வெள்ளி, 23 ஜூன், 2017

மக்களை ஒட்டச் சுரண்ட ஜி.எஸ்.டி : தமிழக அரசு ஒப்புதல்

மிழக சட்டப்பேரவையில், எடப்பாடி அரசு, கடந்த 19-06-2017 அன்று சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றியது. மக்களின் மீது பெரும் வரிச் சுமையாக விழும் இம்மசோதாவிற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அனைத்து எதிர்ப்புகளையும் துச்சமாகப் புறந்தள்ளி இம்மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது பாஜகவின் எடுபிடி அரசு.
வருகின்ற ஜூலை 1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படவிருக்கும் ஜி.எஸ்.டி. வரியின் மூலம் உணவுப் பொருட்களின் விலை சுமார் 42% வரை உயர வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு அத்தியாவசியமான 1,211 பொருட்களுக்கு இதுவரை தமிழகத்தில் விதிக்கப்பட்டு வந்த 5% மதிப்புக் கூட்டு வரி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. மூலம் சுமார் 5% முதல் 28% வரை உயர்த்தப்படவிருப்பதாகவும், தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரியிலிருந்து விலக்கு பெற்ற 589 பொருட்களில் 509 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சாதாரண மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களை வரி விலக்கிலிருந்து நீக்கவும், வரியை உயர்த்தவும் செய்துள்ள மோடி அரசு, பூணூல், விபூதி, ருத்திராட்சம், துளசி காந்த மாலை, பஞ்சகவ்யம், பஞ்சாமிருதம், திருப்பதி லட்டு, தலை முடி ஆகியவற்றிற்கு முழுவதுமாக வரி விலக்கு அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் இது தொடர்பான விவாதத்தில் பேசியிருக்கும் அமைச்சர் ஜெயக்குமார், ஜி.எஸ்.டி. வரியால் வணிகர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிவர்த்தி செய்யப்படும் என்று பகிரங்கமாக புளுகியிருக்கிறார். ஜெயா தலைமையிலான அதிமுக கொள்ளைக் கும்பலால் ஒட்டச் சுரண்டப்பட்டு ஏற்கனவே, பல இலட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ள தமிழகத்திற்கு, பாஜகவையும், அதன் அடிமைகளான எடப்பாடி கும்பலையும் அடித்து விரட்டினால் தான் விடிவுகாலம் ஏற்படும் vinavu.com

கருத்துகள் இல்லை: