டங்கள் செயலற்று நிற்கும் திமுக போன்றவைகளுக்கும் எச்சரிக்கை செய்வதாக அமையட்டும்.

கருத்துகள் இல்லை: