சனி, 16 ஜனவரி, 2016

யார் கவர்ச்சியாக நடிக்கவில்லை? இனியா...

ஜி. அசோக்:  வாகை சூட வா', "மௌன குரு', "அம்மாவின் கைப்பேசி' என
கதைகளுக்கான கதாநாயகியாகப் பங்கெடுத்து வந்தவர் இனியா. ஆனால், இப்போது கவர்ச்சி கதாபாத்திரங்களில் மட்டுமே உலா வருகிறார். சமீபத்தில் வெளியான "கரையோரம்' படத்துக்கான புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தவரிடம் பேசியதிலிருந்து..நல்ல சினிமாவுக்கான நடிகை என்ற அடையாளம் அவ்வப்போது தென்பட்டு வந்தது... ஆனால், இப்போது...?
"வாகை சூட வா', "மெளனகுரு', "அம்மாவின் கைப்பேசி' ஆகிய படங்களுக்குப் பின் கதாநாயகியாக நடிக்கவில்லை. ஆனால், "வாகை சூட வா' தொடங்கி இப்போது நடித்த "கரையோரம்' படம் வரை... நான் நடித்த எல்லாப் படங்களுமே நல்ல படங்கள். பணத்துக்காக சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. அப்படிப் பார்த்திருந்தால் ஹீரோயினாக எல்லாவிதப் படங்களிலும் நடித்திருக்க முடியும்.
நல்ல கதைகளுக்காகவே கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகக் கூட நடிக்கிறேன்.
இனியா நடிப்பு நன்றாக இருந்தது என்று சொன்னால் போதும், அதற்காக மட்டுமே நடித்து வருகிறேன். கவர்ச்சியாக நடிப்பது குறித்து எனக்கே பயம்தான். ஆனால், விரும்பி வரும் இயக்குநர்களை ஏமாற்ற முடியவில்லை. அடுத்து தமிழில் மூன்று படங்களில் நடிக்கப் பேசிக் கொண்டிருக்கிறேன். அது எனக்கான அடையாளங்களை நிச்சயம் மீட்டெடுக்கும்.
கவர்ச்சியாக நடிக்கும்போது என்ன மாதிரியான மனநிலை இருக்கும்...?
எல்லா நேரங்களிலும் ஆர்ட் படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்க முடியாது. என்னைப் பொருத்தவரையில் எல்லா வேடங்களும் சவால்தான். காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ், கிளாமர் என்று எல்லா விஷயங்களும் கலந்ததுதான் சினிமா. சினிமா என்பது பொழுதுபோக்கு  அம்சம் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வாய்ப்புகளைத் தக்க வைப்பதற்காகவே கிளாமருக்கு மாறியது மாதிரி தெரிகிறது...?
எல்லாவித வேடங்களிலும் நடிக்கத்தான் ஆசை. கிளாமருக்கு மாறியதற்காக எப்போதும்  நான் வருத்தப்பட்டதில்லை. நல்ல சினிமாக்களில் இருந்துவிட்டு, இப்போது கிளாமராக நடிப்பது பரிசோதனை முயற்சியாகத்தான் தெரிகிறது. வாய்ப்புகள் எப்போதும் எனக்குக் குறையவில்லை. தமிழைவிட மலையாளத்திலும், தெலுங்கிலும் பிஸியாக இருக்கிறேன்.
முன்னணி இடம்... தொடர் படப்பிடிப்புகள்... என்பதுதான் ஒரு நடிகைக்கான அதிகப்பட்ச கனவாக இருக்கும்... இத்தனை ஆண்டுக்குப் பின்பும் அப்படி ஓர் இடம் உங்களுக்குக் கிடைக்கவில்லையே...?
உங்களின் வருத்தத்துக்கு நன்றி. ஆனால், எனக்கு அந்தக் கவலையில்லை. பரபரவென படங்கள் இல்லாவிட்டாலும் எனக்கென ஓர் இமேஜுக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறேன். நான் கவர்ச்சியாக நடிப்பதைப் பற்றி நீங்கள் பெரிதாக எடுத்துப் பேசுகிறீர்கள். யார் இங்கே கவர்ச்சியாக நடிக்கவில்லை. வாய்ப்புகளைத் தக்க வைப்பதற்காக எல்லோருமே கவர்ச்சியாகத்தான் நடிக்கிறார்கள். இனியா என்று சொன்னால் தமிழ்நாட்டில் எல்லா ரசிகர்களுக்கும் தெரிகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். இதுவே பெரிய விஷயம்தான்.


 
சினிமாவில் நெருங்கிய நண்பர்கள் யார்...?
எல்லாரும்தான். விமல் முதல் விஷால் வரை... எல்லோருமே எனக்கு நண்பர்கள்தான். என்னுடைய படங்களைப் பார்த்து மட்டுமில்லை, அவர்களுடைய படங்களைப் பற்றியும், சமீபத்தில் வெளியான படங்கள் பற்றியும்கூட பேசிக் கொள்வோம்.
சென்னையில் அடிக்கடி பார்க்க முடியவில்லையே...?
நான் பி.பி.ஏ., மூன்றாவது ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். ஷூட்டிங் இல்லாத நாள்களில் அதற்கான வகுப்பு, சிறப்பு வகுப்பு என கேரளத்திலேயே இருந்து விடுவேன். கதை கேட்பதாக இருந்தால்கூட, செல்லிடப்பேசியில்தான் கேட்கிறேன். அதனால்தான் சென்னையில் பார்க்க முடிவதில்லை.
கல்யாணம்...?
காதலில் ஆர்வம் இல்லை. நிச்சயமாக அப்பா, அம்மா பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். dinamani.com

கருத்துகள் இல்லை: