திங்கள், 11 ஜனவரி, 2016

ஒளிப்பதிவாளர் சங்க தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான அணி வெற்றி

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராக பி.சி.ஸ்ரீராம் தேர்வு செய்யப்பட்டார். தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சங்கத்துக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை(ஜன.10) நடைபெற்றது. இதில் ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், ஏ.கன்னியப்பன், ஜி.சிவா ஆகியோர் தலைமையில் 3 அணிகள் போட்டியிட்டன. தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.
மொத்தம் உள்ள 912 வாக்குகளில் 704 வாக்குகள் பதிவாயின. வாக்குகள் மாலை 6 மணிக்கு எண்ணப்பட்டன. முடிவில் பி.சி.ஸ்ரீராம் தலைமையில் போட்டியிட்ட பெரும்பாலான நிர்வாகிகள் வெற்றி பெற்றனர். மொத்தம் 555 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற பி.சி.ஸ்ரீராம் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியைச் சேர்ந்த கண்ணன், இளவரசன், பாலமுருகன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: