வெள்ளி, 18 செப்டம்பர், 2015

தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்! பழனிச்சாமியின் குவாரிகளில் நரபலி அரங்கேற்றம்(படங்கள்)

மதுரை மாவட்டம், மேலூர் அருகே சின்னமலம்பட்டியில் ஏற்கனவே தோண்டப்பட்ட இடத்தில் மீண்டும் தோண்டியபோது மேலும் இரண்டு பேரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குவாரிகளில் நரபலி கொடுத்து அவர்களின் உடல்களை சின்னமலம்பட்டியில் இருக்கின்ற மயானத்தில் புதைத்திருப்பதாக எழுந்த புகாரில் இரண்டாம் கட்டமாக தோண்டும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்திருக்கிறது. இரண்டாவது கட்டமாக தோண்டும் பணியில் இரண்டு எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீண்டும் நாளையும் (சனிக்கிழமை) இதேபோன்று தோண்டும் பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சின்னமலம்பட்டியில் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது 4 பேரின் எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டன. அப்போது தோண்டுப்பட்ட ஆழம் 5 அடி மட்டுமே இருந்த காரணத்தினால், 10 அடிக்கு குறையாமல் தோண்ட வேண்டும் என்று சகாயம் குழு கேட்டுக்கொண்டது;அதன் அடிப்படையில் இன்று காலை தோண்டும் பணி தொடங்கியது. இதனை சகாயம் பார்வையிட்டார். மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இந்தப் பணியில் இரண்டு எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன. சின்னமலம்பட்டியில் மொத்தம் 6 எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த எலும்புக் கூடுகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும். நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னர் இது யாருடைய எலும்புக் கூடு என்று ஆய்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. nakkheeran.in


கருத்துகள் இல்லை: