செவ்வாய், 20 ஜூன், 2017

மதுரை சக மாணவர்கள் தாக்கி மாணவர் மரணம்?

மதுரையில் பள்ளிக்குச் சென்ற மாணவர் மர்ம மரணம்?
மின்னம்பலம் : மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த சிறை வார்டன் நாகேந்திர பாண்டியனின் மகன் சுந்தர பாண்டியன். மதுரை நரிமேட்டில் இருக்கும் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்தார். அதன்பின்னர், கடந்த ஜூன் 17ஆம் தேதி, அதே பள்ளியில் ப்ளஸ் ஒன் வகுப்பில் சேர தனக்கு, எந்த குரூப் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் காணத் தந்தையுடன் பள்ளி சென்றிருக்கிறார்.
பின் அவருக்கு வரலாறு குரூப் கிடைத்ததைப் புரிந்துகொண்டு, பள்ளியில் சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அதைக்கண்டு, சுந்தர பாண்டியனின் தந்தையும் நண்பர்கள் தானே என எண்ணி, அவர்களிடம் தன் மகனை விட்டுவிட்டு வந்திருக்கிறார். பின்னர் மதியபொழுதில், வேறு ஒருவரோடு பைக்கில் வீட்டுக்கு வந்த சுந்தர பாண்டியனுக்கு, முகங்கள் எங்கும் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பின்னர் சிறிது நேரத்தில் சுருண்டுவிழுந்த சுந்தர பாண்டியன், ஆட்டோவில் ஏறி தன் தாயுடன் ஹாஸ்பிட்டலுக்குச் செல்லும் வழியில் இறந்தான். இந்த இறப்பு குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், இதில் மாணவர் சுந்தர பாண்டியன் சகமாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு இறந்தானா என்ற பார்வையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பள்ளியில் இதற்கு முன்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை மூன்று பேர் சேர்ந்து தாக்கியதற்கு, பள்ளி நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்பள்ளியில் படித்த மாணவர் சுந்தர பாண்டியனின் மர்ம மரணமும், மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: