வியாழன், 22 மார்ச், 2018

புதுச்சேரியில் 3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என ஐகோர்ட் உத்தரவு

புதுச்சேரியில் 3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என ஐகோர்ட் உத்தரவுமாலைமலர் :புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களாக பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை: புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பா.ஜ.கவைச் சேர்ந்த சாமிநாதன், செல்வ கணபதி மற்றும் சங்கர் ஆகிய 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்து ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டு, கடந்தாண்டு ஜூலை மாதம் அவர்களுக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். ஆனால், அவர்கள் நியமனத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு மாத ஊதியம் அளிக்க தடை விதித்தார்.
இதனை அடுத்து, ஆளுநரின் இந்த நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லெட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கு, ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவினை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு, சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கக் கோரி நியமன எம்.எல்.ஏ.-க்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு என 3 வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த இந்த வழக்குகளில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்ட அதிகாரத்தின் படியே 3 பேரின் நியமனம் நடைபெற்றுள்ளது, எனவே, அவர்கள் பேரவைக்குள் செல்வதைத் தடுக்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், அவர்கள் நியமனம் செல்லும் என என தீர்ப்பளித்தனர்.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்தால், அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சாமிநாதன் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: