திங்கள், 22 பிப்ரவரி, 2016

தினமலர்: ம.தி.மு.க.,வை இழுக்க அ.தி.மு.க., முயற்சி...ரகசிய அழைப்பு....?

தி.மு.க.,- - காங்., கூட்டணிக்கு, கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் பிரசாரம் செய்வதற்காக, ம.தி.மு.க.,வை இழுக்க, அ.தி.மு.க., தலைமை காய் நகர்த்துகிறது. கடந்த, 2009ம் ஆண்டு, லோக்சபா தேர்தலுக்கு முன், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற காங்., தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் இருந்தது.அதே நேரம், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் உச்சக்கட்ட போர் நடந்தது. மத்திய அரசு தரப்பில் இருந்து, இலங்கை ராணுவத்திற்கு உதவிகள் செய்வதாக புகார் எழுந்தது. இதை எதிர்த்து, தமிழகத்தில் ம.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இருப்பினும், காங்., - -தி.மு.க., --வி.சி., இணைந்து தேர்தலை சந்தித்தன. இத்தேர்தலில், அந்த கூட்டணிக்கு வெற்றியும் கிடைத்தது.  அம்மாடி பொண்ணுக்கு தங்கமனசு பொங்குது அன்பு மனசு கண்ணுக்கு நூறு வயசுன்னு வைக்கோ பாடினாலும் பாடுவார்...? 
கடந்த, 2011 சட்டசபை தேர்தல் வரை நீடித்த, தி.மு.க., - -காங்., கூட்டணி, அதன்பின் உடைந்தது. வரும் சட்டசபை தேர்தலுக்காக, இக்கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது. இந்த கூட்டணியை கடுமையாக விமர்சித்து வந்த, ம.தி.மு.க., தற்போது, 'மக்கள் நலக் கூட்டணி'யில் இடம் பெற்றுள்ளது.

அ.தி.மு.க.,வை பொறுத்த வரை, இலங்கை தமிழர், விடுதலைப் புலிகள் பிரச்னையிலும், ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்திலும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டது. இதனால் தமிழ் அமைப்புகள் மற்றும் சிலகட்சிகளின் ஆதரவு வரும் தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு கிடைக்கும் என்று, அக்கட்சி தலைமை நம்புகிறது.ஆனால், இந்த பிரசாரத்தை, மக்கள் மத்தியில் கொண்டு சென்று, தி.மு.க., - -காங்., கூட்டணியை விமர்சிப்பதற்கு, அ.தி.மு.க.,வில் சரியான தலைவர்கள் இல்லை. இதனால், இப்பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும், ம.தி.மு.க.,வுடன் கூட்டணி ஏற்படுத்த அ.தி.மு.க., தலைமை விரும்புகிறது. கடந்த காலங்களைப் போலவே, 10, 'சீட்'கள் வரையில், ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கிக் கொடுக்கலாம் எனவும் முடிவெடுத்துள்ளனர். இதற்காக ம.தி.மு.க.,வுக்கு, அ.தி.மு.க., தரப்பிலிருந்து ரகசிய அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-- நமது சிறப்பு நிருபர் --

கருத்துகள் இல்லை: